Skip to main content

22 இல்லை 250 தலைவர்கள் ஒன்று கூடினாலும் முடியாது: வானதி சீனிவாசன் பேட்டி

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
Vanathi Srinivasan



மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் நடைப்பெற்ற கூட்டத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் 22 பேர் பங்கேற்று பேசினர். 
 

மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது. மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று மம்தா பானர்ஜி பேசினார். 
 

பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். மோடிக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு புதிய பிரதமர் கிடைப்பார். எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வர்கள் என்று அந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசினார்கள்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், 
 

இவர்களை ஒன்றிணைக்கக்கூடிய கோஷமாக மோடி எதிர்ப்பு கோஷம், பாஜக எதிர்ப்பு கோஷம் இன்று இருக்கலாம். ஆனால் இவர்களுடைய நம்பகத்தன்மைப் பற்றி, குடும்பக் கட்சிகளைப் பற்றி மக்கள் நன்கு அறிவார்கள். இங்கிருந்துகூட திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்துவிட்டு மம்தா பானர்ஜி அழைத்தவுடன் அங்கு செல்கிறார் என்றால், இவர்களைப் பொறுத்தவரை மோடி எதிர்ப்பு என்பதுதான் பிரதானமாக இருக்கிறதே தவிர, இந்த ஆட்சிக்கு மாற்றாக ஒருங்கிணைந்த ஒரு வலுவான ஆட்சியைத் தரக்கூடிய சிந்தனை என்பது இல்லை.
 

வெறுப்பின்பால் ஏற்பட்ட அரசியல் என்பது ஒருபோதும் இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது இல்லை. ஒரு தனிநபரை சுற்றி மட்டுமே இந்திய அரசியலை மாற்ற முடியுமா? என அவர்கள் யோசிக்கிறார்கள். அந்த நோக்கத்திலேயே அவர்கள் சிதையுண்டுபோவார்கள். 
 

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெறும் வெற்றிகளாகட்டும், வாக்கு சதவீதம் உயர்ந்ததாகட்டும் அல்லது பாஜகவுக்கு அங்கு மக்கள் கொடுக்கக்கூடிய ஆதரவும், மம்தா பானர்ஜியை கலங்கடிக்கிறது. அவர் பாஜகவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டின் வாயிலாக தன்னுடைய ஆட்சியில் நடக்கின்ற அவலங்களை மறைக்கப் பார்க்கிறார். சட்டம் ஒழுங்கில் இருந்து ஆரம்பித்து மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு ஒரு தோல்வியுற்ற அரசாங்கமாக இருப்பதை மறைப்பதற்காக மற்ற தலைவர்களை அழைத்து அங்கு ஒரு நாடகத்தை நடத்தப்பார்க்கிறார்.
 

பாஜக கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கிறார். மேலும் பல மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி வருகின்றன. பாஜகவின் கூட்டணி பலம் குறைகிறதா?
 

தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. இங்கு ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு, ஸ்டாலின் அங்கு செல்கிறார். பாஜகவுக்கு எதிராக இன்று கூட்டணி அமைத்துக்கொண்டிருப்பவர்களுக்குள் என்ன குழப்பம் ஏற்படும் என்று தெரியாது. இன்று கூடிய தலைவர்கள் தேர்தல் வரை ஒன்றாக இருப்பார்களா என்பதும் தெரியாது. நம்பகத்தன்மை இல்லாத தலைவர்களெல்லாம் ஒன்றுகூடி ஒரு தனிநபருக்கு எதிராக, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கூட்டணி அமைப்பது என்பது இந்தியாவில் வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.
 

பாஜக தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும்கூட மற்ற கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறது. எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் எந்தக் காரணத்திற்காக வெளியே சென்றிருக்கிறார்கள் என்பதை அந்தந்த மாநில மக்கள் நன்கு அறிவார்கள். கூட்டணியின் எண்ணிக்கை மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போவதில்லை. 
 

22 தலைவர்கள் பங்கேற்றிருப்பதால் இந்தக் கூட்டம் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்கிறார்களே?
 

பாஜகவுக்கு எதிரான ஒரு தாக்கத்திற்கு ஒரு முயற்சியை இவர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால் இன்னொருபுறம் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். 22 தலைவர்கள் இல்லை, 250 தலைவர்கள் ஒன்றுகூடி நின்றாலும் பிரதமர் மோடிக்கு இவர்கள் ஈடாகமாட்டார்கள். இந்த ஐந்து வருட காலத்தில் பிரதமர் செய்திருக்கின்ற ஒவ்வொரு தனித் தனி சாதனைகளையும் பட்டியலிட்டு நாங்கள் கொடுக்கிறோம். இதற்கு மாற்றாக என்னவெல்லாம் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில், அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் பட்டியலிடட்டும். இந்த மாதிரியான ஆரோக்கியமான போட்டிக்கு வந்தால் பாஜக அதற்கு தயாராக இருக்கும். ஆனால் இல்லாத கற்பனை கதைகளை கூறிக்கொண்டு மக்களை திசைத்திருப்ப பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.