Skip to main content

லட்சத்தீவு விவகாரம்: அதிரடி தீர்மானத்தை நிறைவேற்றியது கேரளா!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

kerala assembly

 

இந்தியாவில் மிகச் சிறிய நிலப்பரப்பு கொண்ட யூனியன் பிரதேசம் லட்சத்தீவு. 65,000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட இந்த தீவுக்கூட்டத்தில் 98 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். பெரும்பாலானோர் பேசுகின்ற மொழி மலையாளம். தொடக்கக் காலங்களிலிருந்தே லட்சத்தீவுக்கும் கேரளாவுக்கும் இடையேயான உறவென்பது வலுவானதாகவே இருந்துவருகிறது. மலையாள மொழி மட்டுமின்றி ஆங்கிலமும் அதிகளவில் பேசப்படுகிறது. அதனுடன் திவேகி, ஜெசெரி உள்ளிட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் மீன்பிடி தொழிலையும், மீன் பதப்படுத்தும் தொழிலையும், சுற்றுலாவையும் நம்பிதான் இங்கு இருக்கின்றனர்.

 

யூனியன் பிரதேசமான லட்சத்தீவு பகுதி, மத்திய அரசால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரியினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிர்வாக அதிகாரி பொறுப்புக்கு வழக்கமாக ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள்தான் நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை ஓர் அரசியல்வாதி இப்பகுதியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதே பிரச்சினைகளின் தொடக்கப்புள்ளி. லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஐபிஎஸ் தினேஷ்வர் சர்மா திடீரென உயிரிழக்க, அவருக்குப் பதிலாக பிரஃபுல் கோடா படேல் என்பவரை இப்பொறுப்பில் நியமித்தது மத்திய அரசு.

 

பிரஃபுல் கோடா படேல் பதவியேற்றவுடன் கரோனா தடுப்பூசி விதிமுறைகளில் கைவைத்தார். இதனால் அங்கு கரோனா பரவல் அதிகமானது. பள்ளிகளில் வழங்கப்பட்டுவந்த அசைவ உணவு நிறுத்தப்பட்டது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்தத் தீவில் மாட்டுக்கறியைத் தடை செய்யும் வகையில் சட்டவரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. குற்றங்கள் குறைவான இந்த தீவில் குண்டாஸ் சட்டத்தை அமல்படுத்த சட்டவரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. இது சட்டமானால் எந்தக் காரணமும் கூறாமல், ஒருவரை ஒருவருடம்வரை தடுப்புக்காவலில் வைக்கலாம். ஏற்கனவே மக்கள் தொகை குறைவான லட்சத்தீவில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் ஏற்கனேவே கொதித்திருந்த லட்சத்தீவு மக்களுக்கு மேலும் ஒரு இடியாக லட்சத்தீவு மேம்பாட்டு சட்டவரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வரைவு சட்டமாகும் பட்சத்தில் யார் நிலத்தையும், எந்த நிலத்தையும் அரசு கையகப்படுத்தலாம். இது அந்த மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது பெரிய அளவில் பிரஃபுல் கோடா படேலுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அவரைத் திரும்பப் பெற வேண்டுமென நாட்டிலுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. 

 

கேரளாவிலிருந்தும்பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரி கோரிக்கைகள் எழுந்தன. அம்மாநிலத்தின் அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள்வரை லட்சத்தீவு மக்களுக்கு ஆதராகவும், பிரஃபுல் கோடா படேலுக்கு எதிராகவும் குரல்களை எழுப்பினர். இந்தநிலையில் கேரளா சட்டமன்றத்தில், லட்சத்தீவு மக்களுக்கு ஒற்றுமையைத் தெரிவித்தும், பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் லட்சதீவு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 

முன்னதாக இந்த தீர்மானத்தை முன்மொழிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "லட்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். மக்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவது மத்திய அரசின் பொறுப்பு. மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் நிர்வாகி அகற்றப்பட வேண்டும். லட்சத்தீவு மக்களின் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.