ஆந்திரா மாநிலம் பெட்டகடபூர் காவல் நிலையத்திற்குத் திடீரென அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் ஐந்து சிறுவர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் விசாரிக்கவே, அதில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனைக் காட்டி, அந்தச் சிறுவன் தன்னுடைய பென்சிலை எடுத்துவைத்துக்கொண்டு தர மறுப்பதாக கூறியுள்ளான்.
உடனே காவல்துறையினர், நாங்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்க, அதற்கு அந்தச் சிறுவன், வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென கூறியுள்ளான். இதனைக் கேட்டு அங்கிருந்த காவல்துறையினருக்குச் சிரிப்பு வந்ததோடு அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் சிறைக்குச் சென்றால், அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் புகார் அளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி புகார் அளிக்க வந்த சிறுவனைக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இதன்பின்னர் காவல்துறையினர், இருவருக்கும் அறிவுரை வழங்கி, குற்றஞ்சாட்டிய சிறுவனையும், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறுவனையும் கைகுலுக்க வைத்து அனுப்பிவைத்துள்ளனர். மேலும், காவல்துறையினர் இதனை வீடியோ பதிவும் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பெட்டகடபூர் காவல் நிலையம், பொதுமக்களுடன் நல்லுறவைப் பேணியதற்காக ஆந்திராவின் சிறந்த காவல் நிலையமாக கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.