andhra court orders government to built capital in amaravathi

கடந்த 2014 ஆம் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆந்திரா மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டதோடு, தெலங்கானாவின் நிரந்தர தலைநகராக ஹைதராபாத் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு புதிய தலைநகரை அமைக்கும் பணிகளில் மும்முரமான ஆனஅப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. குண்டூர்-விஜயவாடா இடையே அமராவதியில் தலைநகரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை அரசுக்கு வழங்கினர். அதனைத்தொடர்ந்து, அங்கேயே தற்காலிகமாகத் தலைமைச் செயலகம், சட்டப் பேரவை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு பேரவை கூட்டங்களும் நடத்தப்பட்டன.

Advertisment

ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், ஆந்திராவுக்கு மூன்று தலைநகர்களை அமைக்க உள்ளதாகவும், அதன்படி, அமராவதியில் சட்டப்பேரவையும், கர்னூலில் உயர்நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் செயல்படும் எனவும் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஜெகன்மோகன் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்நிலையில், தலைநகரை அமராவதியில் தான் அமைக்க வேண்டும் என நிலம் கொடுத்த விவசாயிகள் 70 பேர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். மேலும், சுமார் இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில், விவசாயிகள் தொடர்ந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், "விவசாயிகள் மற்றும் முந்தைய அரசுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இன்னமும் 6 மாதங்களில் அமராவதியில் தலைநகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளானை நிறைவு செய்ய வேண்டும். நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஒப்பந்தத்தில் கூறியபடி, வீட்டு மனைப் பட்டாக்களையும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து பெற்ற நிலங்களைத் தலைநகர் அமைப்பதற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். தற்போது அமராவதியில் உள்ள எந்த அரசு அலுவலகத்தையும் வேறு ஊர்களுக்கு மாற்றக்கூடாது. விவசாயிகளுக்கு வழக்கு செலவாக 50 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கிட வேண்டும்" எனப் பரபரப்பு தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தின் இந்த தீப்பின் மூலம் ஜெகன்மோகனின் நீண்டகால கனவு தகர்ந்துள்ள நிலையில், விவசாயிகள் இத்தீர்ப்பினை கொண்டாடி வருகின்றனர்.