அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின் போது சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசியிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து மாதரசியிடம் சாட்டை துரைமுருகன் பிப்ரவரி 7 ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனக் கூறி சம்மனை கொடுத்துவிட்டு சென்றனர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாவும் கூறப்பட்டது.
அதே போன்று சிவகங்கையில் தென்னகம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஷ்ணு பிரதாப் என்பவர் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடைபெற்றது. அவரது வீட்டில் இருந்து செல்போன் மற்றும் 7 புத்தகங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன் ஆகியோர் தங்கள் தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆஜராகி உள்ளனர். இவர்கள் இருவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.