இந்த சூழலில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவாரண தொகையாக அரசு வழங்கவுள்ள ரூ. 6 ஆயிரத்தை உயர்த்தி ரூ. 12 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில்,“மத்திய அரசு ஒதுக்கியுள்ள 450 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது. பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ள 6 ஆயிரம் ரூபாய் போதாது என விமர்சிக்கும் எதிர்க்கட்சி தலைவர், டெல்லியில் உள்ள மத்திய அரசின் தங்கள் நண்பர்களிடம் வலியுறுத்தி கூடுதல் நிதியை பெற்றுத்தர வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். அதன்படி10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். .