ADVERTISEMENT

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக குரல் கொடுத்த வேட்பாளரின் நிலை?

12:37 PM May 15, 2018 | Anonymous (not verified)

ஒட்டுமொத்த தமிழகமும் கர்நாடகத்தில் இருந்து நீர்தர வேண்டும் என்ற கோரிக்கையை பலமாக முன்வைத்தபோது, கர்நாடக அரசு நீர் தர மறுத்தது. இருப்பினும், கர்நாடக மாநிலத்தில் மேலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் தர்ஷன் புத்தனையா, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவில் 15 ஆண்டுகளாக மென்பொருள் நிறுவனம் நடத்திவந்தவர் தர்ஷன் புத்தனையா. இவர் மேலக்கோட்டை தொகுதியில் சுவராஜ் இந்தியா என்ற கட்சியின் பெயருடன் போட்டியிட்டார். அரசியலில் களம்காண்பதற்காக அமெரிக்க தொழிலைக் கைவிட்ட தர்ஷன் புத்தனையா, உள்ளூர் மக்களின் செல்வாக்கு முழுமைக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். இத்தனை ஆதரவுகளும் தர்ஷனுக்குக் கிடைக்கக் காரணம் அவரது தந்தை புத்தனையாதான். 2013ஆம் ஆண்டு மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலக்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், சில மாதங்களுக்கு முன்னர் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டதைக் கண்டு நெகிழ்ந்த தர்ஷன் அரசியல் மூலம் விவசாய மக்களுக்கு உதவவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

புத்தனையா விவசாயிகளிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். விவசாயத்தை முன்னிறுத்தியே தனது அரசியலையும் அவர் மேற்கொண்டார். தனது தந்தையின் அரசியல் நோக்கம் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்கள் பிரதிபலித்த நிலையில், 15 ஆண்டு கால அமெரிக்க வாழ்க்கையைத் துறந்து தேர்தலில் களம்கண்டார் தர்ஷன். காவிரி விவகாரம் தொடர்பாக தர்ஷன், ‘காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இருமாநில விவசாயிகளின் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அதன்மூலமாகவே பல பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும் முடியும்’ என பேசியிருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் போட்டியிட்ட மேலக்கோட்டை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது. தற்போதைய நிலையில், அந்தத் தொகுதியில் ம.ஜ.க. வேட்பாளர் சி.எஸ்.புத்தராஜூ 65,144 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். தர்ஷன் புத்தனையா 44,590 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். அந்தத் தொகுதியில் பா.ஜ.க. உட்பட எந்தக் கட்சிக்கும் ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கிடைக்கவில்லை. தர்ஷன் புத்தனையாவிற்கு ஆதரவாக காங்கிரஸ் தனது வேட்பாளரை மேலக்கோட்டை தொகுதியில் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT