Skip to main content

லிங்காயத்தும் கர்நாடகாவும் !  கர்நாடக தேர்தல் அரசியல் பின்னணி #3!  

Published on 15/05/2018 | Edited on 15/05/2018

இப்படி, சைவம் வைணவம் ஒரு பக்கமும் புத்தம், சமணம் இன்னொரு பக்கமும் வளர்ந்த நிலையில் சைவத்திலும், வைணவத்திலும் உட்பிரிவுகள் உருவாகத் துவங்கின. எல்லா மதத்துக்குள்ளும் தீவிர மத பற்றாளர்கள், மிதமான மத பற்றார்கள் என்கிற இரண்டு வகை உண்டு. சைவ சமயத்திலும் இந்த இரண்டு வகை இருந்தனர். ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்ததும் சைவத்துக்குள் தீவிர மத பற்றாளர்கள் போக்கு அதிகரித்தது. அவர்கள் அதிகமான சடங்குகளை செய்தார்கள், சாமியை வணங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்தார்கள், பலி கொடுப்பது, யாகம் நடத்துவது என்று தீவிரம் அதிகரித்தது.  இவர்கள் மதத்துக்குள் தீவிரமானவர்கள். 'இதற்கு முன்பு இப்படியெல்லாம் இல்லையே?' என கேள்வி கேட்பவர்களும் இருந்தனர். அவர்கள் மதத்தில் மிதமானவர்கள். பிற்காலத்தில் அது காஷ்மீர் சைவம், கர்நாடகா சைவம் என உருவானது. ஆரியர்கள் காஷ்மீர் சைவமாகினர். தென்னிந்தியர்கள் கர்நாடகா சைவ சமயத்தினரானர்கள். அவர்களே வீரசைவ சமயத்தினர் எனவும் அழைக்கப்பட்டனர்.   



பசவண்ணா...

 

basavanna



இதில் கர்நாடகா சைவத்தில் உருவானவர்தான் பசவண்ணா. பசவர் என்கிற பெயருடைய இவர் பிரமாண சமுதாயத்தை சேர்ந்தவர். சாளுக்கிய மன்னரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். சாளுக்கியர்கள், இந்தியாவின் தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பகுதியை ஆண்டவர்கள். இவர்களது காலம் கிபி 6ஆம் நூற்றாண்டில் தொடங்கி 12ஆம் நூற்றாண்டில் முடிகிறது.

இந்த பசவண்ணாதான் சைவ சமயத்தில் இருந்த சாதிவெறி, உருவவழிபாடு, உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்கத்தை எதிர்த்து போராடினார். அக்கால புரட்சியாளராய் விளங்கினார். பசவண்ணரின் கருத்துக்கள் புரட்சிகரமானதாகவும், பகுத்தறிவு மிக்கதாகவும் இருந்துள்ளது. அவர் சமூக அரசியல் சீர்திருத்தங்களை 12ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் நிகழ்த்தியுள்ளார். அவருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பல்வேறு சாதி மக்கள் அவருடைய 'சரணா' இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அந்த இயக்கம் பசவா இயக்கம் என்றும் அழைக்கப்பட்டது.

இவர்கள் தங்களோடு எப்போதும் லிங்கத்தை உடன் வைத்திருக்க வேண்டும், லிங்கத்தை கைகளில் வைத்து பூஜிக்க வேண்டும், குழந்தை பிறந்ததும் லிங்கத்தை கழுத்தில் தொங்கவிட வேண்டும் என்பது பசவண்ணா உருவாக்கிய கோட்பாடுகள். அதோடு அசைவம் உண்ணக்கூடாது, மது அருந்தக்கூடாது போன்றவை பசவண்ணா உருவாக்கிய கொள்கைகள். சாதிகளை வைத்து மக்கள் பிரியக்கூடாது என்றார். விதவை திருமணத்தை ஆதாரித்தார், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்றார். இந்த முற்போக்கு கருத்துக்களால் பசவண்ணா பின்னால் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இவர்களே லிங்காயத்தார் என அழைக்கப்படுகின்றனர். தீவிர சைவ பிராமணர்களும் பசவா இயக்கத்தில் இணைந்தனர். அவ்வாறு இணைந்த அனைவரும் லிங்காயத்துகளாக மதமாற்றமடைந்தனர். லிங்காயத்து மக்கள், இருமுக லிங்கத்தையே வணங்குவார்கள். அதில் ஒரு முகம் கிழக்கு பார்த்தும், மற்றொரு முகம் மேற்கு நோக்கியும் காணப்படும். விருட்சி என்கிற பூவை கொண்டு அர்ச்சனை செய்பவர்கள், தங்களுடன் இருமுகம் கொண்ட ருத்திராட்சமாலையை அணிந்துகொண்டு இருப்பார்கள்.

16ஆம் நூற்றாண்டுகளில் பசவா இயக்கத்தில் சிலர் தங்களது வழிபாட்டு சடங்குகளை லிங்காயத்து சமூகமாக மாறியப்பின்பும் செய்ய துவங்கினார்கள். இதனை வீரசைவத்தை பின்பற்றியவர்கள், லிங்காயத்துக்களும், சடங்குகளை செய்கிறார்கள், அவர்களும், நாங்களும் ஒன்றே எனச்சொல்லி லிங்காயத்துக்களை தங்களுக்குள் ஐக்கியமாக்க நினைத்தார்கள், பேசினார்கள், எழுதினார்கள். அதாவது, வீரசைவர்களின் குருக்கள் மூலமே பசவண்ணர் லிங்காயத்து மதத்தைத் தோற்றுவித்தார் என்றும் வீரசைவர்கள் வாதிட்டு வந்தனர். வீரசைவர்களின் இக்கூற்றுகளை உண்மையென்று நிறுவ எந்தவொரு நிரூபணமும் வரலாற்றிலிருந்து லிங்காயத்துகளுக்கு கிடைக்கவில்லை. சாதியை விட்டொழிந்த லிங்காயத்து ஆதினங்கள் இதனை எதிர்க்க துவங்கின. 


 

modi respect basavanna




வீரசைவமும் லிங்காயத்தும் முற்றிலும் வேறு வேறானவை. வீரசைவர்கள் என்பவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவ சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டு, அதை பின்பற்றுபவர்களாவர். வீரசைவம் வேத சாஸ்திர, புராணங்கள், சாதி மற்றும் பாலின வித்தியாசங்களை ஏற்றுக் கொண்டு அவற்றைப் பின்பற்றுவதாகும். லிங்காயத்து மார்க்கத்தைத் தோற்றுவித்த பசவண்ணர், சாதி மற்றும் பாலின வேறுபாடுகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமின்றி, இந்து மதத்தின் உட்கருவான சனாதன தர்மத்திற்கு மாற்றான சித்தாந்தங்களை முன்மொழிந்தார். வர்ணாசிரம அடிப்படையிலான சாதிய சமூக அமைப்பினையும், சாதிய அடுக்குமுறை மற்றும் சொர்க்கம், நரகம், பாவம், புண்ணிம் போன்றவற்றையும் நிராகரித்தார். அதோடு, சாதிய அடுக்குமுறையை தகர்க்க ஒரேயிடத்தில் அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சமபந்தி முறையை வளர்த்தார், மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் பேசினார், எழுதினார். இவைகளை சமஸ்கிருத மொழியில் சொல்லாமல் கன்னட மொழியிலேயே இயற்றினார். இதனை சைவ மத தீவிர பற்றாளர்கள் தங்களுக்கு தோதான ஆட்சி வந்தபோது தேடித்தேடி அழித்தனர். அப்படியும் ஆயிரக்கணக்கில் அவர் எழுதிய இலக்கிய பாடல்கள் பதுக்கிவைக்கப்பட்டன. அவைகளை தற்போது ஆதாரங்களாகக் காட்டித்தான் நாங்கள் வேறு, அவர்கள் வேறு, அவர்களை எங்களுடன் இணைக்ககூடாது என்று லிங்காயத்துக்கு பிரிவின் மடாதிபதிகளின் கோரிக்கை. அந்த கோரிக்கைதான் சித்தராமையாவால்  நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அது முழுமையாக நிறைவடையவில்லை. 

 

 


இன்று உலகத்தின் மூன்றாவது பெரிய மதமென்றால் அது இந்து மதம்தான். உலகின் பெரிய மதமான கிருஸ்த்தவம், இஸ்லாம், சிறுபான்மை மதமான பௌத்தம், சமணம் போன்ற மதங்களுக்கு என தனித்தனியாக மத தலைமையிருக்கும். ஆனால் இந்து மதத்துக்கு என்று தனியாக தலைமை கிடையாது. பணமும், செல்வாக்கும் இருந்தால் ஒரு மடத்தை தொடங்கி மடாதிபதியாகி, இந்து மதத்தின் பிரதிநிதி என்று  சொல்லும் நிலையிருக்கிறது. அப்படித்தான் தமிழகத்தில் சில மடங்கள் உள்ளன.

இந்து மதம் என்கிற சொற்றொடர் ஆங்கிலேயர்கள் உருவாக்கி சட்டமாக்கியது. அதற்கு முன்பு வரை சைவம், வைணவம் என்றே இருந்தன. சிவன், விஷ்ணுவுக்கு முன்பு முனீஸ்வரன், மாரியாத்தா, எல்லைவீரன், மதுரைவீரன் என வணங்கிய மக்கள் அனைவரும் ஒரே மதம் என்று சொல்லி இந்துக்கள் என பெயர் சூட்டிவிட்டனர். அனைவரும் இந்துக்கள் என அறிவித்தாலும் பல வித்தியாசங்கள் பேதங்கள் இருக்கின்றன. இது வேறு எந்த மதத்திலும் இல்லாதது. ஒரே பட்டிக்குள் ஆடு, மாடு, கழுதை, குதிரை, யானை, சிங்கம், புலி, மான்களை அடைத்துவைப்பது போல இது இருக்கிறது. ஆடு, மாடு, குதிரை, யானை, சிங்கம், புலி, மான் எல்லாம் தனித்தனி குணங்கள் கொண்டது என்பது மறுக்க முடியாதது. 

 

 


இதை எதிர்த்து தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே லிங்காயத்துக்கள் என்கிற மதம் உருவானது. அந்த மதம் என்னை இந்து என சொல்லாதே லிங்காயத்து எனச்சொல் எனக்கேட்டு போராடி இன்று வெற்றிக்கோட்டின் அருகே நிற்கிறது. லிங்காயத்துக்கள் என்பவர்கள் கர்நாடகாவில் மட்டுமில்லை. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ட்டிரா, தமிழகத்திலும் உள்ளார்கள். லிங்காயத்துக்களை மத்திய அரசு தனி மதமாக அங்கீகரித்தால் மேற்கண்ட மாநிலத்தில் உள்ள லிங்காயத்துக்களும் சிறுபான்மை மதம் என்கிற வரையரைக்குள் வந்து அங்கீகாரம் பெறுவார்கள். இதுபோல ஒவ்வொரு சிறு குழுக்களும் கேட்டால் என்ன நடக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இப்பொழுது கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றியை நெருங்கிவிட்டது. இந்நிலையில், லிங்காயத்து மதம்  கோரிக்கை என்னவாகும் என்பது இன்னும் பெரிய கேள்விக்குறி.  


முந்தைய பகுதிகள்:

கர்நாடகாவில் எப்போதும் இது அல்லது அது... இந்த முறை எது?   கர்நாடக தேர்தல் அரசியல் பின்னணி #1! 

கடவுளுக்கு உருவம் தந்தார்கள், மனிதனுக்கு பிரிவைத் தந்தார்கள்...! கர்நாடக தேர்தல் அரசியல் பின்னணி #2  





 

 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன். நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்!. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது. ஜனநாயகத்தையும் - மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் - ஏப்ரல் 19.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, 'ஊழல் மோடி' தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது. உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதிய ஜனதா கட்சியும், நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார். 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது. வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!.

வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள்.  தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது. 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள். 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், ‘புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு, ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்’ என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். 'இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்' என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இதே ஆர்வமும், சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று 'எப்போதும் வென்றான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும். தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும். தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும். 

தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம். ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.