Skip to main content

’பெரியாரை எதிர்த்து பேசுபவர்களின் பேச்சுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும்’-ஜெயக்குமார்

Published on 23/01/2020 | Edited on 23/01/2020
j

 

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம் பெரியார் குறித்து ரஜினி பேசியது பற்றி கேள்வி எழுப்பினர்.

 
அதற்கு,   ’’ரஜினிகாந்த் சொன்னது போல, 1971-ல் எதுவும் நடக்கவில்லை. துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ, நீதிமன்றத்துக்கு சென்று சில அமைப்புகள் எனக்கு கொடுத்த தகவலின் பேரில் தான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் கூறினார்.  நடைபெறாத ஒரு வி‌‌ஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் சொல்லி மக்களை திசை திருப்புகிறார். நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களில் பெரியாரும் ஒருவர். அதனைத் தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் எங்கள் தலைவர்கள் ஆவார்கள்.  இந்த 4 பெரும் தலைவர்களின் புகழுக்கு சிறு அளவில் இழுக்கு ஏற்பட்டாலும் கூட அ.தி.மு.க. குரல் கொடுக்கும். எதிர்த்து பேசுபவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

 

ரஜினிகாந்த் தேவையில்லாத கருத்தை கூறி இதுபோன்ற சர்ச்சையை உருவாக்க வேண்டாம். அவர் வாயை மூடி மவுனமாக இருப்பது நல்லது. ரஜினிகாந்த் என்ன ஆதாயத்துக்காக இதை சொன்னார் என்று தெரியவில்லை.   மாறான கருத்தை சொல்லி மக்களை திசை திருப்பி மலிவான அரசியல் செய்யக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். எங்களை பொறுத்தவரையில் பெரியார் மதிக்கப்பட வேண்டியவர்.

 

நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. அதனை முன்னெடுத்து போக வேண்டும். நல்ல கருத்தை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதை விட்டுவிட்டு, பிற்போக்கான வி‌‌ஷயத்தில் கவனத்தை செலுத்தி எல்லாருடைய நேரத்தையும் வீணடிக்கிறார் ரஜினி’’என்று கூறினார்.