Skip to main content

நித்தியானந்தாவின் திருவிளையாடலா? டென்ஷனான அமித்ஷா... நித்தி பற்றி வெளிவராத அதிர்ச்சி தகவல்! 

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

ஏன் நித்யானந்தாவை போலீசார் கைது செய்யவில்லை. அவர் ஒரு காமக் கொடூரன். குழந்தைகளை கொடுமை செய்பவர். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கே இருக்கிறார்? என தேசிய செய்திச் சேனல்களில் விவாதப் பொருளாகியிருக்கிறார் நித்யானந்தா.

தமிழகத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவர் நித்தியின் பக்தர். 2013-ஆம் ஆண்டு தனது நான்கு குழந்தைகளை பெங்களூருவில் உள்ள பிடதி என்கிற இடத்தில் இயங்கும் குருகுல பள்ளியில் சேர்க்கிறார். அதில் மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை. 2018ஆம் ஆண்டு நித்தியுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட அவரது குழந்தைகளை நித்தி பிடித்து வைத்துக் கொண்டார். அவர் போராடி சிறு வயதுடைய ஒரு பெண்ணையும் ஆண் குழந்தையையும் மீட்டுக் கொண்டு வந்தார். இளம் பெண்களான லோபமுத்ரா சர்மா (வயது 21), நந்திதா சர்மா (வயது 18) ஆகியோரை நித்தி திருப்பி அனுப்பவில்லை.

 

nithy



அவரிடம் ஒப்படைக்கப் பட்ட குழந்தைகளிடம் அவர் விசாரித்தபோது, "நித்தியின் பள்ளியில் பாடங்கள் எடுப்பதில்லை. சாலையோரத்தில் பொருட்களை விற்று பிச்சை எடுக்கும் குழந்தைகளைப் போல ஆசிரம பொருட்களை விற்று காசு கொண்டு வர சொல்வார்கள். விற்பனை குறைந்து காசு குறைந்தால் எங்களை அடிப்பார்கள். சோறும் போட மாட்டார்கள். அப்பா எங்களைப் பார்க்க வந்தால் விடமாட்டார்கள். அப்பா ஆசிரமவாசிகளிடம் சண்டை போட்டதால் பள்ளியை நிர்வகிக்கும் நித்தியின் பெண் சிஷ்யைகளான சாத்வி பிரான் பிரியானந்தா, பிரியாத்வா ரித்திகரன் ஆகியோர் அவர்கள் நிர்வகிக்கும் குருகுலத்துக்கு அழைத்துச் சென்றார்கள். குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தின் புறநகர் பகுதியில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்கிற பள்ளி வளாகத்தில் இயங்கும் குருகுல பள்ளிக்கு அனுப்பினார்கள். அப்பா அதி தீவிரமாக எங்களை குஜராத்திற்கு வந்து தேடினார். அவர் பார்வையில் நாங்கள் படாமலிருக்க எங்களை ஒரு குடியிருப்பில் உணவு இல்லாமல் அடைத்து வைத்தார்கள்'' என கதறி அழுதனர்.
 

nithy case



இந்தக் குழந்தைகளின் நிலை பற்றி அறிந்த ஜனார்த்தனன் அடுத்த கட்டமாக வயதுக்கு வந்த பெண்களின் நிலைமை குறித்து கேள்வி எழுப்பி அந்த பெண்களை எங்களுடன் அனுப்ப வேண்டுமென கதறினார். உடனே நித்யானந்தா, ஜெயராமனின் மூத்த மகளான லோபமுத்ரா பேசும் வீடியோ ஒன்றை அனுப்பினார். "நான் இப்பொழுது நித்யானந்தாவுடன் மேற்கத்திய தீவுகளில் ஒன்றான டிரினிடாட்டில் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். நீங்கள் எனக்கு அப்பா இல்லை. நான் 21 வயது மேஜராகிவிட்டேன். நான் உங்கள் வீட்டில் இருந்தபோது உங்கள் நண்பர் ஒருவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தினீர்கள். அதனால் நித்தியுடன் இணைந்தேன். என்னை சுவாமி நித்தியிடம் இருந்து பிரிக்காதீர்கள்'' என அந்த பெண் பேசியிருந்தார்.
 

nithy



டென்ஷனான ஜனார்த்தனன் குஜராத் போலீசில் புகார் செய்தார். நித்யானந்தாவிற்கும் பா.ஜ.க.வுக்கு நெருக்கமான பிரபல சாமியார்களுக்கும் ஒத்து வராது. சுவாமி ஸ்ரீஸ்ரீரவிசங்கர், பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் ஆகியோரை பற்றி வாய்க்கு வந்தபடி நித்தி பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். "இவர் மட்டும்தான் கடவுளா? எங்களை ஏன் கிண்டலடிக்க வேண்டும்' என டென்ஷனில் இருந்த சாமியார்கள் தென் மாநிலங்களில் மட்டும் திருவிளையாடல் காட்டி வந்த நித்திக்கு எதிராக மோடியின் சொந்த மண்ணான குஜராத் போலீ சில் புகார் வந்ததும் டென்ஷன் ஆனார்கள். கர்நாடகாவில் இந்த குழந்தைகளை வைத்திருந்தால் சிக்கல் என அகமதாபாத்தில் தனது பக்தையான டெல்லி பப்ளிக் ஸ்கூலின் பெண் உரிமையாளர் நடத்தும் பள்ளி வளாகத்தில் உள்ள குருகுலத்திற்கு நித்தி அனுப்பி வைத்தார். ஆனால் அதுவே நித்திக்கு வினையானது.

 

nithy



குஜராத்தில் நித்தியின் திருவிளையாடலா? என அமித்ஷாவும் டென்ஷனானார். ஜனார்த்தனனின் புகார் வழக்காக பதிவு செய்யப்பட்டது. நித்தியின் குருகுல பள்ளியில் குஜராத் போலீஸ் ரெய்டு நடத்தியது. ஜனார்த்தனனின் குழந்தைகளைப் போன்று அடைத்து வைக்கப்பட்ட மூன்று சிறுவர்களை மீட்டு அவர்களை அரசு விடுதியில் சேர்த்தது. அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியது. அவர்களும் ஜனார்த்தனனின் பிள்ளைகள் சொன்ன வாக்கு மூலத்தையே தந்தார்கள். ஜனார்த்தனனின் புகார் மற்றும் சிறுவர்கள் ஐந்து பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நித்தியின் குஜராத் குருகுலத்தை நடத்தி வரும் சாத்வி பிரான் பிரியானந்தா, பிரியாத்வா ஆகி யோரை கைது செய்தனர். அவர் கள் மேல் குழந்தைகளை கடத்து தல், அடித்து உதைத்தல், சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், சமூக அமைதியை குலைத்தல், ஆபாசமான, அவதூறான பொருட்களை விற்பனை செய்தல் என ஏகப்பட்ட வழக்குகளை பாய்ச்சினர். அனைத்திலும் நித்யானந்தாவை முதல் குற்றவாளியாக்கினார்கள் என நடந்ததை விளக்கியது நித்திக்கு நெருக்கமான ஆன்மிக வட்டாரம்.


நித்திக்கு எதிராக அமித்ஷா கோபமடைந்துள்ளார். அதன் விளைவாக நித்தியின் ஆசிரமத்தில் என்ன நடந்தது என குஜராத் மாநில போலீசார், குழந்தைகள் நலப்பிரிவு, சமூக நல பிரிவு என மூன்று துறைகள் அடங்கிய விசாரணைக் கமிட்டியை அழைத்து விசாரிக்க அகமதாபாத் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி நம்மிடம் பேசிய நித்தியின் முன்னாள் பக்தர்கள், "நித்தி நடத்தும் இந்த குருகுல பள்ளி சட்டவிரோதம் என கர்நாடகா அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

2016ஆம் ஆண்டு பெங்களூரு பிடதியில் நடைபெற்ற குருகுல பள்ளியை பூட்டி சீல் வைக்க கர்நாடக அரசு உத்தரவிட்டது. எனவே நித்தி நடத்தியது சட்ட விரோத பள்ளி. அந்தப் பள்ளியில் இவ்வளவு அநியாயம் நடக்கிறது என புகார் வந்ததும் அதை மோடியின் சொந்த ஊரில் நித்தி அரங்கேற்றியதும் அமித்ஷாவை பெரிய அளவுக்கு கோபப்பட வைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக குஜராத் அரசு நித்திக்கு எதிராக திரும்பியுள்ளது. இது நித்திக்கு மிகப் பெரிய ஆபத்துதான் என்கிறார்கள்.

இதெல்லாம் நித்திக்கு புதிதல்ல. அவருக்கு தூசு மாதிரி.

"நித்யானந்தா தனது ஆண் பக்தர் ஒருவரிடமும் பெண் பக்தை ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டார் என ஒரு கற்பழிப்பு வழக்கு பல வருடங்களாக நடந்து வருகிறது. அதில் கடந்த ஒரு வருடமாக நித்தி ஆஜராகவே இல்லை. வருகிற டிசம்பர் 9-ம் தேதி மறுபடியும் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. குஜராத்தில் நடைபெற்ற சம்பவம் இந்த வழக்கில் எதிரொலித்தால் தேசிய சேனல்கள் சொல்வது மாதிரி நித்திக்கு கைது வாரண்டை, கற்பழிப்பு வழக்கு நடக்கும் கர்நாடக ராம்நகர் நீதிமன்றம் பிறப்பிக்கலாம்.


இதுதவிர சங்கீதா என்ற பெண் மர்மமான முறையில் நித்தியின் பிடதி ஆசிரமத்தில் இறந்தார். அதுகுறித்த வழக்கும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அத்துடன் இந்திய அரசின் அமலாக்கத்துறை ஒரு மோசடி வழக்கை நித்தி மீது கொடுத்துள்ளது. அந்த வழக்கு இன்னமும் விசாரணைக்கு வரவில்லை. தமிழகத்தில் திருவண்ணாமலையில் 1008 லிங்கங்களை வைத்து கிரிவல பாதையில் ஒரு ஆசிரமம் அமைத்தார் நித்தி. அப்பொழுது முதல்வராக இருந்த ஜெ. அதை சட்ட விரோத ஆக்கிரமிப்பு என இந்து சமய அறநிலையத்துறை மூலம் இழுத்து மூடினார். அதைத் தொடர்ந்து அது கோவிலல்ல என அங்கிருந்த 1008 லிங்கங்களையும் புல்டோசர் வைத்து உடைத்தெறிந்தார் நித்தி. அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது போதாதென்று அமெரிக்காவில் உள்ள நீதி மன்றங்களில் நித்திக்கு எதிரான வழக்குகள் உள்ளன'' என்கிறார்கள் நித்திக்கு எதிராக போராடுபவர்கள்.

"நித்தி எங்கே' என கேட்டதற்கு "தெற்கு அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கி அங்கே செட்டில் ஆகிவிட்டார்'' என சவால் விடுகிறார்கள் நித்தியின் பக்தர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை நித்தியின் ஆட்டம் குளோஸ் என்கிறார்கள் வழக்கு களை தூசு தட்டுபவர்கள்.