Skip to main content

த்ரிஷா விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய மன்சூர் அலிகான்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

 trisha issue  Mansoor Ali Khan has filed a petition seeking anticipatory bail

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

 

ad

 

இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில், மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். அதில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. 

 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டித்தான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை.” என்றார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என தொடர்ச்சியாக திரைத்துறை சம்பந்தமான சங்கங்களிடமிருந்து மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் எழுந்து வந்தது. 

 

இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் கொடுத்தனர். இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். 

 

இதனிடையே காவல்துறைக்கு, ஆஜராக அவகாசம் கேட்டு மன்சூர் அலிகான் கடிதம் எழுதியுள்ளார். அதில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று ஆஜராகவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாளை ஆஜராக அனுமதி வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்