Skip to main content

புகார் கொடுத்து வேண்டுகோள் விடுத்த நடிகர் சங்கம்

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
nadigar sangam complaint against fake social media accounts in nassar name

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்கப் பொருளாளர் கார்த்தி 67ஆவது சங்க பொதுக்குழு கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி, கமல்ஹாசன் ஆகியோர் தலா ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினர். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாகவும் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளதாகவும் நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. பின்பு நேற்று நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்ததாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 22 ஆம் தேதி சங்கத்தின் புதிய கட்டடப் பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. 

இந்த நிலையில் புது சங்க கட்டடம் கட்டுவது தொடர்பாக, பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் சங்கத்தினர், பொதுமக்களிடம் சங்கம் தரப்பில் நிதி வசூலிக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தற்போது நடிகர் சங்கம் சார்பில், சங்க தலைவர் நாசர் பெயரில் போலி சமூகவலைதள கணக்குகளை தொடங்கி, அதன் மூலம் சங்க கட்டடத்துக்கு பொதுமக்களிடமிருந்து மர்ம நபகர்கள் நிதி பெறுகிறார்கள் என கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாசர் பெயரில் சில விஷமிகள் அவர்களது முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் போலியாக விளம்பரப்படுத்தி பொதுமக்கள் பார்வையில் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்துள்ளார்கள். அந்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடமும் காவல் ஆய்வாளர், சைபர்க்ரைம், பரங்கிமலையிடமும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விஷக்கிருமிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் எனவே அந்த உண்மைக்கு மாறான பொய்யான விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்