Skip to main content

“இது எல்லார் வாழ்விலும் நடக்கும், திரைத்துறை அப்படித்தான்” - அர்ஜுன் தாஸ்

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
arjun das press meet

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் அர்ஜுன் தாஸ். கைதி படத்தில் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். இந்த நிலையில் அவர் புதிதாக நடித்துள்ள படம் ரசவாதி. மௌனகுரு சாந்தகுமார் இயக்கியுள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிகை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். 

இந்நிகழ்வினில் அர்ஜூன் தாஸ் பத்திரிகையாளர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இயக்குநர் சாந்தகுமார் உடன் வேலை பார்த்தது அட்டகாச அனுபவம். மௌனகுரு எனக்குப் பிடித்த படம். அவர் கூப்பிட்ட போது சந்தோசமாக இருந்தது. கதை எனக்கு பிடித்திருந்தது. அவர் படத்தில் நடிப்பது உண்மையில் எனக்கு பெருமை. படத்தைப் பொறுத்தவரையில் ஒரு டாக்டர் ஓய்வுக்காக ஒரு இடத்திற்கு செல்கிறார், அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. படம் பார்த்து நீங்கள் சொல்லுங்கள். கமல் சாரை அவர் நடிப்பதை நேரில்  பார்க்க வேண்டும் என்பது என் ஆசை.  விக்ரமில் நான் இருப்பது எனக்கு தெரியாது, அதனால் உதவி இயக்குநராக வேலை பார்த்தால் அவரைப் பார்க்கலாம்,  அதனால் தான்  லோகேஷிடம்  கேட்டேன். ஆனால் அவர் என்னை நடிக்க வைத்தார், கமல் சார் நடிப்பதை நேரில் பார்த்தேன். இயக்குநர் ஆகும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. 

நான் வளர்ந்திருக்கிறேனா எனத் தெரியவில்லை. துபாயில்  தியேட்டரில் தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இங்கு வந்து, திரையில் நடிக்க முயற்சித்தேன். உங்கள் ஆதரவால் தான் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை  சிறப்பாக செய்து வருகிறேன் என நினைக்கிறேன் அவ்வளவுதான். நான் பெரிதாக வளர்ந்ததாக நினைக்கவில்லை. இப்போது தான் என் பயணம் ஆரம்பித்துள்ளது. இன்னும் திரைப்பயணத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆரம்பகாலகட்டத்தில் நானும் நிறைய ரிஜக்சனை சந்தித்துள்ளேன். நிறைய பேர் என் வாய்ஸ் எனக்கு மைனஸ் எனச் சொல்லியிருக்கிறார்கள், இப்போது அது ப்ளஸாக மாறியுள்ளது. இது எல்லார் வாழ்விலும் நடக்கும், திரைத்துறை அப்படித்தான்.  ஒவ்வொரு நாளும் திரைத்துறையில் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன். ஒரு நேரத்தில் ஒரு படம்தான் செய்கிறேன் அது என் பழக்கம். கடந்த வருடம் நிறைய நடித்திருக்கிறேன்.  இந்த வருடம் நிறையப் படங்கள் தொடர்ந்து வரும். 

கைதி 2 இருக்கிறது என லோகேஷும் சொல்லியிருக்கிறார். கார்த்தி சாரும் சொல்லியிருக்கிறார். விக்ரமில் உயிருடன் வந்ததால் நான் இருப்பேன் என நினைக்கிறேன். எனக்கு வித்தியாசமாக கதாபாத்திரங்களில் ஆசையும் இல்லை.  வரும் கதாப்பாத்திரங்களில் எனக்கு செட் ஆகும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.  தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் அவ்வளவு தான். மதுமிதா  மேடம் உடன்  ஒரு படம் செய்கிறேன். அதற்கடுத்து, விஷால் வெங்கட்டுடன் ஒரு படம் செய்கிறேன். இன்னும் சில படங்கள் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. இப்போது ரசவாதம் வெளியாகவுள்ளது. படம் பார்த்து உங்கள்  ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

சார்ந்த செய்திகள்