Skip to main content

வெண்கலத்தை தவறவிட்ட இந்தியா!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

indian hockey team

 

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றுள்ளார். பி.வி. சிந்து பேட்மிண்டனில் வெண்கலமும், ரவிக்குமார் தஹியா மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

 

மேலும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றுள்ளது. இந்தநிலையில் இன்று (06.08.2021), இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்திற்காக பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா 3 - 4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதனால் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டுள்ளது.

 

இருப்பினும் காலிறுதிக்குக் கூட தகுதி பெறாது என கணிக்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதிவரை முன்னேறி ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. இதற்கிடையே, மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.