Skip to main content

கரோனா தடுப்பூசி - கனடா பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

canada

 

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. தற்போது உலகில் பயன்பாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

 

கனடா ஏற்கனவே பைசர் தடுப்பூசியை 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தலாம் என அனுமதி அளித்திருந்தது. இந்தநிலையில் கனடா, தற்போது 12 - 15 வயதினருக்கும் பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கனடாவின் சுகாதாரத்துறை, மூன்றுகட்ட ஆய்வக பரிசோதனை முடிவுகளின்படி இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

 

மேலும், 12 - 15 வயதினரிடையே இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் உள்ளதெனவும் கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கனடா நாட்டில் கரோனா பாதிக்கப்பட்ட 20 சதவீதம் பேர் 19 வயதிற்கும் குறைவானவர்கள். எனவே 19 வயதுக்கும் குறைவானவர்களுக்கு கரோனா பரவுவதை தடுக்கும் வகையில், 12 - 15 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்தொடர்ச்சியாக கனடாவில் கரோனா பரவல் அதிகமுள்ள மாகாணமான ஆல்பர்ட்டா மாகாணத்தில் திங்கட்கிழமை முதல் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பைசரை தொடர்ந்து மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் ஆகிய நிறுவனங்களும் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஒப்புதல் வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மாடர்னா நிறுவனம், தங்களது தடுப்பூசி 12 - 17 வயதினரிடையே 96 சதவீத செயல்திறன் கொண்டிருக்கிறது என்று முதற்கட்ட ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.

 

இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படுமென்றும், அது குழந்தைகளைப் பாதிக்கும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்