Skip to main content

திருவாரூர் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் ஆசிரியர் கைது!

Published on 13/09/2018 | Edited on 13/09/2018
thiruvayaru


திருவாரூரில் ரூ.10 கோடி கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்ட வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவாரூரில் கிருஷ்ணா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபர் நீதிமோகன் கடந்த 8ம் தேதி இருசக்கர வானத்தில் சென்ற போது காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். அதன் பின்னர் அவரை விடுவிக்க ரூ.10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நீதிமோகன் அலுவலகத்தின் உதவியாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட நீதிமோகனை தேடி வந்தனர்.

இந்நிலையில், நீதிமோகன் மீது மாத தவனை திட்டத்தில் நிலம் வழங்குவதாக பலரை மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால், போலீசார் நீதிமோகனால் பாதிக்கபட்டவர்கள் யாரேனும் அவரை கடத்தியிருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மன்னார்குடியை சோ்ந்த அரசு பள்ளி ஆசிரியர் வெங்கடாசலம் (48) உள்ளிட்ட பலர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது போலீசாருக்கு தெரியவந்தது.
 

thiruvayaru


இதையடுத்து, ஆசிரியர் வெங்கடாசலம் அளித்த தகவலின் பேரில் நீதிமோகனை கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் மீட்டனர். இதைத்தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட வெங்கடாசலத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடத்தலில் சம்பந்தப்பட்ட கீழபனையூரை சோ்ந்த ஜான் கென்னடி(43), வடக்கு பனையூரை சோ்ந்த ரசாக் என்கிற இமையராஜா(36) ஆகியோர் கைது செய்யப்பட்டு அதிகாலையில் நீதிபதி குமார் முன்னிலையில், ஆஜர்ப்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலைரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபர் நீதிமோகன் நிலம் வழங்குவதாக பணத்தை பெற்று கொண்டு நிலம் வழங்காமலும் பணத்தை திரும்ப அளிக்காததாலும் ஆசிரியர் கடந்த 2014ம் ஆண்டு திருவாரூர் குற்றப்பிரிவில் வழக்கு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து கடத்தல் முயற்சியை மேற்கொண்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்