Skip to main content

'ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம்' - அரசியல் கட்சிகள் ஒப்புதல்?

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

sterlite plant oxygen production all parties meeting

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே என்று கூறிய உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு, இதுகுறித்து விளக்கம் கேட்டு தெரிவிக்க தமிழக அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தது.

 

இதையடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைத்து விடுத்தது. அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

sterlite plant oxygen production all parties meeting

 

இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கனிமொழி எம்.பி., பாஜக சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் கே.வி.தங்கபாலு, ஜெயக்குமார், தேமுதிக சார்பில் அன்புராஜ், பாலாஜி, பாமக சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விசிக, மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை

sterlite plant oxygen production all parties meeting

 

கூட்டத்தில் பேசிய திமுக கட்சியின் பிரதிநிதிகள், "ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆக்சிஜனைத்தான் தயாரிக்கிறதா என்பதைக் கண்காணிக்க அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கலாம்" எனத் தெரிவித்துள்ளனர்.

 

அதேபோல் பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தரப்பில், "மனிதாபிமான அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம். மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது" எனத் தெரிவித்துள்ளனர்.

sterlite plant oxygen production all parties meeting

 

மற்ற அரசியல் கட்சிகள், "ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் தென் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தித் தவிர, ஸ்டெர்லைட்டில் வேறு எந்த உற்பத்தியும் நடைபெறக்கூடாது" என கருத்து தெரிவித்துள்ளனர். 

 

பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கருத்துக்கள்படி, தமிழக அரசு இறுதி முடிவுகளை எடுத்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளது. 

 

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்