Skip to main content

ஆத்தூர் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

ஆத்தூரில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற ஐந்து இளைஞர்களை தாக்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் காவலர்கள் மூன்று பேர் அதிரடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

salem police issue

 

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூரைச் சேர்ந்த முருகன் மகன் அரவிந்தன் (21), ராஜேந்திரன் மகன் ரமேஷ் (31), மூர்த்தி மகன் சஞ்சய் (18), செல்வம் மகன் மாதவன் (19), வெங்கடேசன் மகன் பாண்டியன் (20) ஆகிய ஐந்து பேரும், நவ. 18ம் தேதி இரவு, ஒரே மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் இருந்து கல்பகனூருக்குச்  சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து சென்ற ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஷேக் அலாவுதீன், அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். ஒரே வாகனத்தில் எதற்காக ஐந்து பேர் செல்கிறீர்கள் என்று விசாரித்தபோது, இளைஞர்கள் அவரிடம் மரியாதைக் குறைவாக பேசியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த ஷேக் அலாவுதீன் அவர்களை தாக்கியுள்ளார்.

அந்த வழியாக சென்ற வேறு இரு காவலர்களும் இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் உறவினர்களிடம் கூற, மறுநாள் காலையில் அவர்கள் ஆத்தூர் நகர காவல்துறையினரைக் கண்டித்து ஆர்டிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இளைஞர்களை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இந்நிலையில், காவலர்கள் சிவகுரு, செல்வக்குமார், ஷேக் அலாவுதீன் ஆகிய மூவரும் ஆத்தூர் காவல்நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி தீபா கனிகர் உத்தரவிட்டுள்ளார். இந்நடவடிக்கை சேலம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்