Skip to main content

அமைச்சர், அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் புகார்! நடவடிக்கையைத் தடுக்கும் அரசு!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

mm


முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசமுள்ள தமிழக நெடுஞ்சாலைத்துறையில் கரோனா காலத்திலும் கோரப்படும் டெண்டர் ஊழல் குறித்து நக்கீரன் இதழில் விரிவாக எழுதியிருந்தோம். இந்த டெண்டர்களை உற்று கவனித்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படும் விசயங்களையும் அதில் பதிவு செய்திருந்தோம். 
 

இதனைத் தொடர்ந்து, இந்த ஊழல்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு புகார் தெரிவித்துள்ளது திமுக. இது குறித்து திமுகவின் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் விஜயக்குமார் ஐ.பி.எஸ்.சுக்கு அனுப்பி வைத்துள்ளார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
 

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுக்கப்படும் ஊழல் புகார்களின் நிலை குறித்து, அத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’அமைச்சர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை தமிழக அரசின் உயர் மட்டத்தில் இருக்கும் பலரைப் பற்றி ஆதாரப்பூர்வமாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. புகார் கொடுக்கப்பட்டதை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியதிருக்கிறது. உடனே கோட்டையிலிருந்து, புகாரைக் கிடப்பில் வையுங்கள்; நடவடிக்கை வேண்டாம் என ஆர்டர் வந்து விடும். 
 

தவிர, ஊழல் தடுப்பு சட்டவிதிகளில் உள்ள குறிப்பிட்ட சில ஷரத்துகள் நடவடிக்கை எடுக்க முட்டுக்கட்டையாக இருக்கின்றன. அதனாலேயே, விரைந்து எங்களால் நடவடிக்கை எடுக்கவும் முடிவதில்லை. குறிப்பாக, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது எங்களுக்குப் புகார்கள் வந்தால் அதனை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதாவது, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் ஆணையராகத்  தலைமைச் செயலாளர் சண்முகம் தான் இருக்கிறார். அவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். ஆனால், அனுமதி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. அதனாலேயே பல புகார்கள் கிடப்பில் கிடக்கின்றன’’ என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்