Skip to main content

மேயர் தேர்தல் எப்போது? அமைச்சரவையில் விவாதம் !

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

 

 

மூன்றாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடியால் தேர்தலை நடத்த முன் வந்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு. அதன்படி, 27 மாவட்டங்களுக்கு மட்டும் கடந்த வருடம் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத்தினர். இன்னும் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

 

eps



              

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்ட சூழலில், அதனை எப்படி நடத்தலாம் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பல கட்ட ஆலோசனைகளை நடத்தினார் எடப்பாடி. 
 

அப்போது, ஊரக உள்ளாட்சிகளான கிராம பஞ்சாயத்துகளுக்கு மட்டும் முதலில் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்து விடலாம். அதன்பிறகு சிறிய இடைவெளி விட்டு, பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தலை நடத்தலாம். மீண்டும் சிறிய இடைவெளிவிட்டு மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தலை நடத்துவோம் என யோசனை தெரிவித்திருந்தார் வேலுமணி. 

 

இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி, மூத்த அமைச்சர்களுடன் நடத்திய விவாதத்தில், ‘ இது நல்ல யோசனைதான் ‘ என தெரிவித்திருந்தனர். 



அதன்படியே, கிராம பஞ்சாயத்துகளுக்கு முதலில் தேர்தலை நடத்தியது எடப்பாடி அரசு. பல்வேறு பிரச்சனைகளையும், விதிகளையும் சுட்டிக்காட்டி திமுக தொடர்ந்த வழக்கால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த சூழலில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இதற்கான தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது எடப்பாடி அரசு. 


   

கடந்த 4-ந்தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நீண்ட விவாதங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தலை நடத்துவதா? அல்லது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்துவதா ? என அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்துள்ளது. அந்த ஆலோசனையின் முடிவில், 9 மாவட்டங்களுக்கான தேர்தலோடு பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தலாம் எனவும், துவக்கத்தில் முடிவு செய்திருந்தபடி இடைவெளி விட்டு தேர்தலை நடத்துவதை தவிர்க்கலாம் எனவும் அமைச்சர் வேலுமணி துவங்கி  அனைத்து அமைச்சர்களும் தெரிவித்திருக்கிறார்கள். 
 

இதனையடுத்து, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒட்டுமொத்த தேர்தலையும் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்த ஒட்டுமொத்த தேர்தலையும் இரண்டு கட்டங்களாக நடத்தவும் தீர்மானித்துள்ளனர். இந்த தேர்தலை நடத்துவதற்காகத்தான் மார்ச்சுக்குள் பட்ஜெட் கூட்டத்தை முழுமையாக முடிக்க முடிவு செய்திருக்கிறது எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை ! 
            

 இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை முழுமையாக எதிர்கொள்ள மாவட்டவாரியாக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது அதிமுக தலைமை!


 

சார்ந்த செய்திகள்