Skip to main content

பாதிக்கப்பட்டோருக்கு ஊரடங்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோரிய வழக்கு! -விரிவாக பதிலளிக்க அரசுக்கு உத்தரவு!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020
rrr

 

 

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியது தொடர்பாக தமிழக அரசு விரிவாக பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகியும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில்,  ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு,   ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளது. ஒரு குடும்பத்தை சமாளிக்க 1000 ரூபாய் போதுமானதாக இல்லை.   தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை, அமைப்புசாரா தொழிலாளர்கள் பலருக்கு இன்னும் போய்ச் சேரவில்லை.  

 

கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது, ரூ.5000 நிவாரண தொகையுடன்,  20 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.  பொங்கல் திருவிழாவின் போது கூட,  ரூ.1000 வழங்கப்பட்டது.  மற்ற நாடுகளை ஒப்பிடும்போது,  ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்,  ஜப்பான் 20 சதவீதமும் அமெரிக்கா 15 சதவீதமும் நிவாரணமாக வழங்கியுள்ளது.

 

ஆனால் இந்தியாவில், ஜிடிபியில் ஒரு சதவீதத்தை மட்டுமே வழங்கியிருக்கிறது. தொடர்ந்து ஊரடங்கு நீடித்து கொண்டிருக்கக்கூடிய வேளையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம்  வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

 

இந்த வழக்கு,  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நல வாரியங்களின் மூலம் ரூ.1000 வழங்கப்பட்டதாக தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் குறித்து விரிவாக பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்