Skip to main content

‘பைனாகுலர் வைத்து தேடினாலும் காங்கிரஸை கண்டுபிடிக்க முடியவில்லை’ - திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Trinamool Congress review Even though we searched with binoculars, we could not find Congress

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்க முடிவு செய்தது. . இதில், மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. மேற்கு வங்கத்தில் 5 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கூறியதாகவும், அதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புக்கொள்ளவில்லை என்வும் கூறப்பட்டது. அதனால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததாக கூறப்பட்டது.  

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் காங்கிரஸை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பைனாகுலர் வைத்து பார்த்தாலும், காங்கிரஸ் வெற்றி பெறும் 3வது தொகுதியை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார். இது காங்கிரஸ் கட்சி மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதற்கிடையே,  இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் எம்.பியும், மூத்த தலைவருமான டெரக் ஓ பிரெயின் கூறியுள்ளார். இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடந்து வருவதாக காங்கிரஸ் கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்