ADVERTISEMENT

பெண்களுக்காக பெரியார் என்ன செய்தார்... மகளிர் தின வரலாறு!

03:13 PM Mar 08, 2018 | vasanthbalakrishnan

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT


உலகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்தது போல 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர் ஆண்கள். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது. இதனை மத ரீதியாக பாவம் என பரப்பி வைத்திருந்தனர்.

ADVERTISEMENT

அதன்பின் 1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் பெரும் வித்தியாசம் இருந்தது. இது பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதியாக பார்க்கப்பட்டது. இதனால் மிகுந்த வருத்தமடைந்து ஆண்களுக்கு இணையான ஊதியம் மற்றும் உரிமைகள் வழங்கக்கோரி வேலை செய்த பெண்கள் உரிமைக் குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முடிவு செய்தனர். அதற்கான நாளாக 1857 மார்ச் 8ம் தேதி என முடிவு செய்து அதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர்.


1907ம் ஆண்டு மீண்டும் சம உரிமை, சம ஊதியம் கேட்டு மீண்டும் பெண்கள் போராடத் தொடங்கினர். போராட்டம் வெற்றி பெறவில்லை, கேட்டால் கிடைக்காது, கேட்டுக்கொண்டு இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்த பெண் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை எழுப்பியும், அதனை நிறைவேற்ற வேண்டும் என போராடியும் வந்தனர்.

1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த உழைக்கும் பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்ட அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, இலங்கை, ஜப்பான் போன்ற பல நாடுகளில் இருந்து பெண் பிரிதிநிதிகள் இந்த மாநாட்டுக்கு சென்றனர்.


இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா பெண் புரட்சியாளர், உலகத்தில் முதன்முதலாக பெண்களின் உரிமைக்காக போராட்டம் நடந்த மார்ச் 8ம் தேதியை உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு செய்தார். அந்த அறிவிப்பை பல நாடுகளின் பெண் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதனை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்து வருகின்றன. இந்த தினம் என ஒன்று உருவானது முதல் தான் உலகின் பல நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் கிடைக்க துவங்கின என்கிறது வரலாறு.


ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் ரஷ்யா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

உலக பெண்கள் தினம் தமிழகத்தில் பெரும் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது. அதற்கு காரணம் தந்தை பெரியார்.


உலகளவில் பெண் உரிமையே ஒரு சமூகத்தின் விடுதலை என்றவர் தந்தை பெரியார். பெண் விடுதலைக்காக, அவர்களின் உரிமைக்காக இந்தியாவில் அதிகளவில் குரல் கொடுத்தவர் பெரியார். அவரின் போராட்டமே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம், விதவை பெண்களுக்கு மறுவாழ்வு, தாலி கட்டும் அடிமை முறைக்கு எதிர்ப்பு, ஆண்களுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு எதிர்ப்பு, பெண்களுக்கு சொத்தில் சமபங்கு போன்றவற்றை வலியுறுத்தி தமிழகத்தை மையமாக வைத்து இந்தியாவில் போராடியவர் பெரியார். தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக எழுதியும் வந்தார். அவரின் போராட்டத்தை அடுத்து வந்த அவரின் திராவிட தளபதிகள் நிறைவேற்றி வெற்றி பெற்றார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களுக்கான உரிமைகள் அதிகம் பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம் பெரியாரும் அவரது திராவிட தளபதிகளும் தான்.

பெண்கள் இந்த நாளில் அந்த கிழவனை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT