ADVERTISEMENT

திருவள்ளுவரும் மீனும்.. - திருகலான கேள்விதான்!

04:49 PM Jan 16, 2020 | kirubahar@nakk…

“திருவள்ளுவருக்கு மீன் பிடிக்குமா?” என்று கேட்டான் பக்கத்து வீட்டுச் சிறுவன். அவனது கேள்வி மட்டுமல்ல, பார்வையும் ஒரு தினுசாகவே இருக்க, “எதற்காக இப்படி கேட்கிறாய்?” என்றோம். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதைவிட்டு தேவையற்ற கேள்வியை நாம் கேட்பதுபோல் அவன், தனது உடல்மொழியை வெளிப்படுத்த, திருக்குறள் ஒன்றை எடுத்துவிட்டோம்.

‘வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று’

இக்குறளை அவன் எதிர்பார்க்கவில்லை போலும். திருதிருவென்று விழித்தான். “வெற்றி பெறும் ஆற்றலே இருந்தாலும், சூதாடுவதை விரும்பக்கூடாது. அப்படியே சூதாட்டத்தில் வென்றாலும், அந்த வெற்றியானது தூண்டில் முள்ளில் இருக்கும் உணவை இரை என விழுங்கும் மீன், அதில் சிக்கிக்கொள்வது போன்றதே.” என்று விளக்கம் அளித்தோம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அவனோ, “அட, போங்க அங்கிள்.. இன்னிக்கு என்ன நாள்? எதுக்காகக் கேட்டேன்னு தெரிஞ்சிக்காம, ஸ்கூல்ல பாடம் நடத்துற சார் மாதிரி, திருக்குறளெல்லாம் சொல்லி, போர் அடிக்கிறீங்களே?” என்று கலாய்த்தான்.

“சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்லுங்க தம்பி..” என்று அவனிடமே கேட்டுத் தெரிந்துகொண்டோம். விஷயம் இதுதான் – இன்று கோழிக்கறி வாங்க தன் தந்தையுடன் கடைக்குச் சென்றிருக்கிறான், அவன். கோழிக்கறிக் கடை மட்டுமல்ல, மட்டன் கடைகளும் பூட்டியிருந்திருக்கிறது. இன்று திருவள்ளுவர் தினம் என்பதால், மட்டன் மற்றும் சிக்கன் கடைகளுக்கு விடுமுறை என்பது, பக்கத்திலேயே திறந்திருந்த மீன் கடைக்காரர் சொல்லித்தான் தெரிந்திருக்கிறது. மீன் விற்கலாம்; இறைச்சியோ, கோழிக்கறியோ விற்கக்கூடாது. மீறி விற்றால், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று மீன்
கடைக்காரர் கூறியிருக்கிறார். அப்போதே சிறுவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. திருவள்ளுவருக்கு மீன் பிடிக்குமோ என்று. அதனால்தான் நம்மிடம் கேட்டிருக்கிறான்.

மகாவீர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வள்ளலார் தினம், திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய ஐந்து நாட்கள் இறைச்சி விற்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது என்ற விபரத்தை அவனிடம் கூறியபோது, “மீன் அசைவம் இல்லியா?” என்று கேட்டான். “மீன் அசைவமும் இல்லை. சைவமும் இல்லை என்றொரு கருத்து நிலவுகிறது. மீனுக்கு இறைச்சி வகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.” என்று ஏற்கனவே, சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் சொன்ன தகவலைச் சொன்னோம். அவன் சமாதானம் ஆகவில்லை.

“கடைகளில் ஆடு வெட்ட, கோழியை அறுப்பதற்குத்தான் தடை, மற்றபடி உயிருடன் ஆடுகளையோ, கோழிகளையோ விற்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அவற்றை வாங்கி, வீட்டில் கொண்டுபோய் வெட்டியோ, அறுத்தோ, குழம்பு வைத்தால், சட்டம் தலையிடாது.” என்றார், இறைச்சிக் கடைகள் கண்காணிப்பில் இன்று ஈடுபட்டு வரும் அந்தக் காவலர்.

முட்டை சைவமா? அசைவமா? என்ற கேள்விக்கு, “சைவம்தான்..” என்று விளக்கம் அளித்துள்ளார்கள் டில்லியைச் சேர்ந்த விஞ்ஞானிகள். மீன் குறித்து எதிர்காலத்தில் என்ன பதில் கிடைக்கப்போகிறதோ?

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT