ADVERTISEMENT

“அப்போதெல்லாம் வக்கீலுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள்!!” - திமுக வக்கீல் எம்எல்ஏ கலகல பேட்டி!

12:09 PM Sep 13, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருமாதத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை அந்தந்த அமைச்சர்கள் தொடர்ந்து அறிவித்துவருகிறார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் தங்களின் முதல் உரையை அவையில் பதிவு செய்துவருகிறார்கள். அந்த வகையில் முதல்முறையாக எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர் பரந்தாமன் சட்டப்பேரவையில், அத்தொகுதியின் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் கூறியதோடு மட்டுமல்லாமல், தொகுதியின் பெயரையே மாற்ற வேண்டும் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார். என்ன காரணம், எதற்காக பெயர் மாற்றம் என்பது குறித்தான பல்வேறு கேள்விகளை அவரிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,


பள்ளி பருவத்திலேயே நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். அப்போது நீங்கள் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவோம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்போம் என்று நினைத்திருக்கிறீர்களா? இந்த வாய்ப்பை நீங்கள் எதிர்பார்த்தீர்களா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மாணவர் பருவத்தில் இருந்தே எனக்கு அரசியல் ஆர்வம் இருந்தது உண்மை. குறிப்பாக கலைஞர் அவர்களின் பேச்சு, முரசொலி வாசிப்பு முதலியன அந்த ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தின. எனவே தலைவரின் பேச்சும், எழுத்தும் நான் அரசியலுக்கு வர மிக முக்கிய காரணமாக இருந்தது என்பதே உண்மை.

அரசியலில் பல்வேறு கட்டங்களாக உயர்ந்து தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளீர்கள். அரசியலில் கட்சி பொறுப்புகளைக் கடந்து தற்போது சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பை பெற்றுள்ளீர்கள், அதை எப்படி பார்க்கிறீர்கள்? முதன்முதலாக சபைக்குச் சென்றபோது எந்த மாதிரியான உணர்வில் இருந்தீர்கள்?

இரண்டும் கலந்த ஒரு மனநிலையில்தான் இருந்தேன். அதை விவரிப்பது என்பதைக் காட்டிலும், அப்போது வழிந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டேன் என்பதே இந்தக் கேள்விக்கு மிகச் சரியான பதிலாக இருக்கும். மிகவும் அப்போது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தேன். எதற்காக நாம் உழைத்தோமோ, அதை அங்கீகரித்து தலைவர் நமக்கு வாய்ப்பு கொடுத்து சட்டப்பேரவைக்கு அழைத்துச் செல்வது என்பது மிகவும் சந்தோஷமான ஒரு நிகழ்வு. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதையும் தாண்டி இனி நிறைய உழைக்க வேண்டியுள்ளது என்ற பொறுப்பு தற்போது கூடுதலாக வந்துள்ளது.

சட்டமன்றத்தில் நீங்கள் பேசியபோது எழும்பூர் என்ற பெயரை எழுமூர் என்று மாற்ற வேண்டும் என்று பேசியிருக்கிறீர்கள், என்ன காரணம், அதற்கான வரலாற்றுப்பூர்வமான ஆதாரம் இருக்கிறதா?

சோழர் காலத்தில் எழுமூர் என்றழைக்கப்பட்ட அந்தப் பெயர், தற்போது எழும்பூர் அல்லது ஆங்கிலத்தில் எக்மோர் என்றழைக்கப்படுகிறது. எழுமூர் என்ற பெயர் காலப்போக்கில் பேச்சில் திரிந்து எழும்பூர் என்று மாறிப்போய்விட்டது. எனவே எழும்பூர் என்ற பெயர் இலக்கணப்படி வைத்த பெயர் அன்று. 900 ஆண்டுகால வரலாறு உடைய எழுமூர் என்ற அந்தப் பெயரை மீண்டும் வைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தேன். இந்த அரசு செய்யவில்லை என்றால் யார் செய்யப் போகிறார்கள். நிச்சயம் நல்ல மாற்றம் வரும்.

பல்வேறு விஷயங்களை சட்டமன்றத்தில் பேசியிருந்த நீங்கள், வழக்கறிஞராக இருந்ததால் பல்வேறு சிக்கல்களை சந்தித்ததாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அது பற்றி கூற இயலுமா?

வழக்கறிஞர்களுக்குப் பெண் கொடுக்க யோசிப்பார்கள், அதை நானே என்னுடைய சொந்த வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். பல வரன்கள் தட்டிச் சென்றன. பிறகு திருமணம் செய்துகொண்டேன். அதைப்போல வீடு கிடைப்பதில் பிரச்சனை இருப்பதை தற்போது நானே நேரில் பார்த்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின், தொகுதியிலேயே தங்க வேண்டும் என்று முடிவெடுத்த நான், அதற்காக வீடு பார்த்தேன். பல வீடுகள் இறுதி செய்யப்பட்டு, கடைசியில் தள்ளிப்போனது. அவர்கள் யாரும் நான் வழக்கறிஞர், அரசியல்வாதி என்று தனிப்பட்ட காரணங்களைக் கூறாமல் வேறு எதாவது ஒரு காரணத்தைக் கூறி நிராகரிப்பார்கள். தற்போது நான் இருக்கும் ஃபிளாட் ஓனர் வக்கீல்தான். அவருக்கு அந்த தொழில் மீது புரிதல் இருந்ததால் வீடு கொடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனவே நாம் நடந்துகொள்வது என்பது மிக முக்கியமான ஒன்று. நம் செயல்பாடு சரியாக இருந்தால் யாரும் நம்மை வேண்டா வெறுப்பாக பார்க்க மாட்டார்கள்.

சட்டமன்றத்தில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். நாட்டில் சமூகநீதிக்கு உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கையில், எதற்காக இப்போது பெரியாரை இந்த திராவிடக் கட்சிகள் தூக்கிப்பிடித்து வருகிறார்கள் என்று கூறுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோமாயின், அந்த அரசியலமைப்புச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்னும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று கூறி அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற யார் காரணம்? அவர் சார்ந்த திராவிட கழகம்தானே? அப்புறம் அவரை ஏன் கொண்டாடுகிறீர்கள் என்றால் என்ன பதில் சொல்வது. இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் அனைவருக்கும் தெரியும் பெரியார் யார் என்று. இருந்தும் விடாப்பிடியாக வம்பிழுக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள். இதனால் பெரியார் ஒன்றும் சிறுமைப்பட போவதில்லை. அவர் அதையும் தாண்டியவர். காலகாலத்திற்கும் நிலைத்து நிற்பவர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT