Skip to main content

இதுமட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா???

Published on 20/06/2019 | Edited on 21/06/2019

சமீபகாலங்களில் ஒரு பிரச்சனை என்றால் அதை எதிர்த்து களத்தில் போராடாமல் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவது வழக்கமாகிவிட்டது.
 

dmk mk stalin



அரசியலிலும் அது சமீப காலமாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரையில் மிகமுக்கியமான இடத்தில் இருக்கும், மக்கள் பிரச்சனைகளை ஆட்சியாளர்களிடம் கொண்டுசேர்க்கும் எதிர்கட்சி என்ற இடத்தில் இருக்கும் திமுக இதை அதிகமாக செய்கிறது. 

ஒரு பிரச்சனையோ அல்லது ஒரு ஆலோசனைக் கூட்டமோ நடக்கும்போது அதற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அல்லது சட்டமன்றத்தில் விவாதம் நடக்கும்போது அங்குள்ள கட்சிகளின் விருப்பத்தைக் கேட்கும். அப்போது அந்த கூட்டத்தில் நமது கருத்தை தெரிவிக்கவேண்டும், அது மக்களுக்கு எதிரான திட்டங்களாக இருந்தால் அதற்கான வலுவான எதிர்ப்பை, வலுவான கருத்துகளை, ஆதாரங்களைக் காட்டவேண்டும். அப்படியானால்தான் அது வலுவான எதிர்ப்பாக அமையும். 
 

dmk mk stalin


நாடாளுமன்ற தேர்தலுக்குமுன் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டங்களில் திமுகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக, மக்களின் நலனுக்கு எதிராக அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காக திமுக தினமும் வெளிநடப்பு செய்துகொண்டே இருந்தது. அப்போது முதல் ஒரு சில தினங்களுக்கு நேர்மறையான கருத்துகளைப் பெற்றாலும், அதுவே போகப்போக எதிர்மறையாக மாறியது.

காலை 9.30 மணிக்கு சட்டமன்றத்திற்குள் செல்வார்கள் அப்போது, நீ வேணும்னாலும் பாரு, 9.45க்கு வெளிய வந்திருவாங்க என்று கேலியாக சொல்லும் அளவிற்கு மிகுந்த விமர்சனங்களை சந்தித்தது. திமுக கூட்டணி வெளிநடப்பு செய்தபிறகு, அவையில் அதிமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களை மட்டுமே வைத்து ஒருசில திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக. எதிர்கட்சி என்ற ஒரு வலிமையான தரப்பு இல்லாமலேயே சட்டமன்றங்கள் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதும் இதேமாதிரியான ஒன்றை திமுக செய்துள்ளது.
 

dmk mk stalin


நேற்று (19.06.2019) ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை செயல்படுத்தலாமா என்று அனைத்துக்கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. நடைமுறைக்கு ஒவ்வாத, குழப்பமான திட்டம் இது என அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர். அந்த கருத்தை, அந்த திட்டத்தை தங்களின் அரசியல் ஆலோசகர்கள், அனுபவங்கள் ஆகியவற்றைக்கொண்டு வலுவாக எதிர்க்கவேண்டிய காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் போன்ற எதிர்கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. மொத்தம் 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 21 கட்சிகள் மட்டுமே கலந்துகொண்டுள்ளன. இதில் பாஜக கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை கணிசமானவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தக் கூட்டம் முடிந்தபின் பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கூட்டத்தில் பங்குபெற்ற கட்சிகள் பலவும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இதை நடைமுறைப்படுத்துவது குறித்த தங்களது சந்தேகங்களை தெரிவித்தன, ஆனால் அவர்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த திட்டத்தை ஆராய ஒரு குழுவை பிரதமர் மோடி அமைப்பார். அந்த குழு ஆராய்ந்து தங்களது அறிக்கைகளை சமர்பிக்கும் எனவும் தெரிவித்தார். 

இதிலிருந்து ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது. இந்த திட்டம் கிட்டதட்ட நிறைவேறப்போகிறது. கூட்டத்தில் கலந்துகொண்ட பல கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன அதனால் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை வலுவான எதிர்கட்சிகள் அனைத்தும் கலந்துகொண்டு அதை வலுவாக எதிர்த்திருந்தால், பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் முடிவு என்றோ, நடைமுறைக்கு ஒத்துவராது என்றோ, இந்தியா துணைக்கண்டம் இது ஒரு நாடு இல்லை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின்படிதான் இது நடக்கிறது என்றோ கூறியிருந்தால் அது எவ்வளவு பெரிய எதிர்ப்பாக அமைந்திருக்கும். 
 

 

dmk mk stalin


தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திமுக அதை கண்டிப்பாக செய்திருக்கவேண்டும். ஏனென்றால் எந்த பிரச்சனையானாலும் அதற்கு பதில்கூறும், அதற்கு தீர்வு கொடுக்கும் கலைஞர், ஒற்றை ஆளாக நாடாளுமன்றத்தில் பல சமூகநீதி திட்டங்களை நிறைவேற்றிய, அதுகுறித்து அனைவரையும் பேசவைத்த அண்ணா போன்ற தலைவர்கள் இருந்த இயக்கம் இது. அதற்கும் மேல் ஒற்றை ஆளாக தொடங்கி ஒரு சமூகநீதி பேரியக்கமாக மாற்றிய, இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பெரியாரை முன்னோடியாகக்கொண்ட இயக்கம் இது. இந்திய அரசியலை தமிழ்நாட்டிலிருந்து தீர்மானித்தவர்கள் அவர்கள், அதனால்தான் அவர்கள் இல்லாதபோதும் அவர்களை அகற்றிவிட்டு அரசியல் செய்யமுடியவில்லை என்ற நிலை ஏற்பட்டது.

புறக்கணிப்பு எதிர்ப்பாக இருக்கலாம் ஆனால் அது ஒரு வலுவான எதிர்கட்சிக்கு அழகில்லை மேலும், அப்படியிருப்பது வலுவான எதிர்ப்பும் இல்லை, நிரந்தர தீர்வும் இல்லை இதை மனதில் வைத்துக்கொண்டு இன்றைய தலைவரும், கட்சியும் செயல்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஒருவேளை அதுமட்டுமே போதும் என யாரேனும் நினைத்தால் அது மிகப்பெரிய தவறாகவும் வாய்ப்பிருக்கிறது.

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.