ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி யாருக்கு? பெண் நிர்வாகிகள் போட்டா போட்டி! 

06:01 PM May 12, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பு தேர்தலின் மாநில தேர்தல் அதிகாரி கவுரவ் கோகாய், துணைத்தேர்தல் அதிகாரிகள் நெய்யாற்றின்கரை சனல், அஞ்சலி நிம்பால்கர், தேசிய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் வருகிற ஜூன் 10-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். ஆகஸ்டு முதல் வாரத்தில் மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தமுறை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒரு பெண் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் காங்கிரஸில் உள்ள பெண் நிர்வாகிகள், தாங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும் என முனைப்பு காட்டிவருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கும், விஜயதாரணி அந்தப் பதவிக்கு தகுதியானவர் என அவரின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். விஜயதாரணி, தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உருப்பினராக இருந்து வருகிறார். இவர் தற்போது, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாகவும் பதவி வகித்துவருகிறார். மேலும், கடந்த 11 வருடமாக தேசிய மகளிர் காங்கிரஸில் நிரப்பப்படாமல் இருந்த கட்சிப் பதவிகளை இவர் பொதுச் செயலாளருடன் நிர்வாகிகளை நியமித்தார். அப்படி கடந்த 11 வருடத்தில் மட்டும் இவர் 360 பேருக்கு பதவி கொடுத்துள்ளார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற வசந்தகுமார் கரோனா காரணமாக மறைந்தார். அதனைத் தொடர்ந்து 2021ல் சட்டமன்றத் தேர்தலுடன் சேர்ந்து அந்தத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது, விஜயதரணிக்கு அந்த எம்.பி. தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்து அவரின் ஆதரவாளர்கள் இருந்தனர். ஆனால், அப்போது வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், விஜயதாரணி எந்தவித மனகசப்பும் இன்றி தேர்தல் பணிகளை மும்முரமாக செய்தார். அதனால், அவருக்கு இந்த முறை தலைவர் பதவிக்கு அவர் பெயர் பரிந்துரைக்க வேண்டும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தற்போதைய கரூர் நாடாளுமன்ற உருப்பினருமான ஜோதிமணி, தொடர்ந்து தேசிய அளவிலான அரசியலில் மும்முரமாக இயங்கிவருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டை தாண்டியும் இந்திய அளவில் வன்கொடுமை விவகாரங்களிலும், பெண் உரிமை விவகாரங்களிலும் தீவிரமாக அவர் இயங்கிவருகிறார். அதனால், அவருக்கு இந்த வாய்ப்பு வழங்க வேண்டும் என இவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொறுப்புகளில் இருக்கும் பெண் நிர்வாகிகள் பலரும், சட்டமன்ற, நாடாளுமன்ற பதவிகளில் இல்லாத தங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்க வேண்டும் என கே.எஸ். அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசு உள்ளிட்ட காங்கிரஸின் மூத்தத் தலைவர்களை அணுகி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT