Skip to main content

அதிமுக கூட்டணிக்கு ஆசைப்படுகிறாரா கே.எஸ்.அழகிரி? சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ்!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

   

KS Alagiri wants AIADMK alliance? Congress to raise doubts

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தில் (மே-21) ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் வருடாந்திர வழக்கம். தற்போது, கரோனா நெருக்கடி இருப்பதால் ராஜீவ் நினைவிடத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செல்வார்களா? அஞ்சலி செலுத்த அனுமதி கிடைக்குமா? என்கிற சந்தேகத்துடனேயே இருந்தனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

இந்த நிலையில் இன்று (மே-21) தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர்களான காங்கிரஸ் எம்.பிக்கள் டாக்டர் விஷ்ணுபிரசாத், டாக்டர் ஜெயக்குமார், வசந்தகுமார் உள்ளிட்டோர் ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினர். இதற்காக கே.எஸ்.அழகிரி வாங்கிய அனுமதிதான் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் கோபத்தை கிளற வைத்துக் கொண்டிருக்கிறது.

இது குறித்து காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, ‘’ கரோனா சூழலை விவரித்து அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை தமிழக அரசின் காவல்துறை மறுத்துவிட்டது. அனுமதிக் கேட்டு காங்கிரஸ் தரப்பில் எவ்வளவோ கெஞ்சியும் 21ந்தேதி காலை வரை போலீசார் அனுமதி தரவில்லை. அனுமதி தரப்படவில்லை என்ற தகவலை அறிந்த கே.எஸ்.அழகிரி, உடனடியாக, முதல்வர் எடப்பாடியை தொடர்புகொண்டு பேச, அடுத்த அரை மணி நேரத்தில் அனுமதி கிடைக்கிறது. அந்த அனுமதியை வைத்துக்கொண்டே அஞ்சலி செலுத்தினார் கே.எஸ்.அழகிரி.

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி தர மறுத்த தமிழக அரசை கண்டித்து ராஜீவ் நினைவிடத்திலேயே அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள்  திடீர் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். போராடுவதன் மூலம் தான் தமிழக அரசின் எதேச்சதிகாரத்தை அம்பலப்படுத்த முடியும். திமுக கூட்டணியில் நாம் இருக்கும் போது அதிமுக அரசின் தயவை நாம் எதிர்பார்க்கக்கூடாது. எடப்பாடி அரசினுடனான நட்பும் நமக்கு தேவைமில்லை. எடப்பாடி அரசை எதிர்ப்பதன் மூலம்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும். டெல்லியில் ராஜிவ் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த மத்திய அரசு அனுமதிக்கும் நிலையில், தமிழகத்தில்  அதற்கு அனுமதி மறுக்கும் எடப்பாடியை கண்டித்து போர்க்குரல் உயர்த்தியிருந்தால் இந்த விவகாரம் தேசிய அளவில் எதிரொலித்திருக்கும்.

இப்படிப்பட்ட அரசியலை செய்யத் தவறும் கே.எஸ்.அழகிரி, எடப்பாடியிடம் பேசி அனுமதி பெற்றது ஏற்புடையதல்ல ! அரை மணி நேரத்தில் எடப்படியிடமிருந்து அழகிரி அனுமதி பெற முடிவதால் எடப்பாடிக்கும் அழகிரிக்குமிடையே உள்ள அரசியல் என்ன ? திமுக கூட்டணியிலிருந்து விலகி எதிர்காலத்தில் அதிமுக கூட்டணியை கையிலெடுக்க இப்போதே எடப்பாடியுடன் நட்பை வளர்த்துக்கொள்கிறாரா ? அதற்காகத்தான் எடப்பாடிக்கு எதிராக போராட்ட குரலை உயர்த்தாமல் சமரச அரசியல் செய்கிறாரா ? அழகிரியின் இத்தகைய எடப்பாடி மீதான பாசத்தில் பல சந்தேகங்கள் இருக்கின்றன ‘’ என்கிறார்கள்.

 

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.