வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனி தொகுதி. 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த ஜெயந்தி பத்மநாபன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பூசலில் தினகரன் அணியில் இணைந்தார் ஜெயந்தி. இதனால் இவரோடு சேர்த்து 18 எம்.எல்.ஏக்கள் பதவிகள் பறிக்கப்பட்டது. 18 தொகுதிகளில் காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2019 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலோடு நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த காத்தவராயன் வெற்றி பெற்றார். திமுகவில் கிளை செயலாளர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட துணை செயலாளர் என படிப்படியாக கட்சியில் வளர்ந்தார். கட்சியின் பல்வேறு போராட்டத்தில் கலந்துக்கொண்டு சிறைக்கு சென்றவர். சேர்மன், எம்.எல்.ஏ என பதவிக்கு வருவதற்கு முன்பே ஊர் மக்களின் பிரச்சனையென்றால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசுவார்.
சலவை தொழிலாளியாக இருந்த இவருக்கு வாலிப வயதில் ஒரு காதல் இருந்தது. உயர் படிப்பு படித்த அந்த பெண்ணும் இவரை காதலித்தார். அந்த காதல் காற்றில் கரைந்துவிட்டது. காதல் நினைவுகள் இதயத்தில் இருந்ததால், வேறு ஒரு பெண் இணையாக வேண்டாம் என திருமணம் செய்துக்கொள்ளாமல் தனது சகோதரின் குடும்பத்தாருடன் பேரணாம்பட்டில் வசித்து வந்தார்.
குடியாத்தம் தொகுதி அதிமுகவினரே தங்களது வேட்பாளர் கஸ்பா.மூர்த்தியை புறக்கணித்து காத்தவராயனை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுயிருந்தார். எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏவான பின்பும் எந்த பந்தாவும் இருந்ததில்லை. இப்போதும், இவரது வீடு ஓலை வீடு தான். சரியாக 9 மாதம் மட்டும்மே எல்.எல்.ஏவாக இருந்தார்.
சில வருடங்களாக அவருக்கு இருதய நோய் இருந்துவந்தது. அதற்கான சிகிச்சையை சரியான முறையில் எடுத்துக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு முன்பு அவருக்கு உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட அதன் பின்பே அப்போலோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். அப்போது, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதன் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முன்னேற்றப்பாதையில் சென்ற அவரது உடல் பின்னர் பின்னடைவை சந்தித்தது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்க்கு தகவல் சொல்லப்பட்டது. அவர் கட்சி முன்னோடிகளுடன் சென்று நலம் விசாரித்துவிட்டு வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 28ந்தேதி காலை 08.00 மணியளவில் மரணமடைந்தார்.
இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2011ல் திருச்சி தெற்கு தொகுதி எம்.எல்.ஏவாக மரியம்பிச்சை வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் தரப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். மற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்புக்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும்போது, பாடலூரில் வாகன விபத்தில் இறந்துப்போனார். சட்டமன்றம் செல்லாமலேயே மரணத்தை தழுவியவர் மரியம்பிச்சை எம்.எல்.ஏ. 2016ல் மதுரை திருமங்களம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சீனிவேலு, வாக்கு எண்ணிக்கையின் போது மறைந்தார். அதன்பின்னர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதிமுக போஸ், ஒரு வருடத்துக்குள் இறந்தார். அதற்கடுத்து எம்.எல்.ஏவாகி சில மாதங்களிலேயே இறந்தது காத்தவராயன் தான் என்கிறார்கள்.
இதுப்பற்றி சட்டமன்ற செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, புதுக்கோட்டை தொகுதியின் எம்.எல்.ஏவாக 2011ல் இருந்தவர் முத்துக்குமரன். அப்போது அதிமுக கூட்டணியில் சிபிஐ இருந்தது. சட்டமன்றத்தில் அதிக கேள்விகளை எழுப்பி, ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவர். அவர் வெற்றி பெற்று ஓராண்டுக்குள் இறந்துவிட்டார். அவரின் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பது ஜெயலலிதாவின் கவனத்துக்கு சென்றது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின், குடும்பத்துக்கான ஓய்வூதியம் வழங்கும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை எம்.எல்.ஏவாக வெற்றி பெறுபவர் 3 ஆண்டுகளை கடந்தால் மட்டும்மே ஓய்வூதியம் வழங்கும் வகையில் விதிகள் இருந்தது. இந்த விதியை திருத்தி அதாவது ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்று கையெழுத்திட்ட நிமிடத்தில் இருந்து அவர் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கு தகுதியானவராக மாறிவிடும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
2012 முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இறந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பதவியை ராஜினாமா செய்தாலும் அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும். இதுப்பற்றி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களுக்கும் தற்போது மாதாந்திர உதவித்தொகை கிடைத்து வருகிறது என்றார். முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசுக்கு உதவித்தொகை கிடைக்கும். எம்.எல்.ஏ காத்தவராயன் இறந்துவிட்டார், அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில் அவரது அண்ணன் குடும்பத்தார்க்கு கிடைக்க வழியுண்டு என்றார்கள்.