'எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்' என்கிற சொலவடை யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தாமல் போகலாம்; ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சிக்கு ரொம்பவே பொருந்தும். அன்றாடம் தெருவோரம் கடை விரித்தால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் இருக்கும் சாதாரண சாலையோர காய்கறி வியாபாரிகளிடம்கூட போலி ரசீது மூலம் பல லட்ச ரூபாய்களைச் சுருட்டியிருப்பதாக சேலம் மாநகராட்சி மீது புகார்கள் எழுந்துள்ளன.
கரோனா தொற்று அபாயம் காரணமாக, தமிழகத்தில் மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில், காலை 08.00 மணி வரை காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விற்பனை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. சமூக இடைவெளி வேண்டும் என்பதற்காக, சேலம் ஆற்றோரம் மற்றும் ஆனந்தா இறக்கம் பகுதிகளில் இயங்கி காய்கறி கடைகள் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, அவர்களுக்கு பழைய பேருந்து நிலையம் பகுதியில் காய்கறி கடைகள் வைக்க இடம் ஒதுக்கப்பட்டது. ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதிகளில் 350- க்கும் மேற்பட்டோர் காய்கறி கடை வைத்திருந்த நிலையில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் வெறும் 100 கடைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், இடம் கிடைக்காதவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இடம் ஒதுக்கீடு பெற்ற கடைக்காரர்களிடம் தலா 1500 முதல் 5000 ரூபாய் வரை அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுபற்றி, சாலையோர வியாபாரிகள், சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ராஜூ, கன்னியம்மாள், புவனேஸ்வரி, முருகன் ஆகியோர் பேசினர். சேலம் ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதி, பஜார் தெரு ஆகிய இடங்களில் காய்கறிகள், பழங்கள் என 384 சாலையோர வியாபாரிகள் கடை போட்டு வந்தோம். ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த கடைகளை எல்லாம் ஒரே நாளில் தடாலடியாக மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. பிறகு, பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கியபோது, 100 பேருக்கு மட்டுமே கடை வைக்க அனுமதித்தனர்.
அங்கே இடம் கிடைக்காத காய்கறி கடைக்காரர்கள் ஒவ்வொரு நாளும் இன்று இடம் ஒதுக்குவார்கள், நாளை ஒதுக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அன்றாடம் மாநகராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்ததுதான் மிச்சம். ஜூன் மாதத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இயங்கி வந்த காய்கறி கடைகள், அருகிலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே ஏப்ரல், மே மாதத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடை நடத்த அனுமதி பெற்றவர்களுக்கே புதிய இடத்திலும் கடை நடத்த இடம் ஒதுக்கியுள்ளனர்.
சாலையோர காய்கறி கடைக்காரர்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தக்காலம் கடந்த மார்ச் 31- ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனாலும், மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து சாலையோர காய்கறி வியாபாரிகளிடம் அன்றாடம் சுங்கம் வசூலிக்கிறது. ஊரடங்கு காலத்தில் காய்கறி வியாபாரிகள், விவசாயிகளிடம் சுங்கம் வசூலிக்கக்கூடாது என்று அரசாங்கம் சொல்கிறது. அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.
அப்படித்தான் வசூலித்துவிட்டுப் போகட்டும் என்றாலும், அதிலும் ஒரு நியாயம் வேண்டாமா? ஒரே சீரியல் நம்பர் கொண்ட ரசீதுகள் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை பல லட்ச ரூபாய்களை மாநகராட்சி நிர்வாகம் சுருட்டிவிட்டது. மாநகராட்சிக்கு சம்பந்தமே இல்லாத குண்டர்கள், தினமும் காலையில் காய்கறி வியாபாரிகளிடம் கடைக்கு 60 ரூபாய் முதல் 550 ரூபாய் வரை சுங்கம் வசூலித்துள்ளனர்.
காய்கறி கடைக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு சதுர அடி இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு, மாநகராட்சி சட்ட விதிகளின்படி கடைக்கு தலா 20 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது. ஆனால், சரக்கு லாரியில் இருந்து சந்தைக்கு கொண்டு வந்து இறக்கப்படும்போது ஒரு பெட்டி தக்காளிக்கு 10 ரூபாய் இறக்குக் கூலியாகவும், அதை சில்லரை வியாபாரிகளின் இருப்பிடத்திற்குக் கொண்டு செல்வதற்கு கிரேடுக்கு 20 ரூபாயும், கடை நடத்த 60 முதல் 550 ரூபாய் வரையிலும் சுங்கம் வசூலி க்கின்றனர். சுங்கம் வசூலிக்கும் ஒப்பந்தக்காலம் அமலில் இருந்தபோது குத்தகைதாரர்கள் எந்தளவு வசூலித்தார்களோ, அதைவிட பல மடங்கு கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு வசூலித்து வருகிறது.
இதற்கான சுங்கம் வசூலிக்கும் புதிய ஏல ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1- ஆம் தேதி ஒப்பந்தம் முடிவு செய்யப்பட உள்ளது. இனிமேல் அதிகாலை 05.00 மணி முதல் காலை 08.00 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள் இயங்கும். மற்றபடி, நான் இந்த சீட்டுக்கு புதுசுங்க சார். எத்தனை கடைகளுக்கு அனுமதி என்ற விவரங்களை நீங்கள் ஏஆர்ஓவை கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்,'' என்றார்.
சுங்கம் வசூலிப்பதற்காக ஒரே சீரியல் நம்பரில் பல ரசீது போடப்பட்டதாக காய்கறி கடைக்காரர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க சான்சே இல்லீங்க. அவர்கள் 'பில்டப்' செய்து பேசுவதுபோல் தெரிகிறது. அது ஒண்ணுமில்லீங்க சார்... மொத்தம் 400 காய்கறி கடைக்காரர்கள் இருக்கிறார்கள். புதிதாக இடம் ஒதுக்கியபோது பலருக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் இப்படி புகார் சொல்கிறார்கள்,'' என்கிறார் செந்தில் முரளி.
''எங்க தாத்தா, எங்க அப்பா ஆகியோரும் தெருவில்தான் காய்கறி கடை போட்டார்கள். நானும் அதே தெருவில்தான் கடை நடத்தி வருகிறேன். இப்படி காலங்காலமாக கேர் ஆப் பிளாட்பார்மாக இருக்கும் நாங்கள், என் பையனையாவது படிக்க வைத்து உத்தியோகத்துக்கு அனுப்பணும்னு நினைக்கிறோம். இந்த காய்கறி கடையால ஏதோ அரை வயித்து கஞ்சிக்குதான் வருமானம் வரும். இப்போது கொரோனா என்ற பெயரில் எங்களை ஒவ்வொரு இடமாக மாநகராட்சி அதிகாரிகள் அலை க்கழிப்பதோடு, அடாவடியாக சுங்கம் வசூலித்து வயிற்றில் அடிக்கிறார்கள். இதெல்லாம் நியாயம்தானா?,'' எனக் கேட்கிறார் ஒரு காய்கறி கடைக்காரர்.
அவருடைய கேள்வி, மாநகராட்சி ஆணையரின் செவிகளில் விழுந்தால் நல்லது.