ADVERTISEMENT

ரஜினியின் அரசியல் 1989 முதல் 2020 வரை..! 

11:02 AM Dec 30, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 25 ஆண்டு காலமாக நடிகர் ரஜினியை மையமாக வைத்து அரசியல் சர்ச்சை சுற்றிக்கொண்டு இருந்தது. அதற்கெல்லாம் 2017ல் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். ரஜினியின் மீது அரசியல் வெளிச்சம் விழத்தொடஙகியது முதல், அரசியல் கட்சி கிடையாது என அறிவித்துள்ளது வரை எப்போது, என்னென்ன ஆண்டுகளில் எப்படி பேசினார் என்பதே கீழ்கண்ட பட்டியல்..

ரஜினியை மையம் கொண்ட அரசியல்:

1989ல் ரஜினியின் மாப்பிள்ளை படம் வெளியானது. அதில் வில்லியாக நடித்த ஸ்ரீவித்யா கதாபாத்திரம் ஜெயலலிதாவை வைத்து உருவாக்கப்பட்டது என பேசப்பட்டது.

1989 டிசம்பர் 14ஆம் தேதி ரஜினி, புதியதாக கட்டிய ராகவேந்திரா திருமண மண்டபத்தை கலைஞர் திறந்துவைத்தார். இதனால் ரஜினி மீது தி.மு.க. முத்திரை விழுந்தது.

1992ல் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு ரஜினி காரில் சென்றபோது, அன்றைய முதல்வர் ஜெயலலிதா வீடு உள்ள பகுதி என சோதனை என்கிற பெயரில் ரஜினியின் கார் நிறுத்தப்பட்டது. அதன்பின் வந்த அண்ணாமலை, பாண்டியன், முத்து படங்களில் ஜெயலலிதாவின் அரசியலை விமர்சனம் செய்யும் வசனங்கள் இடம்பெற்றன. இதற்கான காரணம் அவரின் காரை நிறுத்தி சோதனையிட்டதே என அப்போது பேசப்பட்டது.

1995 ஜீலை, பாட்ஷா பட வெற்றி விழாவில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிவிட்டது என பேசினார் ரஜினி. இதனால் விழா மேடையில் இருந்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவியை பறித்தார் ஜெயலலிதா.

1996 சட்டமன்றத் தேர்தலின்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என விமர்சனம் செய்தார், தி.மு.க. - த.மா.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது.

1998 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - த.மா.க. கூட்டணிக்கு வாய்ஸ் தந்தார். அந்த தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது.

2002 ரஜினி, பா.ம.க. இடையே மோதல்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பா.ம.க. போட்டியிட்ட 6 தொகுதிகளில் தோற்கடிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். தி.மு.க. கூட்டணி 40க்கு 40 வெற்றி வெற்றி பெற்றது.

12.12.12 உடல்நிலை பாதிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் சென்று வந்தபின்பு ரசிகர்களை சந்தித்தார். அப்போது உங்கள் விருப்பத்தை (அரசியல்) நிறைவேற்றுவேன் என பேசினார்.

ஏப்ரல் 2014 நாடாளுமன்ற பிரச்சாரத்துக்கு தமிழகம் வந்த மோடி, ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குபின் மோடி சிறந்த தலைவர், சிறந்த நிர்வாகி என பாராட்டு தெரிவித்தார்.

கட்சித் தொடங்குவதாக ரஜினி அறிவிப்புக்கு பின்பு:

19.5.2017 மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் வரவைத்து ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து புகைப்படம் எடுத்தபோது பேசியது, “இங்கு ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கு, சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு. சிஸ்டம் சரிப்பண்ணனும், மாற்றத்தை உருவாக்கனும், அப்போதான் நாடு உருப்படும், நாம் சேர்ந்து செய்யனும். கடமையை செய்ங்க, போர் வரும்போது பார்த்துப்போம்” என்றார்.

31.12.2017 நான் அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில், நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நாங்கள் நிற்போம். மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும். அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துடுச்சு. சாதி, மத சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வருவன்.

05.03.2018 சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள். நான் நடிகனாக என் வேலையை சரியா செய்து இருக்கேன். நீங்கள் உங்க வேலையை சரியா செய்யல. எம்.ஜி.ஆர் மாதிரி ஆகனும்னு ஒருத்தன் சொன்னால், அவனை மாதிரி பைத்தியக்காரன் யாரும் இருக்கமுடியாது. எம்.ஜி.ஆர் போல் என்னால் ஆட்சி தரமுடியும்.

9.4.2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை பாராட்டினார். மறைமுகமாக பா.ஜ.க. ஆதரவு.

19.04.2019 ரசிகர்களை, மக்களை ஏமாற்றமாட்டேன். 2021 சட்டமன்றத் தேர்தலே இலக்கு, எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்.

11.11.2019 திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசனமாதிரி, எனக்கும் பி.ஜே.பி வண்ணம், காவி வண்ணம் பூசப்பார்க்கறாங்க. திருவள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்டமாட்டேன்.

12.03.2020 லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பில், 1996ல் இருந்து அரசியலுக்கு வர்றேன், வர்றேன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. நான் அப்படி எப்போதும் சொல்லவில்லை. நான் 2017ல் தான் அரசியலுக்கு வருவன்னு முதன் முதலா சொன்னேன். சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு, மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கனும். அதை மாற்றாமல் அரசியல் கட்சி துவங்கினால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல் வைத்ததுபோல் இருக்கும். தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் கிடையாது. இதுதான் நேரம் 50 ஆண்டுகால இந்த ஆட்சிகளை அகற்றுவதற்கு. மக்கள் யோசிக்கனும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் செய்ய மக்களிடம் எழுச்சி உருவாகனும், உண்டாகிவிட்டால் எல்லாம் மாறும். அதைத்தான் நான் விரும்புகிறேன்.

அக்டோபர் 2020 ரஜினி உடல்நிலை குறித்த அதிகாரபூர்வமற்ற அறிக்கை வெளியாகி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

29.11.2020 ரசிகர் மன்ற மா.செக்களிடம் கலந்து ஆலோசிக்கிறேன், விரைவில் அரசியல் முடிவை வெளியிடுகிறேன் என்றார்.

03.12.2020 அரசியல் மாற்றம் இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல, டிசம்பர் 30ஆம் தேதி கட்சி எப்போது தொடங்கப்போகிறேன், பெயர் என்னவென அறிவிப்பேன். கட்சி தொடங்குவதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக தமிழருவிமணியன், அர்ஜுனமூர்த்தி நியமனம் என அறிவித்தார்.

15.12.2020 அண்ணாத்த படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் ஐதராபாத் பயணம்.

20.12.2020 ரஜினி கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி, ஆட்டோ சின்னம் எனத் தகவல் வெளியாகிறது.

21.12.2020 கட்சி பெயர், சின்னம் குறித்து தலைவர் அறிவிக்கும் வரை எதையும் பரப்ப வேண்டாம் என அறிவிப்பு.

24.12.2020 அண்ணாத்த படப்பிடிப்பில் பணியாற்றிய 4 பேருக்கு கரோனா உறுதி.

25.12.2020 ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் ரஜினி அனுமதி. ரத்த அழுத்தம் அதிகரிப்பால் சிகிச்சை. 3 நாள் சிகிச்சைக்கு பின்பு சென்னை திரும்பினார்.

29.12.2020 கரோனா நோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிக்கை வெளியிட்டு அதில் ரசிகர்களும் மக்களும் என்னை மன்னியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT