ADVERTISEMENT

மோடியின் வீர வசனத்தில் ஒளிந்திருக்கும் நடுக்கம்!

03:58 PM Mar 19, 2018 | vasanthbalakrishnan

மோடியும் பாஜகவும் பேசுகிற வீர வசனங்களில், வடிவேலு பேசும் "பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்" என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மைனாரிட்டி அரசாக பொறுப்பேற்ற நரசிம்மராவ் அரசு பதவிக்காலம் முடியும்போது பெரும்பான்மை பெற்றிருந்தது. ஆனால், நரேந்திரமோடி அரசு தனிப்பெரும்பான்மையுடன் பொறுப்பேற்று பதவிக்காலம் நிறைவடைய ஒருஆண்டு இருக்கும் நிலையிலேயே பெரும்பான்மை இழந்து நிற்கிறது. இந்திய அரசியலில் இது ஒரு வித்தியாசமான வரலாற்று நிகழ்வு என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இத்தனைக்கும், இந்தியாவின் முதன்மை அமைச்சராக மோடியை முன்னிறுத்துவதற்காக, மூன்று ஆண்டுகள் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து அம்பானியும், அதானியும் கார்பரேட்டுகளுடன் இணைந்து ஒரு பிம்பத்தை கட்டமைத்தார்கள்.

10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பெரியண்ணன் மனப்பான்மையை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்த நேரம். 2ஜி விவகாரம், ஈழப்பிரச்சனை உள்ளிட்டவற்றில் கூட்டணிக் கட்சியான திமுகவை சிக்கலில் சிக்கவைத்து வேடிக்கை பார்த்தது.


கார்பரேட்டுகளின் உதவியோடு, அன்னா ஹஸாரே போன்ற திடீர் ஊழல் எதிர்ப்பு போராளிகள் லோக்பாலுக்காக போராட்டம் நடத்தினார்கள். அவரோடு, பதஞ்சலி ராம்தேவ், கெஜ்ரிவால், கிரண்பேடி போன்றவர்களும் போராடினார்கள் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

(காங்கிரஸ் கொண்டுவந்த லோக்பால் மசோதாவை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் அதைப்பற்றி அன்னா ஹஸாரேவும் மற்றவர்களும் கண்டுகொள்ளவில்லை என்பதும் வேறுவிஷயம்.)

அப்படிப்பட்ட அரசு எதிர்ப்பு சூழ்நிலையில், முக்கியமான மாநிலக் கட்சிகளின் கூட்டணியோடு போட்டியிட்ட பாஜக எதிர்பாராத விதமாக 282 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. கூட்டணிக் கட்சிகளையும் இணைத்தே அமைச்சரவை பதவியேற்றது.



இப்போது, மோடியின் தன்னிச்சையான போக்கு, பாஜகவின் பெரியண்ணன் மனப்பான்மை, தென் மாநிலங்களை புறக்கணிக்கும் போக்கிற்கு எதிராக தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றன.

பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலே இருந்து அந்தக் கட்சி தனது இமேஜை காப்பாற்றுவதற்காக பலவிதமான தந்திரங்களை கையாளுகிறது. குறிப்பாக தனது தோல்விகளை மறைக்க மாநில ஆளுநர்களைப் பயன்படுத்தி, சில மாநில கூட்டணி அரசுகளில் இடம்பெறுவது அதில் ஒன்று.

பாஜக சந்தித்த இடைத்தேர்தல்களின் முடிவுகளையும், மாநில சட்டமன்ற தேர்தல்களில் அந்தக் கட்சி கையாண்ட தந்திரங்களையும் கவனித்தால் இந்த உண்மை புரியும்.

மோடி பதவியேற்ற 100 நாட்களிலேயே இடைத்தேர்தல் தோல்விகள் தொடங்கிவிட்டன. அந்தத் தோல்விகளை மூடி மறைக்க காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவதை ஊதித் தப்பிப்பது பாஜக கடைப்பிடிக்கும் இரண்டாவது வழி.



இந்தியாவில் பாஜக 21 மாநிலங்களை ஆட்சி செய்வதுபோல பாஜக தலைவர்கள் பெருமை அடிக்கிறார்கள். அது உண்மையா என்றால் இல்லை.

பாஜக தனித்து ஆட்சி செய்வது சில மாநிலங்களில்தான். குஜராத், சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாஜக தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது.

நாகாலாந்து, கோவா, அருணாச்சல பிரதேசம், அசாம், ஹிமாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், மகாராஸ்டிரா, மணிப்பூர், பிகார், ஜம்மு காஷ்மீர், மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பெரிய கட்சியாகவோ, சிறிய கட்சியாகவோ கூட்டணி ஆட்சியில் பங்கேற்கிறது.

இந்த உண்மையை மறைத்து, ஆட்சிப் பொறுப்பேற்ற போது இருந்த 282 இடங்களில் 9 இடங்களை இடைத்தேர்தலில் இழந்து 273 இடங்களை மட்டுமே வைத்திருக்கும் பரிதாபமான நிலையை மறைத்து பாஜக தலைவர்கள் வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், இந்நிலையில்தான், உ.பி., பிகாரில் நடைபெற்ற 3 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இவற்றில் கோரக்பூர், புல்பூர் தொகுதிகள் முதல்வர் யோகி, துணை முதல்வர் மவுரியா ஆகியோர் வெற்றிபெற்ற தொகுதிகள் ஆகும். பிகாரில் அராரியா தொகுதியில் லாலுவின் ஆர்.ஜே.டி. வெற்றிபெற்றதன் மூலம் பாஜகவுடன் நிதிஷ்குமார் அமைத்த கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


2019 தேர்தலில் மீண்டும் மோடிதான் ஜெயிப்பார் என்று பாஜக கூறிவரும் நிலையில், இந்தத் தோல்விகள் அந்தக் கட்சியை இடிபோல தாக்கியிருக்கிறது. அதாவது, தற்போதைய நிலையில் மக்களவையில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடத்தைக் காட்டிலும் ஒரு இடம் குறைவாகவே வைத்திருக்கிறது.

பாஜகவின் இந்த நிலையையும், அந்தக் கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையையும் புரிந்துகொண்ட தெலுங்குதேசம், பாஜகவுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் தங்களுக்காக போராடும் நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பவன் கல்யாணை பாஜக கொம்பு சீவியது.

“தமிழ்நாட்டில் அதிமுகவை ஆட்டிப் படைப்பதைப் போல எங்களை ஆட்டிப் படைக்க முடியாது. வரியை வாரிக் கொடுப்பது தென்மாநிலங்கள். ஆனால், வாழ்வது வட மாநிலங்களா?” என்று காட்டமாக கேட்டார் நாயுடு.

அந்தக் கட்சியின் எம்.பி. முரளிமோகன், தெற்கில் உள்ள மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்தால், தென்னிந்தியா தனிநாடாகும் என்று எச்சரித்தார்.


இத்தகைய பரபரப்பான நிலையில் பாஜக கூட்டணியில் இருந்தே தெலுங்குதேசம் விலகுவதாக நாயுடு அறிவித்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவற்றுடன் இணைந்து மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்குதேசம் முடிவெடுத்துள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறுமா என்பதைத் தாண்டி, இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் கட்சிகளை அறிந்துகொள்ளகூடிய வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைக்கும். மோடி தலைமையிலான அரசு மைனாரிட்டி அரசு என்பது வெளிப்படும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

ஆனால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுவதை தடுக்கவே பாஜக அதிமுகவின் தயவை நாடியிருக்கும் அவலம் அம்பலமாகி இருக்கிறது.

அதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி அமளியில் ஈடுபடுவதைப்போல அதிமுக நாடகம் நடத்துகிறது. அதையே காரணம் காட்டி அவையை ஒத்திவைத்து பாஜக நாடகம் ஆடி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கே அனுமதி மறுக்கிறது

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT