Skip to main content

நீட் எனும் ஈட்டியால் குத்திக் கிழிக்கப்படும் சமூகநீதி!

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்களே… அதை யாரும் பாராட்ட மாட்டார்கள். நீட்டை அரசியலாக்குவதே வேலையாக இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள்.
 

neet

 

 

யார் அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்? தேர்ச்சி பெற்றவர்களுக்கெல்லாம் மருத்துவ இடங்கள் இங்கே இருக்கின்றனவா? இருக்கிற இடங்கள் போக மீச்சமுள்ள தேர்ச்சி பெற்ற 7 லட்சம் பேருக்கு என்ன வாய்ப்பு வைத்திருக்கிறீர்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் பதிலே இல்லை.
 

அனிதாவை பலிகொடுத்த பிறகு நடைபெறும் மூன்றாவது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த தேர்வில் இந்தியா முழுவதும் மொத்தமாக 14 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதாவது மொத்தத்தில் 56.50 சதவீதம் பேர்.
 

தேர்ச்சி பெற்றவர்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த நளின் கண்டேல்வால் என்ற மாணவர் 720க்கு 701 மார்க்குகளும், டெல்லி, மற்றும் உபியைச் சேர்ந்த இரு மாணவர்கள் 720க்கு 700 மதிப்பெண்களும் எடுத்திருக்கிறார்கள்.
 

ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 7 லட்சத்து 80 ஆயிரம் பெண்களில் 4 லட்சத்து 45 ஆயிரத்து, 761 பேரும், 6 லட்சத்து 30 ஆயிரம் ஆண்களில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 278 பேரும் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
 

அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்த்து அரசுக்கு இருக்கிற 36 ஆயிரத்து 615 இடங்களுக்கும் தேர்ச்சி பெற்றிருக்கிற 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 மாணவர்களுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கிறது?
 

இருக்கிற இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு மிச்சமுள்ள மாணவர்களுக்கு ஏது இடம்? இவர்களுடைய தேர்ச்சி அடுத்த ஆண்டுக்கோ, அடுத்துவரும் ஆண்டுகளுக்கோ மருத்துவ இடங்களைப் பெறுவதில் முன்னுரிமை பெற்றுத்தருமா? என்ற கேள்விகளை பெற்றோர் எழுப்புகிறார்கள்.
 

neet suicide

 

 

ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்காக ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்பரேட் கம்பெனிகள் நடத்தும் கோச்சிங் சென்டர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி படிப்பார்கள். அவர்களில் சில லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். சில ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டும் இடம்பெற்று படிக்கப் போவார்கள். கனவுகளுடன் லட்சக்கணக்கில் செலவழித்து படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விரல்சூப்பிக் கொண்டு அடுத்த ஆண்டும் நீட் தேர்வுக்கு காத்திருக்க வேண்டும். ஒரு பேச்சுக்கே வைத்துக்கொண்டாலும் 1 லட்சம்பேர் 720க்கு 700 மார்க் எடுத்துவிட்டால் எந்த அடிப்படையில் இடங்களை நிரப்புவார்கள்? மிச்சமிருக்கிற மாணவர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
 

இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றிருக்கிற மாணவர்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 20 ஆயிரத்து 9 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 63 ஆயிரத்து 749 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிற நிலையில், உயர்ஜாதியினர் 7 லட்சத்து, 4 ஆயிரத்து 335 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் எவ்வளவுபேர் இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்ச்சி பெற்றவர்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த கணக்கு மட்டும் தெரியவில்லை என்றே போய்விடுகிறது.
 

இந்தத் தேர்ச்சி கணக்கு அகில இந்திய அளவிலானது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தேர்ச்சி விகிதம் உயர்சாதியினரின் தேர்ச்சி விகிதத்துக்கு மிகக் குறைவாக இருப்பதையும், மத்திய அரசு அமல்படுத்தும் 49.5 சதவீத இடஒதுக்கீடுக்கும், தமிழகம் கடைப்பிடிக்கும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கும் தேர்ச்சி பெற்றவர்களை எப்படி நிரப்புவார்கள் என்பதும் பெற்றோரின் இன்னொரு முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
 

தேர்ச்சி பெற்றவர்களிலேயே லட்சக்கணக்கான மாணவர்கள் இடம் கிடைக்காமல் ஏமாறப் போகும் நிலையில், தேர்வு எழுதி பெயிலாகி தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த அரசு தரும் பதில் என்ன?
 

எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, மிக சிம்ப்பிளாக, நீட்டை வைத்து அரசியல் செய்வதாக டாக்டர் தமிழிசை போன்றவர்கள் இன்னமும் சொல்வது, சமூக நீதியைக் குத்திக் கிழிக்கும் செயல் அல்லவா?

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.