ADVERTISEMENT

பூங்குன்றன் சொன்ன கொடநாடு ரகசியம்! எடப்பாடியிடமிருந்து கைநழுவும் அ.தி.மு.க.!

05:55 PM May 11, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கெடநாடு வழக்கு அ.தி.மு.க.வில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. ஜெ. இறந்த பிறகு அ.தி.மு.க. அரசிலும் கட்சியிலும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இருந்த எடப்பாடி, தன்னைச் சுற்றியே கட்சியினரை வலம்வர வைத்தார். ஆனால், அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது.

தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்தவர் துணை அமைப்பாளர் வைத்திலிங்கம். அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இவரை ரவுண்டு கட்டி பேசவிடாமல் செய்தார்கள். அவரது தஞ்சை மண்டலத்தில் "எடப்பாடிக்கு நெருக்கமான வேலுமணி, கட்சி விவகாரங்களில் தலையிடுகிறார்' என புகார் சொல்லி பேச ஆரம்பித்த வைத்திலிங்கத்தை... எடப்பாடிக்கு நெருக்கமான மற்றொரு அமைச்சரான சி.வி. சண்முகம் ஒருமையில் பேசினார். "வைத்திலிங்கம் ஓ.பி.எஸ்.சுடன் ஜோடி சேர்ந்து சசிகலா ஆதரவு நிலை எடுத்துப் பேசுகிறார்' என்பது எடப்பாடியின் குற்றச்சாட்டு. அதைத்தான் மோசமான வார்த்தைகளில் சி.வி.சண்முகம் எதிரொலித்தார். அவருடன் வேலுமணியும் இணைந்துகொள்ள... டென்ஷனான வைத்திலிங்கம் கூட்டத்திலிருந்து வெளியேறினார். அவரை மற்றவர்கள் சமாதானப் படுத்தினார்கள்.

சி.வி.சண்முகத்தின் சத்தம் கடந்த சில நாட்களாக வெளிவரவில்லை. அதேநேரத்தில் தஞ்சை மண்டலத்தில் வைத்திலிங்கத்தின் உட்கட்சித் தேர்தலில் பெரும் வெற்றிபெற்றார். வைத்திலிங்கத்தின் வெற்றியை சசி அணியின் வெற்றியாகவே அ.தி.மு.க.வினர் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் வேலுமணியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையான நேரம் தலைகுனிந்து வேலுமணி அமர்ந்திருக்கிறார். அதேநேரம் ஓ.பி.எஸ். சட்டமன்றத்தில் பின்னி யெடுக்கிறார். சமீபத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு நிதி உதவி என முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியபோது, தமிழக அரசின் சார்பாக மத்திய அரசுக்கு எதிராக பேசினார். அதைப் பாராட்டிப் பேசிய ஓ.பி.எஸ்., "நான் எனது பங்காக ஐம்பது லட்ச ரூபாய் தருகிறேன்'' என அறிவித்தார். எடப்பாடியும் அருகில்தான் அமர்ந்திருந்தார். ஓ.பி.எஸ். அறிவித்ததும் எடப்பாடி முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர், கட்சியின் பொருளாளர் பதவிகள் ஓ.பி.எஸ்.ஸிடம் இருக்கிறது. ஓ.பி.எஸ். நிதி தருகிறார் என்றால், ஸ்டாலினின் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு நகர்வுகளுக்கு அ.தி.மு.க. ஆதரவு தருகிறது என்றுதானே அர்த்தம்.

அ.தி.மு.க. சார்பில், ஸ்டாலினின் இலங்கை தமிழர் ஆதரவு முயற்சிக்கு ஆதரவு தருவது, அரசுக்கு நிதி தருவது என்றால், எடப்பாடி உட்பட கட்சிக்காரர்களிடம் கேட்க வேண்டும், அதை பற்றி விவாதிக்க வேண்டும். தி.மு.க. அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வா என பேச்சு வரும். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல், "நான் எனது நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் தருகிறேன்' என ஓ.பி.எஸ். சொன்னதும் அதையடுத்து வி.சி.க ஆளூர் ஷாநவாஸ், சி.பி.ஐ. மாரிமுத்து மட்டுமல்ல பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரனும் தனது சம்பளத்தில் ஒரு மாத நிதி தருவதாக அறிவித்தார்கள். உடனே முதல்வர் ஸ்டாலின் ஓ.பி.எஸ்.ஸை பாராட்டினார்.


"எடப்பாடியால் ஒன்றும் பேச முடியவில்லை' என சுட்டிக்காட்டும் அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க.வில் எடப்பாடியின் அதிகார வலிமை குறைந்து வருகிறது. சமீபத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக எடப்பாடி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதற்காக சட்டமன்ற கூட்டத் தொடரில்கூட கலந்துகொள்ளாமல் சேலத்திலேயே எடப்பாடி தங்கியிருந்தார். இந்த முறை எடப்பாடியைத் தோற்கடிக்க சசிகலா அணியினர் வேலை செய்வார்கள் என தடுமாறி, எடப்பாடி அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட இருந்தவர்களை சமாதானப்படுத்தினார். அவர் மா.செ. தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தப் பதவியை தன்னுடைய நிழலாக இருந்த இளங்கோவனுக்கு கொடுத்தார். எடப்பாடி போட்டியாக ஜெ. காலத்தில் இருந்தவர்தான் இந்த இளங்கோவன். எடப்பாடிக்கு பதில் மா.செ. பதவி அவரைத் தேடி வந்தபோது அவர் எடப்பாடிக்கு விட்டுக் கொடுத்தார். அப்படி மா.செ. பதவியை ஜெ.வும் சசியும் இளங்கோவனுக்கு வழங்கக் காரணம், இளங்கோவன் மனைவி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் ஜெ.வுக்கு நெருக்கமான நபராக இளங்கோவன் விளங்கினார்.

அப்படி அவருக்கு வந்த மா.செ. பதவியை எடப்பாடிக்கு விட்டுக்கொடுத்து எடப்பாடிக்கு நெருக்கமானார். அத்துடன் எடப்பாடி, சசிகலா வகையறாக்களுக்கு பாலமாக இருந்தார். அந்த பாலத்தின் வழியாகத்தான் எடப்பாடி முதல்வர் பதவியை அடைந்தார். ஆனால் இளங்கோவனுக்கு வேறு எந்த பதவியும் கொடுக்காமல் நிழல் வேலைகளுக்கு மட்டுமே எடப்பாடி பயன்படுத்தி வந்தார். அந்த நிழல் வேலைகளில் ஒன்றுதான் கொடநாடு கொள்ளை. அதில் இளங்கோவன் சிக்கிக்கொண்டார். கொடநாடு விவகாரத்தில் இளங்கோவனை போலீசார் நெருங்கி வருகிறார்கள் இளங்கோவன் வீடு அமைந்துள்ள புத்திரகவுண்டன்பாளையம் தெற்கு பக்கத்தில் உள்ள சேலம் ஆத்தூரில், கொடநாட்டில் கொள்ளையடிப்பதில் முக்கிய ஆளாக இருந்த கனகராஜ் படுகொலை செய்யப்பட்டார். கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை இளங்கோவன்தான் கனகராஜிடம் இருந்து பெற்று எடப்பாடிக்கு கொடுத்தார். கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் இளங்கோவன் வசம் இருக்கிறது என கொடநாடு விவகாரத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதால், போலீசாரின் சந்தேகப் பார்வை இளங்கோவனின் மேல் எழுந்துள்ளது.

அதனால் எந்நேரமும் போலீசார் இளங்கோவன் மேல் கை வைப்பார்கள் என்கிற சூழல் எழுந்துள்ளது. நிச்சயம் கைது என்கிற கத்தி தொங்கும் இளங்கோவனுக்கு, தனது மா.செ. பதவியை விட்டுக் கொடுத்து, வழக்குகள் வந்தாலும் அ.தி.மு.க. துணை நிற்கும் என்கிற மெசேஜை எடப்பாடி உருவாக்கியிருக்கிறார். இன்று மா.செ. பதவியை விட்டுக்கொடுத்த எடப்பாடி நாளை அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் விட்டுக்கொடுக்க நேரிடும். அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு எதிரான வேலைகள் அவ்வளவு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.


வைத்திலிங்கம் தலைமையில் தென் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் ஒன்றிணைந்து எடப்பாடிக்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். எடப்பாடி, இளங்கோவனுக்கு மா.செ. பதவியை விட்டுக்கொடுத்ததை எதிர்த்து சேலம் மாவட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்கள்.


சசிகலா தனது பங்கிற்கு எடப்பாடி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறார். அதனால் எடப்பாடி, சசி தரப்பிற்கு இளங்கோவன் மூலம் சமரச தூது அனுப்பினார். இளவரசியின் மகன் விவேக்கிற்கு போன் போட்டு சமரசம் பேசினார். சசிகலா சிறையில் இருக்கும் போதும் எடப்பாடி சார்பில் இளங்கோவன் சசியிடம் டிடிவி தினகரனை பற்றி புகார் சொல்லி சமரசம் பேசினார். ஆனால் தற்போது இளங்கோவனின் சமரசத்தை சசிகலா ஏற்கத் தயாராக இல்லை என்கிறது மன்னார்குடி வட்டாரங்கள்.

கொடநாடு விசாரணைக்கு போன சஜீவன், அவரது தம்பி சிபி ஆகியோர் ஒரு பயம் கலந்த முகத்துடன்தான் உலா வருகிறார்கள். அவர்களைத் தற்போது விட்டுவிட்டாலும் மறுபடியும் எந்நேரமும் கைது செய்வார்கள் என்கிற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. சிபியின் கார் கொடநாடு கொள்ளை நடக்கும்போது அந்தப் பகுதியில் இருந்ததாக அவரது செல்போன் டவர் லொகேஷனை அடுத்து போலீஸார் கேள்வி கேட்டு வருகிறார்கள். அதேபோல், போயஸ் கார்டனில் ஜெ. காலத்தில் செல்வாக்காக இருந்த பூங்குன்றனிடம் கொடநாடு தொடர்பாக பல ரகசியங்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்கள் போலீசார். இவர்களை விசாரிக்கும்போது பெரும்பாலும் தனியாகவே வாக்குமூலம் பெறுகிறார் ஐ.ஜி. சுதாகர். அவற்றை நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார் என்கிறார்கள் காவல்துறையினர்.


கேள்வி-பதில் பாணியிலான விசாரணையைத் தாண்டி, ஒரு பெரிய ரகசியப் புதையலே கொடநாடு வழக்கில் இருக்கிறது. அந்த ரகசியப் புதையல் அ.தி.மு.க.வில் எடப்பாடியை தாக்கிவிடும். ஜெ. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி விசாரணைக்கு ஆஜரானால், அ.தி.மு.க.வில் எடப்பாடியின் கை பலவீனமாகிவிடும். எடப்பாடி ஆதரவுடன் தான் கொள்ளை நடந்தது என சசிகலா சொல்லத் தயாராக உள்ளார். அதற்காகத்தான் எடப்பாடி சமரச தூதை சசிக்கு அனுப்ப முயற்சிக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT