இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியான ஊர்க்காரர்கள், டிரைவரை தேடினார்கள். ஆள் எஸ்கேப். உயிர்பயத்தில் இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த 72 வயது செல்வராஜையும், திருவள்ளூரைச் சேர்ந்த 74 வயது அன்னம்மாளையும் கீழே இறக்கிவிட்டு, ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கினர். போலீசுக்கும் புகார் தெரிவிக்கப்படவே, அவர்கள் வந்து விசாரித்ததில், இறந்து போயிருந்தவர் பெயர் விஜயகுமார் என்பது தெரியவந்தது. அவருக்கு வயது 75.
மாவட்ட சமூகநல அலுவலர் சங்கீதா, ""பிணத்தை ஏற்றிக்கொண்டு, அதில் காய்கறியுடன் இரண்டு முதியவர்களை அடைத்து அழைத்து வந்தது குற்றம். அதற்கான அறிக்கையை ஆர்.டி.ஓ மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையை தற்போது மத்தியக்குழு நடத்தி வருகிறது'' என்றார்.
காப்பகத்தை நடத்திவரும் பாதர் தாமஸ் நம்மிடம் விளக்கமளித்தார். ""மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் முதியவர்களுக்கு ஆதரவளிக்கும் இல்லம் இது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். இங்கே வேலை செய்ய வரும் ஆட்களின் எண்ணிக்கை குறைவு. சம்பவத்தன்று, மற்ற இரண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் லீவ் என்பதால், இருந்த ஒரு டிரைவர் மட்டும் தாம்பரம் இரும்புலியூரில் உள்ள எங்கள் கிளையில் இறந்துபோன பிணத்துடன், காய்கறி மூட்டைகளுடன் இரண்டு முதியவர்களை அழைத்து வந்துள்ளார். இது எனக்கே தெரியாமல் நடந்தது. மற்றபடி, முதியவர்களிடம் உடலுறுப்புகள் திருடப்படுவதாகவும், அவர்களை சாகவிட்டு, உடலிலிருந்து எலும்புகளை எடுத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாகச் சொல்வதும் முற்றிலும் தவறானது'' என்றார்.
அவரே மேலும், ""யாராலும் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட முதியவர்கள் இறக்கும் நிலையில் உள்ளபோது, போலீசாரால் இங்கு கொண்டுவந்து விடப்படுகிறார்கள். கடந்த ஏழு ஆண்டில் 1590 பேரை அடக்கம் செய்துள்ளோம் அவர்களின் விவரம் போட்டோவுடன் இங்குள்ள பதிவேட்டில் உள்ளது. ஆகவே அவர்களைப் புதைத்தால் சுற்றுப்புற நிலத்தடி மாசு ஏற்படும் என்பதால், நிறைய அறைகளைக் கொண்ட நவீன கல்லறையைக் கட்டியுள்ளோம். இது இந்தியாவில் முதன்முறை என்பதால் இதைப்பற்றி அறியாதவர்களும் வேறு எதிர்பார்ப்பு உள்ளவர்களும் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள்'' என்றார்.
இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், இறந்த உடலுடன் உயிருடன் போராடியவர்களையும் காய்கறிகளையும் ஏற்றிச் சென்றதே மக்களின் சந்தேகத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டிய காப்பகங்களில் நிலவும் பலவித விதிமீறல்கள், ஆள் பற்றாக்குறை, அலட்சியம், அரசு அதிகாரிகள் கேட்கும் லஞ்சம், லோக்கல் அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு ஆகியவை சேவை மனப்பான்மையை மீறிய செயல்பாடுகளுக்குக் காரணமாகின்றன. சொந்த பந்தங்களெல்லாம் கைவிட்ட நிலையில், மனதளவில் குற்றுயிரான முதியவர்களுக்கு மரணப்படுக்கையாகின்ற கருணை இல்லங்கள், கருணைக் கொலை இல்லங்களாக மாறுகின்றன.