ADVERTISEMENT

பிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

01:43 PM Apr 06, 2020 | Anonymous (not verified)

தமிழகத்தில் கொரோனா ஆபத்து 3வது கட்டமான சமூகத் தொற்றை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் என்கிற இடத்தில் உள்ள லைஃப் ஸ்டைல் என்கிற கடையில் ஏற்பட்ட சம்பவத்தை இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். சென்னை மாநகராட்சி ஒரு ரெட் கார்னர் எச்சரிக்கையை பிறப்பித்தது. அதன்படி மார்ச் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை லைஃப் ஸ்டைல் கடைக்கு வந்து சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உடனடியாகச் சென்னை மாநகராட்சியில் தொடர்பு கொள்ள வேண்டும். அந்தக் கடையில் வேலை செய்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது என்பதே அந்த எச்சரிக்கை.

ADVERTISEMENT

அந்தக் கடைக்கு வந்த கேரளத்தைச் சார்ந்த ஒருவர் இலங்கைக்குச் சென்ற பிறகு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக அங்கு வேலை செய்த இரு பெண்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. அவர் எங்கெல்லாம் சென்றிருக்கிறாரோ, அதையெல்லாம் கண்டுபிடித்து அங்கிருக்கும் அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் கண்டுபிடிக்கும் வேலையில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.

ADVERTISEMENT



அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகரத்தில் உள்ள இரண்டு பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள் இரண்டு சர்ச்சுகளில் நடைபெற்ற விழாக்களில் பங்கெடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களது உறவினர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.இந்த இரண்டு சம்பவங்கள் மூலமாக நூற்றுக்கணக் கானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். இதுபோல கோவை ஈஷா மையத்தில், ஜக்கி வாசுதேவ் பிப்ரவரி 21ஆம் தேதி லட்சக் கணக்கானோர் கலந்து கொண்ட சிவராத்திரி விழாவை நடத்தியிருக்கிறார். அதில் ஒரு கொரோனா நோயாளி இருந்தால் கூட அவர் நூற்றுக்கணக்கான பேருக்கு கொரோனா நோயைப் பரப்பியிருப்பார் எனப் பயத்துடன் சொல்கிறார்கள் அதிகாரிகள்.



மஹா சிவராத்திரி 2020. பிப்ரவரி 21- உலகெங்கிலும் உள்ள ஈஷாவின் பக்தர்கள் சங்கமிக்கும் இடம் கோவை வெள்ளியங்கிரி மலை. என ஜனவரி ஆரம்பத்தில் இருந்தே ஜக்கியின் விளம்பரங்கள் கோவை முழுக்க கொடிகட்டிப் பறந்தன .

அந்த விளம்பரங்கள் இணையம் வாயிலாக உள்வாங்கப்பட்டு ஆயிரக் கணக்கில் வெளி நாட்டவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் என கோவை விமான நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வந்து இறங்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் வந்திறங்கிய போது கொரோனா தொற்று பரிசோதனை யாருக்கும் செய்யப்படவில்லை என்பதுதான் இப்போது கொரோனா நோய் பரவ முக்கியக் காரணமாக விளங்குகிறது எனச் சொல்லப்படுகிறது. யாரும் பரிசோதனை செய்யப்படவில்லையா என விமான நிலையத்தில் பணியாற்றும் ஓர் அதிகாரியிடம் அலைபேசியில் கேட்டோம்.



மஹா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள பாரீஸ், லண்டன், ஜோகன்ஸ்பர்க், டர்பன், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ, ஜூலுலாண்ட், நாஷ்வில்லி, லெபனான், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர்... என பல நாடுகளில் இருந்து நிறைய பேர் வந்து குவிந்தார்கள். அவர்கள் யாருக்கும் எந்தவித டெஸ்ட்களும் செய்யப்படவில்லை. மும்பை, பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் எந்த டெஸ்டும் செய்யப்படவில்லை.

போதாக்குறைக்கு இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார் என்பதால் ஏர்போர்ட்டில் மெடிக்கல் கெடுபிடிகள் எதுவும் இல்லை. ஜக்கி வாசுதேவின் வாகனங்களே விருந்தினர்களைக் கூட்டிக் கொண்டு போயின என்கிறார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் பாடகர்கள், சீரியல் நடிகைகள் என பல பேர் பங்கெடுத்த சிவராத்திரி விழாவில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர்கள் வந்து கலந்து கொண்டனர். ஈஷா யோகா மையத்திற்கு யார் வந்தாலும் அதைப்பற்றி அவர்கள் யாரிடமும் தெரிவிக்க மாட்டார்கள்.



பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜுலி வந்த போது கூட யாருக்கும் ஈஷா மையம் தெரிவிக்கவில்லை என வெளிநாட்டு பயணிகள் வருகை மறைக்கப்படுவது பற்றி குற்றம் சுமத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சிவராத்திரிக்காக இங்கே வந்த வெளி நாட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு ஈஷாவின் கட்டிடங்களுக்குள்ளேயே தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், முதல்வர் எடப்பாடியே ஈஷாவுக்குள் இருக்கும் ஒவ்வொரு வரையும் பரிசோதனை செய்ய வேண்டும். அப்படி கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம்... எனக் கடந்த 1-ந் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பு வந்ததுமே ஈஷா உடனடியாய் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில்... "இங்கே மஹா சிவராத்திரிக்காக வந்த வெளி நாட்டவர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு முன்பே எல்லோரும் ஈஷாவை விட்டு தங்கள் நாடுகளுக்கு கிளம்பி விட்டார்கள் . ஒருவர்கூட வெளி நாட்டவர்கள் இங்கே இல்லை.

எங்கள் ஈஷா மருத்துவர்களை வைத்து பரிசோதனை செய்ததில் இங்கே தங்கி உள்ள வாலண்ட்ரீஸ் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. அதனால் யாரும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி யாரேனும் கொரோனா இங்கிருந்துதான் பரப்பப்பட்டது எனச் சொன்னால்... அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றது.


சிவராத்திரிக்கு வந்த வெளி நாட்டினர்கள் கோவிட்19 வைரஸையும் ஏன் கொண்டு வந்திருக்க மாட்டார்கள் எனக் கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்களுக்கு ஈஷா தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. "நாங்கள் கொரோனா பாதிப்பு வந்த பிறகுதான் சிவராத்திரி விழாவை நடத்தினோம். அதனால் கொரோனா பாதிப்புக்குள்ளான கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து யாரும் விழாவிற்கு வரவேண்டாம்'' எனச் சொல்லிவிட்டோம் என்கிறது ஈஷா.

அதேநேரத்தில், ஈஷா மையத்திற்குள் 150க்கும் அதிகமானோர் ஒரு பெரிய கட்டிடத்தில் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும், பெரும்பாலானவர்கள் வெளி நாட்டவர்கள்தான் என்றும், அவர்களுக்கு ஈஷாவில் உள்ள மருத்துவர் களால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்கிறார்கள் சுற்றுப்புறவாசிகள். மேலும் அவர்கள், ஒரு வெளிநாட்டவர் கூட இங்கே வசிக்கவில்லை என்றால் போலீசையும், சுகாதாரத் துறையினரையும் உள்ளே வரவழைக்க வேண்டியதுதானே! அரசாங்கமே... ஈஷாவுக்குள் இருக்கிறவர்களை பரிசோதனை செய்ய வேண்டும்... எனச் சொன்ன பின்னால்... யாரும் சோதிக்கத் தேவையில்லை என ஏன் ஜக்கி பதற வேண்டும்? என்கிறார்கள்.

ஈஷாவின் விதிமுறைகளுக்கு எதிராகப் போராடி வரும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நம்மிடம், கேரளாவில் எப்படி அமிர்தானந்தமயி ஆசிரமத்திற்குள் போலீஸ் நுழைந்து அவரின் சீடர்களிடம் கொரோனா வைரஸ் இருக்கிறதா...? என ஆராய்ந்ததைப்போல இங்கே ஜக்கி வளாகத்திற்குள்ளும் நுழைந்து பரிசோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால்... ஆசிரமத்திற்குள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்...? என ஜக்கி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்'' என்கிறார்.




டெல்லி மாநாடு போலவே, ஈஷா மகாசிவராத்திரியும் கொரோனா தொற்றைப் பரப்பியிருக்கக்கூடும் என்ற அச்சமும் சந்தேகமும் பரவியிருக்கும் நிலையில், இதைப்பற்றி கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் ஈஷா நடத்திய சிவராத்திரி விழாவிற்கு எத்தனை வெளிநாட்டினர் எங்கெங்கு இருந்து வந்தார்கள் என்ற பட்டியல் உங்களிடம் உள்ளதா எனக் கேட்டோம்.

"விழாவுக்கு வந்தவர்கள் யார் என எங்களிடம் பட்டியல் இல்லை. வந்தவர்கள் பலர் சென்றுவிட்டார்கள். ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பால் சர்வதேச விமான போக்குவரத்து முடக்கப்பட்டதால் விமானம் கிடைக்கவில்லை. அவர்கள் ஈஷா மையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்'' என்றார்.

ஈஷா மையத்திற்குள் போலீஸ் உட்பட அரசு அதிகாரிகள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு தங்கியிருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்கள் அந்த வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலும் அறைகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிவதற்காகத் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் எத்தனைப் பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. அனைத்தையும் ஜக்கி வாசுதேவ் தலைமையில் ஈஷா மையமே கவனித்துக்கொள்கிறது. பிரதமரும் முதல்வரும் சுகாதாரத்துறையும் வலியுறுத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா எனத் தெரிந்து கொள்ள முடியாத மர்ம தீவாகவே ஈஷா யோகா மையம் இயங்கி வருகிறது.

இதெற்கெல்லாம் முத்தாய்ப்பு வைக்கும்படி ஈஷா மையத்தில் சுடுகாடு ஒன்று இருக்கிறது. அந்த மையத்தில் இறப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெளிஉலகுக்கு தெரியாமல், அங்கேயே உரிய முறையில் இறுதிச்சடங்கு நடத்தி முடித்துவிட ஜக்கி வாசுதேவால் முடியும் என அதிர்ச்சி தகவல்களோடு சமீபகாலமாக ஈஷா யோகா மையத்தில் ஆம்புலன்ஸ்களும் அமரர் ஊர்திகளும் சுற்றித் திரிகின்றன என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள். வேறு எங்கேயோ கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பணக்கார நோயாளிகள்கூட, ரெஸ்ட் எடுத்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் மையமாக மாறிவிட்டதோ ஈஷா மையம் என சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.

ஈஷா மையத்திற்கு தினமும் இருபது வட மாநிலத் தொழிலாளர்கள்தான் செல்கிறார்கள். சுத்தப்படுத்தும் பணிகளுக்குச் செல்லும் அவர்கள் தவிர வேறு யாரும் செல்வதில்லை. மாவட்ட அமைச்சரும் ஈஷா மையத்துக்கு நெருக்கமானவருமான அமைச்சர் வேலுமணிகூட சமீப காலமாக அங்கு ஈஷா மையத்திற்குச் செல்வதில்லை.

ஆனால் ஈஷா மையத்தில் வரம்பு மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அங்கீ காரம் தருவதற்காக, மலையக பகுதிகளில் வரம்பு மீறி கட்டப்படும் கட்டிடங்களை அந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளே அங்கீகாரம் தரலாம் என ஒரு புதிய சட்டத்தைச் சத்தமில்லாமல் தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறது என அதிர்ச்சிகரமான தகவல்களைைைச் சொல்கிறார்கள் அந்தப் பகுதி வாசிகளும் சமூக ஆர்வலர்களும்.

இதெல்லாம் உண்மையா எனக் கோவை மாவட்ட கலெக்டர் ராஜா மணியிடம் கேட்டோம்.

அதற்கு அவர், அரசின் ஊரடங்கு உத்தரவு வந்த பிறகு நான் அந்த மையத்தை மூடவைத்தேன்.அங்கிருந்த 153 வெளி நாட்டினர்களைத் தனிமைப்படுத்தினேன். அவர்களில் பலருக்கு அங்கு தனிமைப்படுத்துதலில் உட்படுத்தும் காலக்கட்டம் முடிந்து விட்டது. அவர்களுக்கு மருத்துவப் பரி சோதனைகள் செய்யப்பட்டன. அதில் ஒருவருக்குக் கூட கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இல்லை என்றார்.

அதேநேரத்தில், மலேசியா, சிங்கப்பூர் போன்ற கொரோனா பாதித்த கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து யாரையும் நாங்கள் வரவழைக்கவில்லை என சொன்ன ஈஷா மையத்தின் அறிக்கைக்கு நேர் எதிராக ஈஷா மையத்தில் இருந்து மலேசியா நாட்டைச் சேர்ந்தவர்களை நாங்கள் விமானத்தில் ஏற்றி அனுப்பினோம் என்கிறார் கலெக்டர்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பற்றி ஒரு அறிவுரையை ஜக்கிவாசுதேவ் சொல்லியிருக்கிறார். அதில் கொரோனா வைரஸ் எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல, கொரோனா வைரஸ் பரவுவதை மதத்தோடும் சாதி யோடும் சம்மந்தப்படுத்தி பேசுவது சரியல்ல என்கிறார். டெல்லியில் நடந்த முஸ்லீம் மத அமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டவர்களால்தான் கொரோனா நோய்த் தொற்று பரவுகிறது என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அந்த மாநாட்டை தாலீபான்கள் நடத்திய தாக்குதல் என்றார்.

அதற்கு நேர் எதிராக ஜக்கி வாசுதேவ் பேசுவது முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தி, அந்த மாநாட்டை நடத்திய அமைப்பிற்கே தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதைப்போல் ஈஷா யோகா மையத்திலும், ஜக்கி வாசுதேவ் நடத்திய சிவராத்திரி விழாவிலும் கலந்து கொண்டவர்களை கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்திவிடுவார்களோ என்கிற பயம்தான் ஜக்கிவாசுதேவை கொரோனா வைரஸ் சோதனை விசயத்தில் பிஜேபிக்கு எதிராகப் பேச வைத்துள்ளது மற்றும் அவரது ஆலோசனையின் பேரில்தான் பிரபல பாஜக ஆதரவு பத்திரிகையாளரும், கொரோனா வைரஸில் ஜாதி மத பிரிவினை எதுவும் இல்லை என ஜக்கியின் கருத்தையே எதிரொலித்துள்ளார் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

- அருள்குமார், சிவா

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT