ADVERTISEMENT

சி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி

08:17 PM May 30, 2020 | rajavel




தமிழக உளவுத்துறை தலைவராக ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தியை நியமித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் உள்துறை செயலர் பிரபாகர்!

ADVERTISEMENT


உளவுத்துறை தலைவராக இருக்கும் ஐ.ஜி.சத்தியமூர்த்தி, நாளை 31-ந் தேதியோடு ஓய்வு பெறுகிறார். உளவுத்துறையின் புதிய தலைவராக ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட ஐ.ஜி.க்கள் சிலரின் பெயர்களை முதல்வர் பரிசீலித்திருக்கிறார் என நக்கீரன் இதழிலும், நக்கீரன் இணையத்தளத்திலும் பதிவு செய்திருக்கிறோம். இந்தநிலையில், உளவுத்துறையின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் ஈஸ்வரமூர்த்தி! தற்போது அவர் பதவி வகிக்கும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் பொறுப்பையும் கவனிப்பார்.

ADVERTISEMENT

கடந்த 2000-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக அந்தஸ்து பெற்றார் ஈஸ்வரமூர்த்தி. சி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஈஸ்வரமூர்த்தி, பணியில் மிக நேர்மையானவர். இயல்பாகவும் இனிமையாகவும் பழகக்கூடியவர். எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டதில்லை ஈஸ்வரமூர்த்தி. கசப்பாக இருந்தாலும் உண்மையான தகவல்களை மட்டுமே அரசுக்கு தருவதில் உறுதியாக இருப்பவர்!

கடந்த 22 ஆண்டுகால காவல்துறை பணியில் எந்த சூழலிலும் கான்ட்ராவெர்சியில் சிக்கிக் கொண்டதில்லை இவர்.

கடந்த 1998- ல் சிபிஐயில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட இவர், 2000-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அங்கீகாரம் கொடுத்தது மத்திய உள்துறை. 2000 - 2001 ஜூலை வரை எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்பி யாகவும், 2001 ஜூலை முதல் 2003 மே வரை மேற்கு மண்டலம் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக பணிபுரிந்தார் ஈஸ்வரமூர்த்தி.


இதனைத் தொடர்ந்து, 2003 மே முதல் 2003 அக்டோபர் வரை எஸ்.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக மீண்டும் நியமனம். 2003 அக்டோபர் முதல் 2004 அக்டோபர் வரை 1 வருடம் தமிழ்நாடு கமாண்டோ பிரிவு எஸ்.பி.யாகவும், 2004 அக்டோபர் முதல் 2005 செப்டம்பர் வரை சென்னை மாநகர நுண்ணறிவுப்பிரிவின் துணை ஆணையராக பணியாற்றினார். மீண்டும் எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக 2005 செப்டம்பர் முதல் 2007 நவம்பர் வரை நியமிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, சி.பி.ஐ.க்கு மீண்டும் இவரை அழைத்துக்கொண்டது மத்திய அரசு. அதன்படி, 2007-நவம்பர் முதல் 2012 ஆகஸ்ட் வரை சி.பி.ஐ. யில் எஸ்.பி. (சென்னை) யாகவும் பணியாற்றிய ஈஸ்வரமூர்த்திக்கு டி.ஐ.ஜி. பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2012 நவம்பர் முதல் 2014 ஜூன் வரை சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி.யாக தனது பணியைத் தொடர்ந்தார். அதன் பிறகு 2014-ல் ஈஸ்வரமூர்த்தியை தமிழக அரசு அழைத்துக்கொண்டது. மாநில பணிக்குத் திரும்பிய ஈஸ்வரமூர்த்தி, 2014 ஜூன் முதல் 2016 டிசம்பர் வரை மாநில உளவுத்துறையின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். 2016-ல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, 2016 டிச முதல் 2019 ஜூன் வரை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவை கவனித்தார். 2019 ஜூன் முதல் 2020 மே வரை சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பொறுப்பேற்ற ஈஸ்வர மூர்த்தி, தற்போது தமிழக அரசின் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

உளவுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈஸ்வரமூர்த்திக்கு, ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT