ADVERTISEMENT

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி நிலைக்காது; விரைவில் உடையும்: கராத்தே தியாகராஜன்

03:33 PM Sep 11, 2019 | rajavel

ADVERTISEMENT

இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாங்குநேரி தொகுதியில் நடந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT

இது குறித்து நம்மிடம் பேசிய நெல்லை மாவட்ட காங்கிரஸ்காரர்கள், ""கூட்டத்தில் பேசிய அனைத்து நிர்வாகிகளும், "இந்த தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு ஜெயித்த தொகுதி. அதனால் மீண்டும் காங்கிரசே போட்டியிட வேண்டும். அதற்கேற்ப தி.மு.க.விடம் பேசி தொகுதி யைக் கேட்டுப் பெறுங்கள்' என வலியுறுத்தினர். கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, ""உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டிருக்கிறேன். மேலிடத்தில் தெரிவிக்கப்படும். பொதுவாக காங்கிரசின் ஆணிவேர் தென் மாவட்டங்களில் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் உயிர்நாடி யும் அதுதான். அதனை நாம் வலிமைப்படுத்த வேண்டும். 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் எதிர்க் கட்சி வரிசையிலேயே இருந்து வருவதற்கு காரணம் என்ன? எப்போதாவது யோசித்திருக்கிறோமா? பிற மாவட்டங்களில் எப்படியிருந்தாலும் தென் மாவட்டங்களில் பலமாக இருக்கும் நாம் தனித்துப் போட்டியிட்டால் ஜெயிக்க முடியுமா? முடியாதா? கூட்டணி வலிமையில்லாமல் ஜெயிப்பது கஷ்டமா?'' என கேள்வி எழுப்பியவர், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார்.


ஆனால், "தனித்துப் போட்டியிட்டால் ஜெயிக்க முடியாதா?' என அவர் கேட்ட கேள்வி, நாங்குநேரியில் கூட்டணி இல்லையாங்கிற சந்தேகத்தை எங்களுக்குள் ஏற்படுத்தியது. நாங்குநேரியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க. தவிர்த்தால் கூட்டணி உடைகிறதோ இல்லையோ தி.மு.க.வை ஜெயிக்க வைக்கும் கடமையிலிருந்து காங்கிரஸ் தொண்டர்கள் விலகிக்கொள்வார்கள். அது, கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும்'' என விவரித்தனர்.

நாங்குநேரியில் கே.எஸ்.அழகிரி பேசியது போலவே சில மாதங்களுக்கு முன்பு சத்தியமூர்த்திபவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்காகப் பேசிய கராத்தே தியாகராஜன், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பேசியதாக கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும் அழகிரியின் பேச்சுக் குறித்து தற்போது டெல்லிக்கு புகார் அனுப்பியுள்ளார் அவர்.



இதுகுறித்து கராத்தே தியாகராஜனிடம் பேசியபோது, ""தேர்தல்களில் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் அரசியல் செய்தால் தான் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட முடியும். அதன் மூலம் கிடைக்கும் அதிகமான வெற்றிதான் கட்சியை வளர்க்க உதவும் என்கிற ரீதியில் பல கருத்துக்களை பேசினேனே தவிர, தி.மு.க. கூட்டணிக்கு எதிராகப் பேசவில்லை. ஆனால், எதிராக பேசிய தாக ஸ்டாலினிடம் சிலர் திரித்து கூறினர். இதனையடுத்து ஸ்டாலினிட மிருந்து வந்த உத்தரவுபடி என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், கே.எஸ்.அழகிரிதான் கூட்டணிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். சத்தியமூர்த்திபவனில் சமீபத்தில் நடந்த ஐ.டி. விங்க் கூட்டத்தில் "சட்டமன்ற தேர்தலில் 100 இடங்களில் நாம் ஜெயிக்க வேண்டும்' என்றிருக்கிறார். தி.மு.க. கூட்டணிக்குள் இருந்துகொண்டு எப்படி 100 இடங்களில் ஜெயிக்க முடியும்? இது, கூட்டணிக்கு எதிரான கருத்தில்லையா? அதேபோல தற்போது நாங்குநேரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இதற்காக, அழகிரி மீது நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்துவாரா? சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதனால் கூட்டணி நிலைக்காது; விரைவில் உடையும். அது, இடைத் தேர்தலிலிருந்தோ அல்லது உள்ளாட்சித் தேர்தலிலிருந்தோ அமலுக்கு வரும்'' என்கிறார் அதிரடியாக.


கூட்டணிச் சிக்கலுக்கு வித்திட்டிருக்கும் நாங்குநேரி ஆலோசனைக் கூட்டம் குறித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமாரிடம் நாம் பேசியபோது, ""கூட்டத்தில் பேசிய அழகிரி, "இந்த கூட்டத்துக்கும் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. காங்கிரஸ் வெற்றிப்பெற்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்புகிறீர்கள். கூட்டணியில் நாம் இருப்பதால் அது பற்றி முடிவெடுக்க முடியாது. கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றிபெற வைப்பது நமது கடமை' என்று பேசினாரே தவிர, கூட்டணிக்கு எதிராகப் பேசவில்லை. நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது உள்பட கூட்டத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்து அதனை எழுதி வைத்திருந்தோம். கூட்டம் துவங்குவதற்கு முன்பு இதுகுறித்து கே.எஸ்.அழகிரி எங்களிடம் விவாதித்தபோது, "காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த தீர்மானம் வேண்டாம்' எனச் சொல்ல, அதனை நீக்கிவிட்டோம். அதனால், அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், விவாதிப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த பேப்பரை யாரோ ரிலீஸ் செய்துவிட்டனர். அதனால் வந்த குழப்பம் இது'' ‘’ என்கிறார்.

இந்த விவகாரத்தில் அறிவாலயத் தின் கருத்தறிய தி.மு.க.வின் செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.யிடம் பேசியபோது, ""காங்கிரஸ் ஜெயித்த தொகுதி என்பதால் நாங்குநேரியில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதை தவறு என சொல்ல முடியாது. விருப்பங்கிறது அவர்களின் உரிமை சார்ந்த விசயம். அதேசமயம், நாங்குநேரி யாருக்கு என்பதெல்லாம் இப்போது விவாதிக்க வேண்டியதில்லை. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் அப்போது இரு கட்சிகளின் தலைமையும் கலந்தாலோசித்து தீர்வு காண்பார்கள். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி உறுதியாகவே இருக்கிறது'' என்கிறார் இயல்பாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT