Skip to main content

கே.எஸ். அழகிரிபோல், ஸ்டாலினும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்... திருச்சி வேலுச்சாமி பேட்டி

Published on 01/07/2019 | Edited on 02/07/2019

 

கூட்டணியை உடைக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. நான் சாதாரண தொண்டன். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என நான் மட்டுமல்ல, கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் பேசினார்கள். நான் பேசியது தவறு என்றால் அந்தக் கூட்டத்திலேயே கே.எஸ்.அழகிரி கண்டிக்காதது ஏன்? ரஜினிக்கு எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியில் உள்ள பலரும் நட்பாக இருக்கிறார்கள். நான் மட்டுமா அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். எத்தனை காலம்தான் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது என கே.என்.நேரு பொதுமேடையில் பேசியது குறித்து கருத்து கேட்டார்கள். அதற்கு பதில் அளித்தேன். அதற்கு பிறகு கே.என்.நேருவும் விளக்கம் அளித்துவிட்டார். நானும் விளக்கம் அளித்துவிட்டேன். என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் என்னை இடைநீக்கம் செய்துள்ளனர் என்கிறார் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன். 


 

 

karate thiagarajan



கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் ஏன்? உள்ளிட்ட நக்கீரன் இணையதளத்தன் பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி பதில்:

 

தன் மீது அனுதாபம் வருவதற்காக, கட்சித் தொண்டர்களிடம் தான் நியாயமாகத்தான் பேசுவேன் என்று காட்டுவதற்காக இதுபோன்று சொல்லி வருகிறார். தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் எல்லோரையும் குறை சொல்லி வருகிறார். 

 

ஒவ்வொரு கட்சியிலும் அக்கட்சியில் இருப்பவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்காக அவர்கள் மீது எந்தக் கட்சியாவது நடவடிக்கை எடுக்குமா? 

 

karate thiagarajan


 

இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பில் என்ன காரணம் என்று சொல்லப்படவில்லை. அந்த கடிதத்தில், 'frequent anti party activities' தொடர்ந்து கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

அந்தக் கூட்டத்தில் பேசியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடவில்லை. எல்லாவற்றையும் அறிக்கையில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. குழப்ப முயற்சிக்கிறார். அது நடக்காது.
 

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல்காந்தி வந்ததை இந்தியாவே கவனித்தது. அந்த மேடையில் ஸ்டாலின், வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை திமுக முன்மொழிகிறது என்றார். உடனே அடுத்து பேசும் ராகுல்காந்தி, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக ஸ்டாலினை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டு நாங்களும் கடுமையாக உழைப்போம் என்று சொல்கிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது என்று இருவரின் பேச்சால் தெளிவாகிவிட்டது. 
 

இதற்கு பிறகு கராத்தே தியாகராஜன் ஒரு இடத்தில் பேசும்போது, போட்டி என்பது ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும்தான். ரஜினிகாந்த் முதல்வராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தான் ரஜினிகாந்த் நண்பராக பேசுகிறேன் என்கிறார். இது கட்சியினுடைய விரோத நடவடிக்கை இல்லாமல் வேறென்ன?. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிராக, ரஜினிக்கு ஆதரவாக எந்த அடிப்படையில் பேட்டி கொடுத்தார்? தொடர்ந்து இதுபோன்று அவர் செயல்படுகிறார். 

 

trichy velusamy


 

மாவட்டத் தலைவர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் முக்கியமான ஒன்று. எதற்கெடுத்தாலும் இவர் ஏன் பதில் சொல்லுகிறார். இந்த உரிமையை இவருக்கு யார் கொடுத்தார்கள். கட்சியின் கொள்கை சார்ந்த விஷயங்களில் அந்தக் கட்சியின் தலைவர் பதில் சொல்வார் அல்லது அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் பதில் சொல்லுவார்கள். 
 

உள்ளாட்சித் தேர்தல் வருமா? வராதா என்பது தெரியாது. அடுத்து திமுக சந்திக்க இருப்பது சட்டமன்றத் தேர்தல். அந்த நோக்கத்தை குழப்புவது போல், அந்த நோக்கத்தை கெடுப்பதுபோல் தொடர்ந்து கராத்தே தியாகராஜனின் கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற கருத்துக்களை காங்கிரஸ் கட்சியில் பேசியிருந்தாலும் தவறு. திமுகவில் பேசியிருந்தாலும் தவறு. 


 

 

திருச்சியில் உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரியில் திமுக போட்டியிட்டால் வெற்றி பெறும் என்று பேசியிருக்கிறார். உங்கள் கட்சி அனைத்து இடத்திலும் நிற்பது என்பதோ, கூட்டணியோடு நிற்பது என்பதோ, கூட்டணிக்கு இடங்களை குறைத்து கொடுப்பது உள்ளிட்ட எல்லா உரிமைகளும் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதனை சொல்வதற்ககான இடம் கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற மேடையா? உங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசியிருக்கலாம் என்று நான் அப்போதே கருத்து தெரிவித்திருந்தேன். 
 

கே.என். நேரு பேசியிருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். கே.என்.நேரு இருபது வருடத்திற்கு மேலாக மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார். மந்திரியாக இருந்திருக்கிறார். அவர் என்றாவது இதுபோல் பேசியிருக்கிறாரா? இதுதானே முதல் தடவை. 

 

mkstalin - ks alagiri


 

இந்தப் பிரச்சனை வந்தவுடன், இந்த பிரச்சனை மேலும் பரவக்கூடாது என்பதற்காக கே.எஸ். அழகிரி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் செய்திருந்தால் இதுபோன்ற விவாதம் வந்திருக்காது. காங்கிரஸ் - திமுக கூட்டணி நலன் கருதி, கே.எஸ். அழகிரி எப்படி இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாரோ, அதைப்போல் ஸ்டாலினும் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. தமிழ்நாட்டின் எதிர்கால நலன் கருதி இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்கிற பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது, திமுகவுக்கும் இருக்கிறது இந்தக் கூட்டணியில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளுக்கும் இருக்கிறது. எல்லோருடைய நன்மைக்காக இதனை சொல்லுகிறேன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்