ADVERTISEMENT

பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டு விழா நினைவு தீபஸ்தம்ப கல்வெட்டு கண்டுபிடிப்பு

11:13 AM Aug 31, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூகரெங்கபுரம் எனும் ஊரில் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அவரின் மனைவி மேரி அவர்களின் பட்டாபிஷேக நினைவு தீபஸ்தம்ப கல்வெட்டுகள் 2 கண்டுபிடிக்கப்பட்டதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் பேராசிரியர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.

அது குறித்து அவர் கூறியதாவது: சமூகரெங்கபுரம் ஒரு பழமையான ஊர் ஆகும். இவ்வூரின் மேற்குப் பகுதியில் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்புப் பகுதியில் நான்கு தூண்கள் அமைந்து காணப்படுகின்றன. அந்த முகப்புத் தூண்களில் தெற்கு பகுதியிலிருந்து 2வது தூணில் ஒரு பெண் அகல் விளக்கு ஏந்தியபடி வடக்கு பார்த்த வண்ணம் நிற்கும் சிலை காணப்படுகிறது. அச்சிலையின் கீழ் ‘மூலை வீடு சுப்பா ரெட்டியார் ஸ்திரி சின்னம்மாள்’ என்ற குறிப்பு காணப்படுகிறது. மூன்றாவது தூணில் முறுக்கு மீசையுடன் கூடிய ஒரு ஆண் கை கூப்பி வணங்கும் நிலையில் ஒரு சிலை அமைந்து காணப்படுகிறது. அதன் கீழ் குறிப்பு எதுவும் காணப்படவில்லை. ஒரு வேளை அச்சிலை சுப்பா ரெட்டியாராக இருக்கலாம். கோயில் முகப்பின் வெளிப் பகுதி தூண்களில் 5 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதுபோல கோயில் முகப்பின் உள்பகுதியில் இரண்டு தூண்கள் அமைந்துள்ளன. அதில் 2 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

கோயில் முகப்புத் தூண் அமைப்பு உபயச் செய்தி:

கோயிலின் வெளி மற்றும் உள் முகப்புப் பகுதி தூண் கல்வெட்டுகள் 7-ம் கி.பி. 1911 ஆம் ஆண்டு ஆனி மாதம் எழுதப்பட்டுள்ளன. அதில் திருவனந்தபுரம் ஸ்ரீ கிருஷ்ணசாமி ரெட்டியார். மூலை வீடு சின்னம்மாள், ரெங்கநாத சுவாமி நெய் கம்பெனியார், அன்ன விஜயரெங்க ரெட்டியார் மனைவி ஆவுடையம்மாள் ஆகியோர் கோயில் முகப்பு பகுதியை கல் தூண்கள் மற்றும் சிலைகளுடன் கட்டிக் கொடுத்த செய்திகள் கூறப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் முடிசூட்டு விழா செய்தி:

இக்கோயிலின் முன் பகுதியில் ஒரு தீபஸ்தம்பம் காணப்படுகிறது. அதில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அக்கல்வெட்டு கி.பி. 1911 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 12 ஆம் தியதி எழுதப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் சக்கரவர்த்தியாகிய ஐந்தாம் ஜார்ஜ் அவர்களும் அவரின் மனைவி மேரி அவர்களும் அரசுப் பொறுப்பேற்று முடி சூட்டிக் கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை நினைவுகூரும் வகையில் கே.ரெங்கஸ்வாமி ரெட்டியார் கோயிலின் முன் தீபஸ்தம்பம் ஒன்று அமைத்ததாகவும் கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது.

இவ்வூரின் கிழக்குப் பகுதியில் 'கோட்டை' என்ற பகுதி காணப்படுகிறது. அப்பகுதியில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லால் கட்டப்பட்ட பல வீடுகள் சிதைந்த நிலைகளில் காணப்படுகின்றன. முன்பு அப்பகுதியில் கோட்டை என்று மக்கள் கூறும் வகையில் பெரிய மதில் சுவர் எழுப்பி அதற்குள் பண்ணையார் எனும் ரெட்டியார் குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது. பண்ணையாரின் கோட்டை பகுதிக்குள் வேறு குழுவினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் கோட்டை படி வாசல் பகுதி என்று ஒரு பகுதி இருந்துள்ளது. அப்பகுதியில் சிறு மண்டபம் கல் கட்டடமாக இருந்துள்ளது. அங்கு தான் அமர்ந்து பண்ணையார் ஊர் பஞ்சாயத்துகளைத் தீர்த்து வைப்பாராம். அக் கட்டடம் இன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. முன்பு பஞ்சாயத்து நடைபெறும் அந்த கட்டடத்திற்கு முன் பகுதியில் ஒரு பெரிய கல்லால் செய்யப்பட்ட தீபஸ்தம்பம் அமைந்து காணப்படுகிறது. அதிலும் ஒரு கல்வெட்டு செய்தி காணப்படுகிறது. அதில் முதல் பகுதி ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. பின்பு அதே செய்தி தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.

அதில் ஐந்தாம் ஜார்ஜ் மகாராஜாவிற்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டதை நினைவுகூரும் வகையில் கி.பி. 1911-ம் வருடம் கார்த்திகை மாதம் 26 - ஆம் தியதி தீபஸ்தம்பம் பண்ணையாரின் கோட்டை மதில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட குறிப்பு காணப்படுகிறது. மேலும் இந்த தீபஸ்தம்பத்தை அப்பொழுது கிராம முனிசிபுவாக இருந்த வெங்கடாசல ரெட்டியார் (கோட்டை பண்ணையார்) நிறுவியதாகவும் கல்வெட்டு செய்தி கூறுகிறது. பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் அரசராகப் பதவி ஏற்றதை சமூகரெங்கபுரம் பகுதியில் வசித்த ரெட்டியார்கள் ஆதரித்துப் போற்றியதை 2 கல்வெட்டு செய்திகளும் தெளிவுபடுத்துகின்றன. இங்கு இருந்த வேறு ஒரு கல்வெட்டு மண்ணிற்குள் புதைந்து கிடப்பதாக அருகில் வசிக்கும் மக்கள் குறிப்பிடுகின்றனர். அதைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்தால் புதிய வரலாற்றுச் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT