இப்படி தமிழகம் கொதித்திருக்கும்பொழுது, கிரிக்கெட் பார்ப்பது நியாயமா என்று மைதானத்துக்குள்ளே சென்ற சில ரசிகர்களைக் கேட்டோம்.
சுரேஷ் என்னும் கல்லூரி மாணவர், "நான் ஒன்னு கேக்குறேன். நீங்க எல்லாம் தோனிக்கா ஓட்டு போட்டீங்க? ஜெயலலிதாவுக்கு தான போட்டீங்க? எடப்பாடி பழனிச்சாமி தான சி.எம்? அவரு வீட்டு முன்னாடிதான போராடணும்? காவிரி நீர் தேவைதான். நாங்களும் தமிழர்கள் தான். ஆனா, எம்.எல்.ஏ, எம்.பி வீட்டு முன்னாடி போய் போராடாம கிரிக்கெட் ஸ்டேடியத்துல எதுக்கு போராடுறீங்க? சில அரசியல்வாதிகள் விளம்பரத்துக்காக செய்ற வேலை இது" என்றார்.
விவேக் என்ற ஐ.டி ஊழியர், "நான் இன்னைக்கு கிரிக்கெட் பாத்துட்டு நாளைக்கு காவிரிக்காக போராடுவேன். இது மூணு மணி நேர விளையாட்டு. இதை பாக்குறனால தான் காவிரி வரலையா? எத்தனையோ வருஷமா இந்தப் பிரச்சனை இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் கிரிக்கெட்டை நிறுத்தி இதை சரி செய்ய முடியுமா?" என்று கேட்டார்.
ராமநாதன் என்ற முதியவரும் மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்து குதூகலமாக உள்ளே சென்று கொண்டிருந்த போது நிறுத்திக் கேட்டோம். "இவ்வளவு பிரச்சனை நடக்கிறது. காவிரிக்காக கிரிக்கெட்டை தவிர்க்க முடியாதா?" என்றோம். "தம்பீ, நான் 1974ல இருந்து கிரிக்கெட் பாக்குறேன். இந்தியா வேர்ல்டு கப் வாங்குனப்பவெல்லாம் கொண்டாடினேன். இந்த அரசியல்வாதிங்க உருவாக்குன பிரச்சனை காவிரி பிரச்சனை. அவுங்களுக்காக என் விருப்பத்தை நான் விட முடியாது. நான் இன்னைக்கு கிரிக்கெட் பாக்காட்டி இவுங்க காவிரி பிரச்சனையை தீர்த்துருவங்களா? வேலைக்காகாத அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துட்டு கிரிக்கெட்டை எதிர்த்து என்ன பயன்?" என்று அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஐ.பி.எல்லை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அவரை ஆவேசமாக சூழ்ந்தனர். "உனக்கும் சேர்த்துதானய்யா நாங்க போராடுறோம்? தண்ணீ இல்லைனா எதைக் குடிப்ப?" என்று கேட்டுக்கொண்டே அவரை சூழ்ந்தனர்.
போராடியவர்கள் கேட்பது நியாயம் தான். போராட்ட மனநிலையை நீர்த்துப் போகவும் திசை திருப்பவும், சினிமாவும் கிரிக்கெட்டும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவது உண்டு. கையாலாகாத அரசுகளை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை. வாழ்வாதாரப் பிரச்சனைகள் உச்சத்தில் இருக்கும்பொழுது கேளிக்கையை தள்ளி வைக்கலாம் தான். உலகம் கவனிக்கும் ஒரு போட்டியை புறக்கணிப்பதன் மூலம் நம் எதிர்ப்பை ஆழமாகப் பதிவு செய்திருக்கலாம். இன்னும் சற்று நேரத்தில் விடை தெரியும்.