Skip to main content

சென்னையிடம் அதிகமாக இருப்பது மும்பையிடம் இல்லை! அது என்ன? - CSK vs MI ஐபிஎல் அப்டேட்ஸ்

Published on 07/04/2018 | Edited on 07/04/2018

ஐபிஎல் போட்டிகளில் இரண்டு வருடம் கழித்து மீண்டும் சிஎஸ்கே அணி தோனி தலைமையில் ஆட இருக்கிறது. சென்னை அணி சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் கூட தோனி கண்கலங்கினார். "இரண்டு வருடங்கள் கழித்து சேருகிறோம், இது ஒரு இனம்புரியாத ஓர் உணர்வு", என்றார். மேலும் சென்னை அணியும் மும்பை அணியும் நாளை முதல் போட்டியை விளையாட இருக்கின்றனர். இது மும்பை வான்கடே  மைதானத்தில் நடக்கிறது. சென்னை, ஐபிஎல் போட்டியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மும்பை அணியுடன் பைனல் மேட்ச்சில் தோற்று விடைபெற்றது. அதற்கு பின்னர் நாளை நடக்கும் போட்டியில்தான் சென்னை அணி களம் இறங்க இருக்கிறது, அதுவும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸுடன். 

 

csk vs mi



சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் போட்டி என்றாலே அதனை சூப்பர் இந்தியன் டெர்பி அல்லது எல் கிளாசிக்கோ ஆப் ஐபிஎல் என்பார்கள். அதாவது எளிய முறையில் சொல்லவேண்டுமானால் இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் போன்றது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் இருபத்தி நான்கு போட்டிகள் விளையாடியிருக்கின்றனர். அதில் மும்பை இந்தியன்ஸ் அணி பதிமூன்று வெற்றி அடைந்திருக்கிறது. சென்னை அணியும் முமபையும் அணியும் மூன்று முறை ஐபிஎல் பைனலில் சந்தித்துள்ளனர் அதில் மும்பை இரண்டு முறை வென்றிருக்கிறது. சென்னை ஒரு முறை. ஆனால், சென்னை நான்கு முறை 'ரன்னர் அப்' இடத்தை பெற்றிருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்குள் அதிக ரன்கள் பெற்ற வீரராக சுரேஷ் ரெய்னா இருக்கிறார். அதிக விக்கெட்டுகள் பெற்றவர்களில் லசித் மலிங்கா இருக்கிறார். மலிங்கா இந்த முறை ஏலத்தில் எடுக்கப்படவே இல்லை என்பது மும்பை அணிக்கு ஒரு குறைபாடே. இது போன்று பல விஷயங்கள் இந்த இரு அணிகளுக்குள் இருக்கிறது. அதனால், இந்த இரண்டு அணியின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிவோம் வாருங்கள்.                  

சென்னை அணி ஒரு பார்வை :
 

csk champions



பலம் 

அணியின் அனுபவ வீரர்கள்

சென்னை அணியின் முதல் பலமாக இருப்பது அணியின் மையமாக இருக்கும் ஐந்து வீரர்கள் தான். தோனி, ரெய்னா, ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ் மற்றும் பிராவோ ஆகியவர்களை ஏலத்தில் வாங்கிய பின்னர் சிறு சிறு மாற்றங்களை மட்டும்தான் அணியில் மேற்கொள்வர். அதேபோன்று மும்பை, கொல்கத்தா போன்ற அணிகளும் அணியின் மையமாக ஒரு நான்கு வீரர்களை வைத்திருப்பார்கள். மாற்றங்கள் அடிக்கடி எதுவும் செய்யாமல், நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்களை வைத்துக்கொண்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து களத்தில் இறங்குவதுதான் சென்னை அணியின் முதல் வெற்றி பார்முலா.

பேட்டிங் 

சென்னை அணிக்கு அளவுக்கு அதிகமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். இதனால், அடுத்தடுத்த ஆட்டங்களில் வீரர்கள் தங்கள் திறமையை சூடுபறக்க காட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது. சிஎஸ்கே அணியில் மொத்தம் ஆயிரம் ரன்களுக்கு மேல் ஐபிஎல் போட்டிகளில் எடுத்தவர்களாக எட்டு பேர் இருக்கின்றனர். அவர்களை வரிசை படுத்திபார்த்தால் ரெய்னா(4540), தோனி(3560), வாட்சன்(2622), விஜய்(2511), ராயுடு(2416) ரன்களை எடுத்துள்ளனர். இவர்களை போன்று அடுத்து ஆடுவதற்கு தகுதியான வீரர்களாக கேதார் ஜாதவ் மற்றும் சாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்களும் லிஸ்டில் இருக்கின்றனர். இவர்களின் அதிரடியும் இந்த வருட ஐபிஎல்லில் இருக்கும் என்று சொல்கின்றனர்.

சுழற்பந்து வீச்சாளர்கள்

ஐபிஎல் போட்டிகள் ஒருசில வருடங்களாக சுழற்பந்து வீரர்களின் கோட்டையாகவே இருக்கிறது. ஒருவேளை இந்திய பிட்ச்சுகள் சுழற்பந்துக்கானதாக இருப்பதாலோ என்னவோ சிஎஸ்கேவில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம். அஸ்வின் இருந்த இடத்தை யார் நிரப்புவது என்று இருக்கையில் மூன்றாவது தரவரிசையில் இருக்கும் ஹர்பஜனை ஏலத்தில் வாங்கினர். அவரும் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர்தான். இவர்களை அடுத்து நல்ல லெக் சுழற்பந்து வீச்சளர்களும் (leg break spin) இடம் பிடித்துள்ளனர். கரன் ஷர்மா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர்கள் தான். ஜடேஜா என்ற சுழற்பந்து மற்றும் பேட்டிங் நாயகன் இருப்பது எதிரணிக்கு மோசமான ஒரு நெருக்கடியை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பலவீனம் 

ஐபிஎல் ஆடாத வீரர்கள் 

சென்னையின் ஒரு யுக்தியாக இந்த அனுபவமற்ற வீரர்களை பயன்படுத்துவது இருந்தாலும், இந்த முறை இதனை எல்லோரும் பலவீனமாகவே கருதுகின்றனர். இருபத்தி நான்கு பேர் கொண்ட அணியாக சென்னை இருந்தாலும் அதில் ஒன்பது வீரர்கள் ஒருமுறை கூட ஐபிஎல் ஆடியது இல்லை. அதேபோன்று பதினோரு வீரர்கள் முப்பது வயதுக்கும் மேல் இருக்கின்றனர். இப்படி இருப்பதனால் அணிக்குள் ஒரு புரிதல் ஏற்பட கால தாமதம் எடுக்கும். அதை கேப்டனாக இருக்கும் தோனிதான் சரி செய்ய வேண்டும் இல்லையெனில் ஒருமிதமாக அணியால் ஒன்று சேர்ந்து ஆடுவது கடினமாக இருக்கும் என்கின்றனர்.

குறைவான வேகபந்து வீச்சாளர்கள் 

என்னதான் அணி சுழற்பந்தில் பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது என்றாலும் இரண்டே இரண்டு இன்டர்நேஷனல் தரம் வாய்ந்த வீரர்களான லுங்கி ங்கிடி மற்றும் மார்க் வுட் ஆகியோரைத்தான் வேகப்பந்துக்கு வைத்திருக்கிறது. அவர்களும் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது இல்லை இதுவே முதல் முறை. சர்துல் தாகூர் மற்றும் பிராவோ தான் ஐபிஎல் போட்டிகளில்  இதுவரை விளையாடி இருக்கிறார்கள். இவர்களே எவ்வாறு சமாளிக்க முடியும் . கொஞ்சம் கடினமானது தான். 
 

மும்பை அணியின் அலசல் 

 

mumbai indians



பலம் 

அணியின் அனுபவ வீரர்கள்  

சென்னை அணியில் எப்படி ஒரு நான்கு அனுபவ வீரர்களை வைத்திருக்கிறார்களோ, அதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி பல வருடங்களாக ரோஹித் ஷர்மா, பும்ரா, பாண்டியா சகோதரர்கள், பொல்லார்ட், திவாரி போன்ற வீரர்களையே நிலையாக வைத்திருக்கின்றனர். இதில் ஒரு காலத்தில் சச்சினும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களை வைத்துதான் பத்து வருட ஐபிஎல்லில் மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்றிருக்கின்றனர். அதனால் இது ஒரு வழக்கமான ஒரு அணியாகவும் இது அவர்களின் பலமாகவும் இருந்து வருகிறது.

பேட்டிங் 

இதுவும் சென்னை அணியை போலவே இவர்களுக்கு ஒரு பலமாக இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவில் ஆரம்பித்து 6 வது டவுன் இறங்கும் பொல்லார்ட் வரை அதிரடி ஆட்டக்காரர்கள் தான். சில சமயங்களில் இது நிலை குழைந்தாள் மட்டுமே அணிக்கு ஒரு பிரச்சனை ஏற்படும் நிலை மும்மை அணிக்கு உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் 

மும்பை அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ரா மும்பை  அணிக்கு பெரிய பலம். அவர் விக்கெட் எடுக்கிறாரோ இல்லையோ அவர் போடும் ஆறு பந்துகளிலும் ரன்கள் கொடுக்க மாட்டார். பவுன்சர் பந்துகள் போடும் ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருவரான குமின்ஸ் இருக்கிறார். இந்திய மைதானம் பவுன்சர் பிட்ச் இல்லை என்றாலும், வேகம் தேவையான ஒன்றே. வங்கத்தின் ஒரு உருப்படியான வீரர் என்றால் அது முஸ்தபிசுர் ரஹ்மான் தான். இடது கை வீச்சாளர் வேகம் குறைவாக இருந்தாலும் பேட்ஸ்மேன்களை மிரட்டிவிடுவார். இது போன்ற ஒரு பந்து வீச்சாளர் சென்னைக்கு இல்லாதது, ஒரு பெரிய பலவீனமே.

பலவீனம்           

சுத்தமாக சுழற்பந்து வீச்சாளர்களே இல்லை?  

இந்திய மைதான பிட்ச்களுக்கு தேவை சுழற்பந்து வீச்சாளர்கள்தான். ஆனால், மும்பை அணிக்கு என்று இருந்த ஹர்பஜனை ஏலத்தில் எடுக்காமல் சென்னைக்கு தாரைவார்த்துவிட்டனர். தற்போது அந்த அணிக்கு என்று சர்வதேச சுழற்பந்து பவுலர்கள் இல்லை. பார்ட்டைம் சுழற்பந்து வீச்சாளர்களான ரோஹித், டுமினி மற்றும் குர்னால் பாண்டியா தான் இருக்கின்றனர். இங்கு இது தேவையாக இருக்க, சென்னையிடமோ அதிகமாக  இருக்கிறது.

விக்கெட் கீப்பர் 

மும்பை அணிக்கு என்று இதுவரை சிறப்பான ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இல்லை. அனுபவம் குறைவாக இருக்கும் வீரர்களான இஷான் கிஷான் மற்றும் ஆதித்யா டாரே இடம் பெற்றிருக்கின்றனர். இவர்கள் இருவரும் இந்திய சர்வேதச அணிகளில் ஆடியது இல்லை, உள்ளூர் கிரிக்கெட்டில் நன்கு விளையாடினாலும். ஐபிஎல் போட்டிகளில் அவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. 

எந்த அணி சிறந்தது என்பதை இன்னும் சற்று நேரத்தில் களத்தில் பார்ப்போம். 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.