Skip to main content

நிழல் தலைவரா நட்டா..? சர்ச்சைகளும், சவால்களும்..!

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

நிழல் தலைவரா நட்டா..? பாஜக தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா பொறுப்பேற்ற பின்னர், நேற்றிலிருந்து அவரைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளில் மிகப்பிரதானமானது. இந்த கேள்வி எழுவதற்கான முக்கிய காரணம், அரசியலில் அவர் கடந்து வந்த பாதையும், பாஜக முன்னாள் தலைவர் அமித்ஷாவின் ஆளுமையுமே எனலாம். ஐந்தாண்டுகாலம் அமித்ஷா அமர்ந்திருந்த ஒரு மிகப்பெரிய பதவியில், மோடிக்கு நெருக்கமானவரும், அமித்ஷாவின் நன்னம்பிக்கைக்கு உரியவருமான நட்டா தற்போது அமர்த்தப்பட்டுள்ளார். பெரிதாக ஊடக வெளிச்சம் படாத ஒரு அரசியல்வாதி நாட்டின் மிகப்பெரிய கட்சிக்கான தலைவராக வளர்ந்தது எப்படி..? தலைவராக அவர் சந்திக்கவிருக்கும் சவால்கள் என்னென்ன..? 

 

bjp workers expectations from their president j.p.nadda

 

 

59 வயதான ஜெ.பி.நட்டா 1960 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தின் பாட்னாவில் பிறந்தார். தனது பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி படிப்பை பீஹாரில் முடித்த நட்டா, சட்டம் பயில்வதற்காக ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு சென்றார். பாட்னாவில் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தன்னை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைத்துக்கொண்டு அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்தார். அப்போது நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய இவர், 1977 மாணவர் சங்க தேர்தலில் வென்று மாணவர் சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல ஹிமாச்சலில் சட்டம் பயின்றபோது, பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். 1984 ஆம் ஆண்டு அந்த அமைப்பு சார்பில் மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்பான எஸ்.எஃப்.ஐ வேட்பாளரை தோற்கடித்தார். பிறகு 1993 வரை ஏ.பி.வி.பி மற்றும் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் தலைமைப் பதவிகளை வகித்தார்.

இப்படி மாணவப் பருவத்திலிருந்து படிப்படியாக பாஜகவின் ஒவ்வொரு படிநிலையிலும் அழுத்தமான தடத்தைப் பதித்த நட்டா, 1993 ஆம் ஆண்டு ஹிமாச்சல் சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றிபெற்று சட்டசபையிலும் அடியெடுத்து வைத்தார். 1994 ஆம் ஆண்டு பாஜக சட்டப்பேரவை தலைவராக பொறுப்பேற்ற அவர், 1998 ஆம் ஆண்டிலும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஹிமாச்சல் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஹிமாச்சலின் பிலாஸ்பூர் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்ற நட்டா, மூன்றாவது முறையாக 2003 ஆம் ஆண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை அவருக்கும், அவரது கட்சிக்கும் தோல்வியே மிஞ்சியது. இந்த தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அம்மாநிலத்தில் ஆட்சியமைத்தது. 

 

sd

 

தேர்தலில் தோல்வியை சந்தித்து ஐந்து ஆண்டுகள் சட்டசபைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டாலும் பாஜக உயர்மட்டத்தில் அவருக்கான செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே தான் இருந்தது. நிதின் கட்கரி போன்ற பல முக்கிய பாஜக தலைவர்களின் நட்பு அவருக்கு கிடைத்தது. 2003 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை சந்தித்த அதே பிலாஸ்பூர் தொகுதியில் மீண்டும் 2007 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றியை தனதாக்கினார். அவரை போலவே அவர் சார்ந்திருந்த பாஜகவும் இத்தேர்தலில் வெற்றிபெற்று ஹிமாச்சலில் ஆட்சியமைத்தது. ஹிமாச்சலின் பதினொன்றாம் சட்டசபையான இதில் நட்டா வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 2010 ஆம் ஆண்டு, பாஜக முதல்வர் பிரேம் குமார் துமலுக்கு இணையான செல்வாக்கையும், வளர்ச்சியையும் பெற்று பாஜகவில் அசைக்கமுடியாத சக்தியாக உறுவெடுத்திருந்தார் நட்டா. இப்படி ஒரு சூழலில் தான், முதல்வருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக நட்டா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதுவே அவரின் அரசியல் பாதையை டெல்லியை நோக்கித் திருப்பியது. 

ஹிமாச்சலில் இருந்த நட்டாவை டெல்லியை நோக்கி அழைத்து சென்றார் நிதின் கட்கரி. 2012 ஆம் ஆண்டு பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின் 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியமைத்ததற்கு பின் மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டபோது, இவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2019 வரை ஐந்து ஆண்டுகாலம் இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தாலும், மோடியின் மீது விழுந்த ஊடக வெளிச்சம், இவர் மீது விழவில்லை என்றே கூறலாம். பாஜகவை பொறுத்தவரையில் ஒரு நல்ல தொண்டராக, தலைவராக, அமைச்சராக இருந்து பாஜக மூத்த தலைவர்களிடம் இவர் நன்மதிப்பை பெற்றாலும், பொதுவெளியில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமலேயே இருந்துள்ளார் நட்டா. 2010 ஆம் ஆண்டு ஹிமாச்சல் முதல்வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவரது மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது எய்ம்ஸ் மருத்துவமனைகளில் நடைபெற்றதாக கூறப்படும் 7000 கோடி ரூபாய் ஊழலை மூடிமறைக்க முயற்சித்ததாகவும் இவர் மேல் சர்ச்சைகள் எழுந்தன. 

 

ss

 

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 7000 கோடி ரூபாய் ஊழலுக்கு காரணமாக இருந்த ஒரு அதிகாரியை காப்பாற்றவும், அந்த வழக்கை முடித்துவைக்கவும் நட்டா முயற்சித்ததாக கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அந்த அதிகாரி ஹிமாச்சலில் நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையின் செயலாளராக இருந்தவர் என்பதும், நட்டாவின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தனுக்கு இந்த வழக்கை முடிப்பது தொடர்பாக இவர் பல முறை கடிதம் எழுதியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதச் சூழலிலேயே மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டு நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் எனவும் கூறப்பட்டது. 

இப்படி பல வெற்றிகளையும், சர்ச்சைகளையும் கடந்து இவ்வளவு தூரம் பயணித்திருக்கும் நட்டா, இனி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்களும் ஏராளம். ஐந்து ஆண்டுகாலம் அமித்ஷா அமர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்திய ஒரு பதவியில், நட்டா புதுமையாக என்ன செய்யப்போகிறார் என்பதே பலரின் கேள்வி.  அமித்ஷாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கும், ஆக்ரோஷ பேச்சுக்கும் எதிர்மறையான அமைதியான குணாதிசயங்களை கொண்ட நட்டா, செயல் தலைவராக இருந்தாலும் அமித்ஷாவின் நிழலாகவே செயல்பட்டு வந்திருக்கிறார் என்பது பலரின் கருத்து. 

 

sss

 

தொடர்ந்து அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களில் பெற்ற தோல்விகளால் துவண்டிருக்கும் பாஜக, அடுத்த இரண்டு ஆண்டில் மட்டும் டெல்லி, பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு என பல முக்கிய மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதில் பாஜகவை வெற்றிபெற வைக்க நட்டா என்ன செய்யப்போகிறார்..? மோடி-அமித்ஷாவின் ஆதிக்கத்தை மீறி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரையிலான தனது பிணைப்பை எவ்வாறு உறுதி செய்யப்போகிறார்..? அல்லது செயல் தலைவராக பணியாற்றியது போல அமித்ஷா மற்றும் மோடியின் நிழல் தலைவராகவே செயல்பட போகிறாரா..? உள்ளிட்ட பல கேள்விகள் நட்டாவை நோக்கி வைக்கப்பட்டிருந்தாலும், இதற்கான பதிலுக்காக சிறிது காலம் காத்திருப்பதும் தேவையாகிறது. 

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.