Skip to main content

பிரபாகரன், வைகோ... வவுனியா காட்டில் நடந்த சுவாரசிய சந்திப்பு

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

இப்போது விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை யார் சந்தித்தது, எவ்வளவு நேரம், எப்போது, என்ன பேசினார்கள், என்ன சாப்பிட்டார்கள் என்று சர்ச்சைகளும், விவாதங்களும் நீண்டுகொண்டே இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் வைகோ பிரபாகரனை சந்தித்தது எப்போது, என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.


 

VAIKO


 

1989-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்திசாயும் நேரமோ அல்லது அதிகாலை நேரமோ சரியாகத் தெரியவில்லை. உடைந்துபோன படகில் ஒரு டசன் ஆசாமிகள் இருந்தார்கள். எல்லோரும் இறுக்கமான முகத்தோடு எதுவும் பேசிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள். கடல் காற்று முகத்தில் அறையும் வேகத்தில் வீசிக்கொண்டிருந்தது. கழுத்தில் இருக்கும் துண்டை சரிபார்த்த படியே வை.கோபால்சாமி படகில் அமர்ந்திருக்கிறார். அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். கடற்புலிகள் கையில் ஆயுதங்களோடு சுற்றி வளைத்திருப்பதை பார்க்கும்போது அவரைக் கடத்திக் கொண்டுபோவது போலத் தோன்றும். உற்றுப்பார்க்கும்போதுதான் வை.கோபால்சாமியின் பதற்றமில்லாத முகம் தெரியும்.

 


வை.கோபால்சாமி அவர்களோடு ஏதோ பேசுகிறார், படகு நகர ஆரம்பிக்கிறது. வவுனியாவின் எல்லைக்கு வந்த பின்னர் கடற்புலிகள் விடைபெற்றுக் கொள்கிறார்கள். வை.கோபால் சாமியை இன்னொரு புலிகள்படை உள்ளே அழைத்து செல்கிறது. பச்சைக்கலர் யூனிபார்ம் அவர்களை காட்டுப் புலிகள் என்பதைக்காட்டுகிறது. அடுத்த காட்சி விரிகிறது. ஒரு கட்டிடமோ அல்லது கூடாரமோ தெளிவாக இல்லை. உள்ளே புலிகள் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்தி நின்று கொண்டிருக்கிறார்கள். உள்ளே நுழைந்த வை.கோபால்சாமியை பிரபாகரன் எதிர்கொண்டு வரவேற்கிறார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொள்கிறார்கள்.

 


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளை வை.கோபால்சாமி பாராட்டுகிறார். சிங்கள அரசின் இனவெறியைக் கண்டிப்பதாக சொல்கிறார். விடுதலைப் புலிகள் போராட்டம் வெற்றி பெறும் என்றும் அதற்காக வாழ்த்துச் செய்தியை தமிழ்நாட்டிலிருந்து சுமந்து வந்திருப்பதாகச் சொல்கிறார். அடுத்தமுறை வவுனியாவுக்கு வரும்போது தமிழ் ஈழம் கிடைத்திருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார். பிரபாகரன் மற்றும் அவருடன் இருப்பவர்களுடன் கைகுலுக்கி விடைபெறுகிறார்.

 

VAIKO


 

வை.கோபால்சாமியின் பயணம் பற்றிய எடிட் செய்யப்பட்ட வீடியோ டேப் காட்சிகள்தான் இவை.
வை.கோபால்சாமி திரும்பி வந்தபிறகு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. அலுவலகங்களில் வீடியோ டேப் ஒலிபரப்பானது, அதற்குப் பின்னர்தான் விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்தது. வை.கோபால்சாமியின் வவுனியா பயணம் விடுதலைப்புலிகளுக்கு உற்சாகமான விஷயமாக அமைந்தது. புலிகள் தங்களுடைய பிரத்தியேக வானொலியில் இந்தப் பயணம் பற்றி சிறப்பு செய்திகளில் சொன்னார்கள். பிரபாகரனுடனான சந்திப்பு பற்றியும் பேசப்பட்ட விஷயங்களும் விவரமாக ஒலிபரப்பப்பட்டன.

 


தோணியில் ஏறியது முதல் பிரபாகரனை சந்தித்துவிட்டு விடைபெறுவது வரையிலான அனைத்து முக்கியமான சம்பவங்களும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ டேப், தமிழ்நாட்டில் புயலைக் கிளப்பியது. 1989 பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து புயலைக் கிளம்பியவர் 1989 மார்ச் 3-ஆம் தேதி படகின் மூலமாக திரும்பி வந்தார். கிட்டத்தட்ட 24 நாட்கள் வை.கோபால்சாமி வவுனியா காட்டில் தங்கியிருந்தார். இது தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியது. ஒரு ராஜ்யசபா எம்.பி. யாருக்கும் தெரியாமல் ரகசியப் பயணம் போனது ஏன்? எப்படி போக முடிந்தது? பயணத்திற்கு ஏற்பாடு செய்தது யார்? திடீரென்று பிரபாகரனை சந்திக்க நினைத்தது ஏன்? அப்படி என்ன அவசரம்? பிரபாகரனிடம் வை.கோபால்சாமி பேசியது என்ன? இப்படி ஏகப்பட்ட கேள்விக் கணைகள் நாலா பக்கமுமிருந்து ஒரே நேரத்தில் தொடுக்கப்பட்டன.


 

vaiko


இந்த கேள்விகளுக்கெல்லாம் ஓரளவுக்கு விடை கொடுத்தது ஒரு கடிதம்:
“"எனது உயிரினும் மேலான சக்தியாய் இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காமல் என்னை இயக்கி வரும் தலைவர் அண்ணன் முதல்வர் கலைஞர் அவர்களின் பாதங்களில் இந்த மடலை சமர்ப்பிக்கிறேன். கடுகளவுகூட வருத்தமும், கோபமும் என்மீது எந்தக்கட்டத்திலும் ஏற்படா வண்ணம் பயம் கலந்து பக்தியுடன் தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பணியாற்றி வரும் நான் பல இரவிலும், பகலிலும் ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவின் விளைவாக, நான் எழுதிய இந்தக் கடிதம் தங்கள் திருக்கரங்களில் கிடைக்கும் வேளையில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்குமானால் ஈழத்திருநாட்டில் வவுனியா காட்டுப்பகுதிக்குள் தம்பி பிரபாகரனைக் காணச் சென்று கொண்டிருப்பேன்.

 


ஈழத்தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பாதுகாப்பை நிரந்தரமாக உத்தரவாதமாக்கக்கூடிய வழிமுறைகளைக்காண பிரபாகரனுடன் பல கோணங்களிலும் இப்பிரச்சனையை விவாதித்து கருத்துக்களைப் பரிமாறி அதன்மூலம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகின்ற மனப்பான்மையை உருவாக்கிடவும் உண்மைநிலையை நேரில் கண்டறியவும் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

 


பிப்ரவரி-5 என்று தேதியிட்ட கடிதம் பிப்ரவரி இறுதியில் கருணாநிதியின் கைக்கு வந்துசேர்ந்தது.
உடனடியாக தி.மு.க.வின் செயற்குழு கூடியது. கட்சித் தலைமையிடம் அனுமதிபெறாமல் தன்னிச்சையாக இலங்கைக்கு வை.கோபால்சாமி பயணம் செய்தது பற்றி பலரும் பேசினார்கள். அவரைக் கட்சியை விட்டு நீக்கவேண்டும் என்று ஒரு குழுவினரும் நீக்கக் கூடாது என்று மற்றொரு குழுவினரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

 


கோபால்சாமியின் இலங்கைப் பயணம் பற்றி கருணாநிதி, ராஜீவ் காந்தியிடம்  விளக்கினார். தனிப்பட்ட சந்திப்பே தவிர கட்சி சார்பாக அனுப்பப்படவில்லை என்று விளக்கமளித்தார். அதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என்று ராஜீவ் சொல்லிவிட்டார். இதன்பிறகு விடுதலைப்புலிகள் தி.மு.க. தலைமை மௌனம் சாதிக்க ஆரம்பித்தது. ஆனால் வை.கோபால் சாமியோ தி.மு.க. கூட்டங்களில் புலிகளை ஆதரித்து வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருந்தார். தமிழ் ஈழம் பற்றிய சிந்தனையில் இருந்த இளைஞர் கூட்டம் வை.கோபால்சாமியின் பின்னால் வரத்தொடங்கியது'' என்கிறது ம.தி.மு.க. நூல்.
 

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.