ADVERTISEMENT

"இரண்டாம் இடத்தில் இருந்த பேராசிரியர் மூன்றாம் இடத்தில் இருந்த எம்ஜிஆர் உடன் இணைந்து.." - சுவாரசியம் பகிர்ந்த அருணன்!

05:59 PM Mar 18, 2020 | suthakar@nakkh…


திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பேராசிரியர் அருணன் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து அதிரடியான கருத்துக்களை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " இன்றைக்கு ஒரு கட்சி தலைவர் சொல்லியிருக்கிறார், எங்கள் கட்சி இருக்கும் வரை ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வர் ஆக முடியாது என்று தெரிவி்த்திருக்கிறார். அப்படி என்றால் அவர்களுடைய கட்சியை அழித்துவிட்டு ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். அதுதான் தற்போதைய காலத்தின் தேவையாக இருக்கின்றது. பேராசியரை நான் நினைக்கும் போதெல்லாம் மலையாள நாவலாசிரியர் எழுதிய இரண்டாம் இடம் என்ற நாவல் என் நினைவுக்கு வரும். அந்த நாவல் மகாபாரதத்தை பற்றியது. இலக்கிய மொழியில் சொன்னால் அது மகாபாரதத்தின் மறுவாசிப்பு.

ADVERTISEMENT


ADVERTISEMENT


அந்த நாவலில் மூன்று கதாபாத்திரங்கள் முக்கிய இடத்தை வகிப்பார்கள். இரண்டாம் இடத்தில் பீமன் இருப்பார். அப்போது தமிழ்நாட்டிலும் மூன்று கதாபாத்திரங்கள் முக்கிய இடம் பெற்றிருந்தார்கள். முதலிடத்தில் கலைஞர் இருந்தார். இரண்டாம் இடத்தில் பேராசிரியர் இருந்தார், மூன்றாம் இடத்தில் எம்ஜிஆர் இருந்தார். ஆனால், இரண்டாம் இடத்தில் இருந்த பேராசிரியர் மூன்றாம் இடத்தில் இருந்த எம்ஜிஆர் உடன் இணைந்து முதலிடத்தில் இருந்த கலைஞருக்கு ஒருபோதும் தொந்தரவு கொடுத்ததில்லை. கொடுக்கவும் நினைத்திருக்கமாட்டார் என்பதே என்னுடைய கணிப்பு. அதனால் தான் நம்முடைய நெஞ்சிலே முதலாம் இடத்தில் இருக்கிறார். பேராசிரியர் நினைத்திருப்பார் தன்னைவிட வயதில் குறைந்தவர் கலைஞர், பேராசிரியர் நினைத்திருப்பார் தன்னைவிட படிப்பில் குறைந்தவர் கலைஞர் என்று, ஆனால் எனக்கும் அவர்தான் தலைவர் என்று முடிவு செய்துள்ளார் என்றால் மனதில் இருக்கும் அகத்தை எல்லாம் தூக்கி எறிந்துள்ளார். இன்றைய இளைஞர்கள் பேராசிரியரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கிறது. அதனால் தான் இரண்டாம் இடம் என்ற அந்த நாவல் எனக்கு நினைவுக்கு வருகின்றது என்று கூறினேன்.

கலைஞரை பற்றி பேராசிரியர் ஒருமுறை இப்படி சொல்லியிருக்கிறார். கலைஞர் எனக்கு ஒரு ஆயுதம் என்று, ஆனால் நான் கலைஞருக்கு ஆயுதம் அல்ல என்று தெரிவித்திருக்கிறார். இன்றைக்கு சில பேர் திராவிடம் என்ற வார்த்தையை சொன்னாலே சிலர் பொங்குகிறார்கள். கீழடி அகழ்வாய்வை வைத்து சிந்து நதியோடு தொடர்புப்படுத்தி திராவிட நாகரிகம் என்ற ஒரு பதிவை நான் முகப்புத்தகத்தில் பதிவு செய்தேன். உடனடியாக ஒரு கோஷ்டி எப்படி திராவிட நாகரிகம் என்று சொல்லலாம் என்று என்னை தாக்கி பேச ஆரம்பித்து விட்டார்கள். தமிழனுக்கும் திராவிடனுக்கு இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றது. இதற்கு நான் பெரிய ஆய்வு செய்ய தேவையில்லை. பேராசிரியர் நம்மோடு இருக்கிறார். பேராசிரியரிடம் தமிழர், திராவிடர் என்ற பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அவர் மிக அழகாக சொல்லியுள்ளார். "தமிழர் என்றால் தமிழ் உணர்வை குறிக்கிறது, திராவிடர் என்றால் சொரணையை குறிக்கின்றது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

சொரணை என்பது சுயமரியாதையை குறிக்கும். தனக்கு மேலாகவும், தனக்கு கீழாகவும் யாரும் இல்லை என்பதை அந்த சுயமரியாதைத்தான் நமக்கு கற்றுக்கொடுக்கின்றது. ஏன் திராவிடர் என்ற சொல்மீது அந்த கோஷ்டிக்கு இவ்வளவு வன்மம் என்று தெரியவில்லை. அதனால் தான் நம்முடைய இளைஞர்கள் பெரியாரின் படைப்புக்களை, அண்ணாவின் படைப்புக்களை, கலைஞரின் படைப்புக்களை, பேராசிரியரின் படைப்புக்களை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிலபேர் சர்வ சாதாரணமாக பேசிக்கொள்கிறார்கள். திராவிடத்துக்கு மாற்று என்று, மாற்று இருக்கட்டும், திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்றால் மொழி உணர்வு, திராவிடம் என்றால் சுயமரியாதை, திராவிடம் என்றால் விழிப்புணர்வு. இவைகள் அனைத்தின் கலவை தான் திராவிடம். இதை எல்லாம் வேண்டாம் என்று மாற்று குறித்து பேசுபவரகள் கூறுகிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை இதையும் தாண்டிய அம்சம் இருக்கிறது என்று வேண்டுமானால் தைரியம் இருந்தால் சொல்லுங்கள்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT