Skip to main content

பா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

சூடுபிடித்துள்ளது வேலூர் எம்.பி. தேர்தல் களம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதிகார அமைப்புகளின் பறக்கும்படை, வருமான வரித்துறை, மத்திய- மாநில உளவுத்துறை, சி.பி.ஐ. புலனாய்வுக்குழு போன்றவை களமிறக்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க எனச் சொல்லி சுமார் 58 குழுக்களை உருவாக்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். அதோடு பறக்கும்படை கண்காணிப்புக் குழு என மொத்தம் 108 குழுக்கள் உள்ளன. இவையெல்லாம் வாக்குப்பதிவு நெருங்க, நெருங்க தி.மு.க.வை மட்டுமே குறிவைக்கப் போகிறது என்கிற தகவலால் தி.மு.க. தலைமை, கட்சி பட்டாளத்தை வேலூரில் முகாமிட வைத்துள்ளது. "ஆளுந்தரப்பினர் அதிகார அத்துமீறல் நடத்துவார்கள்' என தி.மு.க. தலைவர் அறிக்கைவிட்டு எச்சரித்துள்ளார்.

 

dmk



கடந்த 12-ந் தேதி வேலூர் அடுத்த புதுவசூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் ஏழுமலை என்பவர் வீட்டில் வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் திடீரென சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தி.மு.க. வேட்பாளர் பணம் என தகவல் பரவியது. ""தி.மு.க. பிரமுகர்கள் வச்சிருக்கற பணமெல்லாம், வேட்பாளர் பணமாகிடுமா? ஏழுமலை காங்கிரசில் இருந்து தி.மு.க.வுக்கு வந்தார். வேலூரில் பிர பலமான ரியல் எஸ்டேட் அதிபர். எழுதப் படிக்க தெரியாத அவர், ஒரு சொத்தை கைமாற்றியுள் ளார். அதற்கான தொகை வந்துள்ளது. அதோடு, வருமானவரித்துறை, தேர்தல் களத்தில் பண நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என விளம்பரம் செய்துள்ளது. அதை பார்த்துவிட்டு யாரோ தகவல் சொல்ல... அதன்படி ரெய்டு நடத்தி பணத்தை பறிமுதல் செய்துள்ளது. புடிக்கற பணமெல்லாம் எங்க பணம்ன்னு சொல்றது வேடிக்கையா இருக்கு'' என்கிறார்கள் தி.மு.க. தரப்பினர். ஆனாலும் வேட்டை தொடர்கிறது.
 

admk



இதனை எதிர்கொள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு முன்னாள் அமைச்சர் என பொறுப்புகளை தந்துள்ளது தி.மு.க. தலைமை. பொன்முடி, எ.வ.வேலு, முத்து சாமி ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் வந்து முதல்கட்ட ஆலோசனைகளை முடித்துவிட்டு சென்றுள்ளனர். வழக்கறிஞர் அணியும் களமிறக் கப்பட்டுள்ளது. அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத் துறை செயலாளர் சண்முகசுந்த ரம் தலைமையில் ஜூலை 14-ந் தேதி வேலூரில் ஒருங்கிணைந்த வழக்கறிஞர் அணி கூட்டத்தில், ""நம் கட்சி நிர்வாகிகளை குறி வைத்து காவல்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை என பலவற்றை களத்தில் இறக்கி பா.ஜ.க. உத்தரவில் அ.தி. மு.க. அரசாங்கம் நம்மை மட்டும் குறிவைத்துள்ளது. தேர்தல் களத் தில் பணியாற்றும் கட்சி நிர்வாகி களை பாதுகாப்பது நமது கடமை, அப்போதுதான் தேர்தல் வேலை தடையில்லாமல் நடக்கும், அதனால் வழக்கறிஞர் அணி கவனமாக இருக்கவேண் டும்'' என அறிவுறுத்தியுள்ளனர்.


படுவேகமாக களத்தில் தி.மு.க. இறங்கியுள்ள நிலையில், சில புலம்பல்களும் தி.மு.க.வில் இருந்து கேட்கின்றன. ""அ.தி.மு.க. அணியின் ஏ.சி.எஸ். டீம், வேலூர் மாவட்டத்தில் இயங்கும் சமூக வலைத்தள குழுமங்கள், மீம்ஸ் கிரியேட்டர் குழுக்களை வளைத்து லட்சங்களில் கவனித்து தி.மு.க. வையும், அதன் வேட்பாளரை யும் டேமேஜ் செய்யச் சொல்லியும், ஏ.சி.சண்முகத்தை புரமோட் செய்யச் சொல்லியுள்ளது. தி.மு.க. வில் வலிமையான இணையதள அணியிருந்தும் எங்களை பயன் படுத்திக்கொள்ள மறுக்கிறது'' என்கிறார்கள்.

ஏ.சி.சண்முகம், 6 சட்ட மன்ற தொகுதியிலும் ஒரு ரவுண்ட் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை முடித்துவிட்டு, பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளார். வேலூர் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14,26,991. இதில் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா, வேலூர் தொகுதிகளில் உள்ள இஸ்லாமிய வாக்குகள் சுமார் 3 லட்சம். வேலூர், குடியாத்தம், வாணியம் பாடி பகுதிகளில் பரவலாக வாழும் முதலியார் சமூக வாக்கு கள் மட்டும் 2 லட்சம், அணைக் கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி பகுதிகளில் உள்ள வன்னியர் வாக்குகள் 3 லட்சம், குடியாத்தம், ஆம்பூர், கே.வி.குப் பம் பகுதிகளில் வாழும் நாயுடு வாக்குகள் 1.2 லட்சம், தலித் சமுதாய வாக்குகள் 3.2 லட்சம். மீதி பிற சமுதாய வாக்குகள்.

இதில் தனது முதலியார் சமூக வாக்குகள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள ஏ.சி.சண் முகம், 3 லட்சம் வன்னியர் வாக்குகளைக் கவர வியூகம் வகுத் துள்ளார். தி.மு.க.வுக்கு விழும் நாயுடு வாக்குகளை நம் பக்கம் திருப்ப என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தியுள்ளது ஏ.சி.சண்முகம் டீம். பா.ம.க.வுக்கு அதிக முக்கியத்துவம் தர்றார் எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி வெளிப்படும் வேளையில், பா.ம.க. தரப்போ "எங்களை முன்புபோல கண்டு கொள்ளவில்லை' என்கிறது. அதுபோல "எங்களையும்தான் மதிக்கிறதில்லை' என்கிற குற்றச்சாட்டு பா.ஜ.க. தரப்பில் இருந்தும் எழுப்பப்படுகிறது. தொகுதியில் 3 லட்சம் இஸ்லாமிய வாக்குகள் உள்ளன. 

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி என்பதால் அ.தி.மு.க.வில் உள்ள இஸ்லாமியர்களே அதிருப்தி யில் உள்ளனர். அதனால் பா.ஜ.க.வை ஒதுக்கிவைக் கிறோம் என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது ஏ.சி.சண்முகம் டீம். அதற்கு பா.ஜ.க.வும் ஒத்துழைக்கிறது. உண்மையில் ஏ.சி.சண்முகம் வெற்றிக்காக அ.தி.மு.க.வைவிட பா.ஜ.க. தீவிரமாக உழைக்கிறது'' என்கிறார்கள் உள்விபரம் அறிந்தவர்கள். பணத்தை வாரித்தந்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார் ஏ.சி.சண்முகம். பணத்தை கட்சியினரின் கண்களுக்கு காட்ட மறுக்கும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் அப்பா துரைமுருகன், சில அமைப்புகளை தங்கள் பக்கம் இழுக்க சாமியார்களை பயன்படுத்தி வருகிறார்.

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.