ADVERTISEMENT

இருவருக்கும் ஒரே நேரத்தில் உடல்நலக் குறைவு என்பதை யாராவது நம்புவார்களா..? - ஆளூர் ஷாநவாஸ் கேள்வி!

11:33 AM Jun 25, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

ADVERTISEMENT

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ், நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

தூத்துக்குடியில் இரண்டு வணிகர்கள் சிறையில் இருக்கும் போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்கள். அவர்களின் போஸ்மார்டம் ரிப்போர்ட்டுக்காக அனைவரும் காத்து இருக்கிறார்கள். ஊரடங்கை மீறி கடையை நீண்ட நேரம் திறந்து வைத்திருந்ததால் அவர்களைக் கைது செய்தததாக போலீஸ் கூறுகிறது. அவர்கள் குடும்பத்தின் தரப்பில் காவலர்கள் அவர்களை முரட்டுத்தனமாக அடித்தார்கள், அதை நேரில் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். அரசாங்கமும் இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறை அதிகாரிகள் சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். சிலரை பணியிடை மாற்றம் செய்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மிகவும் கண்டிக்கதக்க அரச பயங்கரவாத சம்பவம் அரங்கேறியுள்ளது. உடல்நலக்குறைவால் அவர்கள் மறைந்துள்ளார்கள் என்று போலிஸ் கூறுகிறது. இருவரும் சில மணி நேரங்களில் மரணிக்கிறார்கள் என்றால் சிறைக்குச் செல்லும் முன் மருத்துவப் பரிதோதனைக்கு அவர்களை உட்படுத்தித் தானே அவர்களைச் சிறையில் அடைப்பார்கள். அப்புறம் எப்படி அவர்கள் கூறும் திடீர் உடல்நலக் குறைவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். உடல்நலக்குறைவு இருவருக்கும் ஒரே நேரத்தில் வந்துவிடுமா?

உடல்நலக்குறைவு இருந்திருந்தால் அவர்கள் சிறைக்கு அனுப்பபட்டிருக்க மாட்டார்கள். இது மிகவும் அடிப்படையான ஒன்று. அவ்வாறு சிறை செல்வதற்கு முன்பு அவர்களைச் சோதனைச் செய்யும் போது அவர்களுக்கு உடல்நல பாதிப்பு இருந்திருந்தால் அவர்களை ஏன் சிறைக்குக் கொண்டு செல்லப் போகிறார்கள், மருத்துவமனைக்குத் தானே கொண்டு சென்றிருப்பார்கள். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உடல்நிலை சீராக இருக்கிறது என்று உறுதி செய்திருந்தால்தான் அவர்களைச் சிறைக்கு அனுப்பி இருப்பார்கள். அந்த அரசு மருத்துவர் பிழை செய்துள்ளார் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அவர்கள் இருவருக்குமே இதயம் சம்பந்தமான பாதிப்புகள் இருப்பதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்களே?

இவ்வளவு பலவீனமாக உள்ளவர்களைக் காவல்துறையினர் மோசமாக நடத்தியதன் விளைவுதானே இந்த மரணம். அவர்கள் அம்மா என்ன சொல்கிறார்கள். மூன்று வேட்டி நனைகின்ற அளவுக்கு அவர்களுக்கு இரத்தப் போக்கு இருந்தது என்று தெரிவித்துள்ளார்கள். இதய பிரச்சனை இருந்தவர்களுக்கு வேட்டி நனைகின்ற அளவுக்கு எப்படி இரத்தப்போக்கு ஏற்பட்டது. அதற்குக் காவல்துறை தரப்பில் இதுவரை பதில் இருக்கிறதா என்றால் இல்லை. இந்த மாதிரி வேறு எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? தமிழக காவல்துறையின் ஈரல் அழுகி போய் இருக்கின்றது. தமிழக அரசு ஒரு பயங்கரவாத அரசாக இருக்கின்றது என்பதற்கு இதுவே ஒரு சாட்சியாக இருக்கின்றது.

லாக் அப் மரணங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சொல்கிறது. இந்தியாவிலேயே லாக் அப் மரணங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் ஆவணக் காப்பகம் கூறியிருக்கின்றது. ஏன் இந்த ஒழுங்கீனம், ஏன் என்றால் அந்தப் படுகொலைகளை நிகழ்த்துவதே காவல்துறையினர்கள் தானே, அப்பாவி மக்களுக்குக் காவல்துறையின் ட்ரீட்மெண்ட் எப்படி இருக்கும் என்பதை காலங்காலமாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இது ஒன்றும் நமக்கு புதிய காட்சி இல்லை. நாம் தொடர்ந்து பார்த்துப் பழகிய காட்சிதான் இது. இதற்கு நிச்சயம் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT