ADVERTISEMENT

அதிமுகவை அலறவிட்ட அப்பாவு...அதிர்ச்சியில் அதிமுக...ஆட்சியை இழக்குமா?

03:55 PM Oct 05, 2019 | Anonymous (not verified)

2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்க கட்டத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமான இழுபறி நிலை நீடித்த சமயத்திலேயே பிரதமர் மோடி ஆளுங்கட்சி அ.தி.மு.க.வுக்கு காலை 11 மணிக்கே வாழ்த்துச் செய்தி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பல பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டது. அ.தி.மு.க.வின் முன்னணி நிலவரம் அதிகரித்து, ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மைக்குரிய தொகுதிகளுடன் வென்றது.

ADVERTISEMENT



குறிப்பாக ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரைக்கும் இடையில் மிகப்பெரிய இழுபறி நீடித்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளுக்கும் அப்பாவுக்கும் வாக்குவாதம் நடைபெறும் அளவுக்கு சென்றது. வாக்கு எண்ணிக்கையில் 19, 20, 21 ஆவது சுற்றுகளில் பதிவான வாக்குகள் மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளின் கணக்கிற்கு தேர்தல் அதிகாரியின் கையெழுத்தே இல்லை. இந்தச் சுற்றுகளில் தனக்குச் சேரவேண்டிய வாக்குகளில் மோசடி நடைபெற்றதாக அப்பாவு கூறினார். அப்பாவுவின் கோரிக்கையை அவர்கள் கேட்கவே மறுத்தார்கள். 1508 தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் 300 வாக்குகளை நிராகரித்தார்கள். அதுதவிர, 203 வாக்குகளை எண்ணத் தகுதியற்றவை என்று பிரிக்கவே மறுத்தார்கள். இந்நிலையில்தான் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

ADVERTISEMENT



நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் அங்கீகார கையெழுத்துடன் இருந்ததால் 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கையெழுத்து செல்லும் என்று ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், தேர்தல் அதிகாரிகளுடன் நியாயத்துக்காக போராடிய அப்பாவு துணை ராணுவ வீரர்களால் வாக்கு எண்ணும் இடத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.



தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். ஆண்டுக்கணக்கில் நீடித்த அந்த வழக்கு விசாரணை முடிவில், ராதாபுரம் வாக்கு எண்ணிக்கையில் எண்ணாமல் தவிர்த்த 203 வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களும் மறுபடியும் எண்ணப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை சார்பில் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவசரஅவசரமாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, அக்டோபர் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 11.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ள அறையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. உயர்நீதி மன்ற பதிவாளர் ஜெனரலால் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட, ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய்சரவணன் தலைமையில், 26 அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த அப்பாவு நம்மிடம், "தி.மு.க.வின் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. கடைசி 3 சுற்று வாக்குகளில் முடிவில் 1500 வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்தேன். அதுபோல எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் தி.மு.க.வுக்கு 863 வாக்குகளும், அ.தி.மு.க.வுக்கு 200 வாக்குகளும் மட்டுமே கிடைத்தது. செல்லாது என்று எண்ண மறுத்த 203 தபால் வாக்குகளிலும் இதே அடிப்படையில்தான் வாக்குகள் பதிவாகி இருக்கும் என்பதால்தான் அதை எண்ண மறுத்தார்கள். எனவே, 49 வாக்குகள் வித்தியாசம் என்பதைத் தாண்டி, கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்


மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்தில் அ.தி.மு.க. இன்பதுரை, தி.மு.க. அப்பாவு ஆகியோருடன் அவர்களுக்கான வழக்கறிஞரையும் அனுமதித்தது உயர்நீதிமன்றம். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தபோது, உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்ததை அறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திர பட் அடங்கிய பெஞ்ச், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டது. இன்பதுரை தரப்பில் இடைக்கால நிம்மதி ஏற்பட்டாலும், அப்பாவு தரப்பில், கடைசியாக சிரிக்கப் போவது நாங்கள்தான் என்ற நம்பிக்கை வெளிப்பட்டது. யாருக்கு லீட் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியாத நிலையில், இந்த மறுவாக்கு எண்ணிக்கை முதல்வர் எடப்பாடி தொடங்கி, அ.தி.மு.க.வின் பல மட்டங்களிலும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

2016ல் மத்திய பா.ஜ.க. அரசின் சிக்னலில் தான் அ.தி.மு.க. லீட் காட்டியது என்ற விமர்சனம் அப்போதே கிளம்பிய நிலையில், மறுவாக்கு எண்ணிக்கையைத் தவிர்க்கவும், முடிவுகளை வெளியிடாதபடி இருக்கவும் அ.தி.மு.க. மேற்கொண்ட சட்டரீதியான நகர்வுகள் அதன் அச்சத்தை வெளிப்படுத்தியது. தசரா விடுமுறைக்குப் பிறகு ராதாபுரம் தேர்தல் குறித்த பரபரப்பு மீண்டும் அதிகரிக்கும். அதுவரை, ஆளுந்தரப்பில் திக்..திக்.. மனநிலைதான்.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT