Skip to main content

"யாருக்கும் சீட் கேட்கமாட்டேன்"...எடப்பாடிக்கு கௌரவப் பிரச்சனை...களத்தில் இறங்கும் அமைச்சர்கள்!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தலைமையில் நடந்த நாங்குநேரி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில், எனது உறவினர்கள் யாருக்கும் சீட் கேட்கமாட்டேன் என அகில இந்தியத் தலைமையிடம் சொல்லிவிட்டேன் என்றார் தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.வும் கன்னியாகுமரியின் இப்போதைய எம்.பி.யுமான வசந்தகுமார். ஆனால் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு சீட் வாங்குவதில் மும்முரம் காட்டினார்.

 

congress



இவரின் விருப்பத்தின் பேரிலேயே விருப்பமனு கொடுத்தார் குமரி அனந்தன். சிலபல காரணங்களால் நிற்க மறுத்தார் குமரி அனந்தன். அடுத்ததாக, தனது சகலையான ஆலங்குளம் காமராஜை சீட் சீனுக்கு கொண்டுவர, வசந்தகுமார் முயன்றும் முடியவில்லை. கடைசியாக தனது சம்பந்தி ரூபி மனோகரனை களத்தில் இறக்கிவிட்டார். எத்தனை "சி' என்றாலும் தயார் என்ற முடிவுடன் களத்தில் குதித்திருக்கிறார் ரூபி மனோகரன்.


ரூபி மனோகரனை காங்கிரஸ் மேலிடம் ஓ.கே. சொல்வதற்கு முன்னால் மற்றொரு ரகசிய டீல் ஒன்றும் நடந்திருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.வான ஊர்வசி செல்வராஜின் மகன் அமிர்தராஜ், மாஜி எம்.பி.தனுஷ்கோடி ஆதித்தன் மூலமாக சீட்டுக்கு காய் நகர்த்தி, 25 "சி' வரை செலவழிக்கத் தயார் என கே.எஸ்.அழகிரிக்கு அட்வான்ஸ் சிக்னல் போட்டிருக்கிறார். ஆனால் அமிர்தராஜின் உறவினர்களோ ஒன்றரை வருஷ எம்.எல்.ஏ. பதவிக்கு இம்புட்டு செலவழிப்பது வேஸ்ட் என்றதும், சிக்னல் இடம் மாறி ரூபி மனோகரன் பக்கம் வந்துள்ளது.

தேர்தல் பணிகளை காங்கிரஸ் ஆரம்பிக்கும் முன்பே தி.மு.க. ஜரூராக ஆரம்பித்துவிட்டது. கட்சியின் து.பொ.செ. ஐ.பெரியசாமியின் தலைமையில், கடந்த 29-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் நெல்லை மாவட்ட தி.மு.க. பெருந்தலைகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. "நாங்குநேரியில் நிற்பது காங்கிரஸ் வேட்பாளர் தானேன்னு அலட்சியமா இருந்துடாதீங்க. நம்ம தளபதியே நிற்பதா நினைச்சு வேலை பாருங்க. 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியப் பிடிப்பதற்கு இந்த இடைத்தேர்தல்தான் அச்சாரம்''’என உற்சாகமூட்டியிருக்கிறார் ஐ.பி. தேர்தல் பணிக்குழுவில் கருப்பசாமி பாண்டியன் பெயர் விடுபட்டிருப்பதை சிலர் சுட்டிக்காட்டியதும் "கானா'வின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஆளும் கட்சி தரப்பிலோ நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நாராயணன் களம் இறங்கியிருக்கிறார். பொருளாதார ரீதியில் நாராயணன் சுமார் ரகம் என்றாலும், இது எடப்பாடிக்கு கௌரவப் பிரச்சனை என்பதால் அமைச்சர்கள் பட்டாளத்தின் பணப்பாய்ச்சல் தாராளமாக இருக்கும். இதை சமாளிப்பதில்தான் காங்கிரஸ் ரூபி மனோகரனின் சாமர்த்தியம் இருக்கிறது.
 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.