தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு, ஜீவா, மாவீரன் கிட்டு, ராட்சசன், எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்கள் பலரின் பாராட்டுகளை பெற்று, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் இதன் மூலம் தனது படம் குறித்த அறிவிப்புகள், ரசிகர்களுடன் உரையாடுவது போன்று விஷயங்களை செய்து வந்தார்.
இந்நிலையில் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கடைசி பதிவில், 'ஓய்வு எடுப்பது வாழ்க்கைக்கு முக்கியம். நான் சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்ச காலத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.